Last Updated : 15 Mar, 2015 10:15 AM

 

Published : 15 Mar 2015 10:15 AM
Last Updated : 15 Mar 2015 10:15 AM

உளவு பார்க்கச் செல்லவில்லை: ராகுல் காந்தி வீட்டுக்கு செல்வது வழக்கமான வேலைதான் - டெல்லி போலீஸ் ஆணையர் விளக்கம்

ராகுல் காந்தி வீட்டுக்கு போலீஸார் உளவு பார்க்கச் சென்று வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை, டெல்லி போலீஸ் ஆணையர் பி.எஸ்.பாஸி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து பாஸி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராகுல் காந்தி போன்ற முக்கியப் பிரமுகர்களின் அலுவலகங் களுக்குப் போலீஸார் சென்று வருவது வழக்கமான நடைமுறை தான். இதில் தீய நோக்கம் எதுவும் இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது போலீஸார் ஆய்வு செய்வது வழக்கம். பாதுகாப்பு வழங்கப்படும் முக்கியப் பிரமுகர்களின் இடங்களுக்கு சென்று சில தகவல்களை திரட்டுவதும் வழக்கமானதுதான். குற்றங்கள் நடப்பதைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் இதுபோன்ற நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபடுகின்றனர்.

கடந்த மார்ச் 12-ம் தேதி ராகுல் காந்தி வீட்டுக்கு எங்கள் அதிகாரி ராமேஸ்வர் சென்றுள்ளார். முக்கியப் பிரமுகர்களை களப் பணியாளர்கள் சந்திக்க முடிவதில்லை. அப்போது அவர்களுடைய அலுவலகத்துக்கு சென்று தேவையான தகவல்களை பெற்று வருவார்கள். அதுபோல்தான் ராகுல் காந்தியைப் பற்றியும் விசாரித்து வந்துள்ளனர்.

அன்றைய தினமே தயாள் என்ற அதிகாரி, எம்.பி. கிருஷண் பால் குஜ்ஜார், நரேஷ் அகர்வால், வீரப்ப மொய்லி, சந்திரசேகர ராவ் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

அந்தந்த போலீஸ் எல்லைக்குள் வசிக்கும் முக்கியப் பிரமுகர்களின் விவரங்களை அவ்வப்போது சேகரித்து வைக்க போலீஸாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் சோனியா காந்தி, அமித் ஷா உட்பட பலருடைய தகவல்களையும் சேகரித்து வைத்துள்ளனர். இந்தத் தகவல்கள் பல வழிகளில் போலீஸாருக்கு உதவுகின்றன. குறிப்பாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளுக்கு முன்பு முற்றுகை போராட்டம் நடந்தால், போலீஸாரால் அந்த இடத்துக்கு உடனடியாக சென்று பாதுகாப்பு வழங்க முடியும்.

ராகுல் அலுவலகத்துக்குச் சென்று விசாரணை நடத்தும்படி பிரதமர் அலுவலகமோ அல்லது உள்துறை அமைச்சகமோ போலீ ஸாருக்கு உத்தரவிடவில்லை. போலீஸாருக்கு எந்த அரசியல் நெருக்கடியும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x