Published : 28 Sep 2015 06:10 PM
Last Updated : 28 Sep 2015 06:10 PM

இந்தியாவில் புதிதாக 9 காட்டு வகைக் காளான்கள் கண்டுபிடிப்பு

கிழக்கு இமயமலைப்பகுதியில் குறிப்பாக சிறிய மலை மாநிலமான சிக்கிம் தாவரவியலாளர்களுக்கும், காளானியல் அறிஞர்களுக்கும் மற்றும் இயற்கைவியலாளர்களுக்கும் ஒரு புதையலாக அமைந்துவருகிறது.

2015ல் மட்டும் 9 விதமான (பூஞ்சைகளின் ராஜ்யத்தைச் சேர்ந்த) காட்டுவகை காளான் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறைந்தது ஒருவகை இனக் காளான்களை உள்ளூர் மக்கள் உட்கொண்டும் பாராட்டியுள்ளனர்.

இந்திய தாவரவியல் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த வகை காளான்களை வடக்கு சிக்கிம் பகுதியில் குறிப்பாக ஊசியிலைக் காடுகள் நிறைந்த சபல்பைன் காடுகளில் கண்டறிந்துள்ளனர். ஒன்பது இனங்களில் நான்கு பெரிய அளவு பாலை வெளியேற்றி பால் தொப்பிகளை உண்டாக்கும் பண்புகளைக் கொண்ட லேக்டேரியஸ் இனத்தைச் சார்ந்தது.

இந்த புதிய வகை பூஞ்சை இனங்கள் இயற்கையின் பருவகாலங்களில் குறிப்பாக மழைக்காலங்களில் முளைக்கும் காளான்களாக இருக்கின்றன. இவ்வுயிரினங்கள், தாவர இனங்களின் மூலக்கூறு முறைப்படுத்தல்கள் மற்றும் நுண் உருவப் படிப்புகள் மூலமாக உள் மற்றும் வெளிப்புற ஆய்வுகளின் வாயிலாக நிறுவப்பட்டுள்ளன என்று புதிய உயிரினங்களைக் கண்டறிந்த இந்திய தாவரவியல் கழக விஞ்ஞானி கனாத் தாஸ் தி இந்துவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

கனாத் தாஸ், தனது குழுவினரோடு இணைந்து புதிய காளான் உயிரிகளைக் கண்டறிய சிக்கிம் பகுதிகளில் நான்குமுறை ஆய்வுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.இவற்றில், கேந்த்ரலெஸ் சிக்கிமென்சிஸ் எனும் உண்ணத்தக்க தாவர இனம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தாவர இனங்கள் உயரமாகவும் ஒல்லியாகவும் உண்ணுவதற்கு சுவையாகவும் இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இந்தியத் துணைக்கண்டத்தில் இவ்வகை தாவர பேரினங்கள் மற்ற இனவகை காளான்களைவிட இரண்டுமடங்கு பெரியதாக வளரக்கூடிய தனித்துவம் கொண்டதாகும். மற்ற காளான் வகைகள் 3-4 அங்குலம் உயரம் வளரும் என்றால் இவை 6 லிருந்து 7 அங்குலம் உயரம் வரை வளரக்கூடியது.

சுவையான இன்னொரு வகையாக ஆஸ்ட்ராபொலெடஸ் ஆப்லிவ்சியோக்லுஷினோசஸ் எனப்படும் ஒரு தாவரக் குடும்பத்தைச்சேர்ந்த காளான் இனத்தை இவர்கள் குழு கண்டறிந்துள்ளது. இவ்வகைக் காளான்கள் சிறியதாகவும் மிகவும் பிரகாசமான வண்ணங்கள் கொண்டதாகவும் இருக்கும். காட்டில் இவ்வகை களான்கள் இருக்குமிடத்தைக் கண்டறிந்தபோது அங்கு காளான் தலைமீது எண்ணற்ற ஈக்கள் சுற்றிவந்து கொண்டிருப்பதைக் கண்டோம். அதற்குக் காரணம் இவ்வகைக் காளான்களில் இருக்கும் நறுமணமும் அதன் வண்ணமும்தான் என்கிறார் விஞ்ஞானி கனாத் தாஸ்.

காட்டின் வளர்ச்சிக்கு உணவு, தொழிற்சாலை மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கூட காளான்கள் உள்ளிட்ட பூஞ்சைகளின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது. இத்தகைய காளான்வகைக் கண்டுபிடிப்புகள் ஆய்வுலகில் புதிய சாத்தியங்களையும் புதிய உணவுப் பயன்பாடுகளையும் உருவாக்கியிருக்கிறது என்கிறார் இந்திய தாவரவியல் ஆய்வுக்கழக இயக்குநர் பரம்ஜித் சிங்.

இந்தியாவில், இதுவரை சுமார் 2000 காளான் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 12 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை காளான்கள் (சிறிய வகை பூஞ்சைகள்) கண்டறியப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் 5.1 மில்லியன் பூஞ்சையினங்கள் காணப்படுவதாக நம்பப்படுகிறது. இவற்றில் 1.03 லட்சம் உயிரினங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x