Published : 25 Feb 2017 08:02 PM
Last Updated : 25 Feb 2017 08:02 PM

உ.பி.க்கு தீங்கிழைக்க விரும்பும் மோடி, அமித் ஷா: மாயாவதி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் உத்தரப் பிரதேசத்துக்கு தீங்கிழைக்க விரும்புகின்றனர் என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் டியோரியா நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியும் அவரது சீடர் அமித் ஷாவும் உத்தரப் பிரதேசத்துக்கு தீங்கு விளைவிக்க விரும்புகின்றனர். அவர்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாபைவிட அமித் ஷா மிகப் பெரிய தீவிரவாதி. குஜராத்தில் நடந்தது என்ன என்பது மக்களுக்குத் தெரியும். எனவே அடுத்தடுத்த வாக்குப்பதிவுகளில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு முஸ்லிம்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் பாஜகவை தோற்கடிக்க முடியும்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக வாக்குறுதிகளை அள்ளி வீசியது. ஆனால் இதுவரை ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை. அதேபோல தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாக்குறுதிகளை வாரியிறைத்து வருகிறது. அதை மக்கள் நம்ப வேண்டாம். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ் திட்டத்தின்படி இடஒதுக்கீடு படிப்படியாக ஒழிக்கப்படும்.

ஆளும் சமாஜ்வாதி கட்சி காட்டாட்சியை நடத்தி வருகிறது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது. பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x