Last Updated : 17 Feb, 2015 07:09 PM

 

Published : 17 Feb 2015 07:09 PM
Last Updated : 17 Feb 2015 07:09 PM

ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் முஸ்லிம் பிரதிநிதிகள் 6 கேள்விகள்

ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் தொடர்பாக அந்த அமைப்பின் சிறுபான்மையினர் துறை பொறுப்பாளர் இந்திரேஷ் குமாரை சந்தித்த இஸ்லாமிய மத பிரதிநிதிகள் குழு முக்கியமான 6 கேள்விகளை எழுப்பியது.

சன்னி உலீமா இஸ்லாமிய அமைப்பின் பொதுச் செயலாளர் ஹஜி முகமது சலீஸ் தலைமையிலான இஸ்லாமிய மதத்தின் பிரதிநிதிகள் குழு திங்கள்கிழமை இரவு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமாரை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பில் 'இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறதா?' என்பன உள்ளிட்ட 6 கேள்விகளை பிரதிநிதிகள் எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார், இஸ்லாமிய தலைவர்களுடன் பேச விருப்பம் தெரிவித்த நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

இது குறித்து இஸ்லாமிய பிரதிநிதிகளுள் ஒருவரான சலீஸ் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "எங்களது கேள்விகளுக்கு இந்திரேஷ் பதில் அளிக்கவில்லை. விரைவில் இஸ்லாமிய அமைப்புக்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், அந்தக் கூட்டத்தில் இத்தகைய கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

எங்களது கேள்விகளால் அவர் எரிச்சல் அடைந்தார். இந்தியாவை இந்துக்களின் நாடாக மட்டுமே கருதுகிறதா? என்பதே எங்களது முதல் கேள்வியாக இருந்தது.

இந்தியாவை முழுவதுமான இந்து ராஷ்டீரியமாக்க விரும்புகிறீர்களா? என்பது எங்களது இரண்டாவது கேள்வி.

மூன்றாவது, இந்து ராஷ்டீரியம் என்பது முழுவதும் இந்துக்களின் மதக் கோட்பாடுகளைக் கொண்டதா அல்லது ஆர்.எஸ்.எஸ் அதற்கான புதிய தத்துவங்களை வகுத்துள்ளதா?

நான்காவது, மத மாற்றத்தின் மூலம் நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்கள்?

ஐந்தாவது, இஸ்லாமியர்கள் எத்தகைய தேசபக்தியோடு இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். எண்ணுக்கிறது?

ஆறாவது, இஸ்லாமியத்தின் மீதான ஆர்.எஸ்.எஸ்.-ன் பார்வை என்ன?

இந்த கேள்விகள் அனைத்துக்குமே இந்திரேஷால் பதிலளிக்க முடியவில்லை.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு கொள்கைகள் கிடையாது. அவர்கள் வெறுமென தங்களது பிரச்சாரங்களை நடத்துக்கின்றனர். இவர்களது கோட்பாடுகள் இந்து மதத்தை சார்ந்ததாக இல்லை. தலித்துகளுக்கு எதிரானதாக இருக்கிறது. நாட்டில் உள்ள தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைய முடியாத நிலை மீண்டும் ஏற்படுமோ? என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் மதமாற்றத்தை அனுமதிக்கிறது. அதற்கு எதிரான ஒரு மசோதாவை நிறைவேற்ற ஏன் ஆர்.எஸ்.எஸ். ஆர்வம் காட்டுகிறது?

இஸ்லாமிய மதம் பிடிக்காத இஸ்லாமியர்கள் மதத்திலிருந்து வெளியேறலாம். இஸ்லாமியத்தை தழுவியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இங்குள்ள மக்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகவே முகமது ஜின்னாவையும் பாகிஸ்தானை நிராகரித்த எங்கள் மக்கள், காந்தியை தலைவராக ஏற்றுக்கொண்டனர். இந்தியாவை எங்களது நாடாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று நடந்து வருகிறோம்.

இஸ்லாமியர்களிடமிருந்து இவர்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்? பாரத மாதா படத்துக்கு முன் நின்று 'வந்தே மாதரம்' பாட வேண்டுமா? அதனை எங்களால் ஏற்க முடியாது. அது இஸ்லாமியதுக்கு எதிரானது.

90 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பில் நாங்கள் இவை அனைத்தையும் அவரிடம் எழுப்பினோம். அதற்கு அவர், இஸ்லாமிய மாநாடு நடத்த வேண்டும் என்றும், அதில் இதற்கான பதிலை கூறுவதாகவும் கூறினார்.

அறைக்குள் பதில் கூற முடியாத நீங்கள், மாநாட்டில் எவ்வாறு பதில் அளிப்பீர்கள்? என்று கேட்டோம். முதலில் இஸ்லாமிய மாநாட்டை நாங்கள் எதற்காக நடத்த வேண்டும்? என்று கேட்டோம்.

ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளால் இஸ்லாமிய மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர். எங்களது சமுதாய மக்களின் கேள்விகளைக் கேட்கவே நாங்கள் வந்தோம். நாங்கள் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைஸியின் கருத்துக்களைக் கூட ஆதரிக்கவில்லை.

இங்கு நடக்கும் மதத் திணிப்புகள் நாட்டின் மேன்மைக்கு ஏற்றதல்ல. இந்தியா காந்தி சொன்ன வழியில் நடக்குமே தவிர, ஒவைஸி அல்லது சங் பரிவாரின் கருத்தை ஏற்று நடக்காது" என்றார் சலீஸ்.

அந்தச் சந்திப்பின் இடையே சில இஸ்லாமியத் தலைவர்கள் வெளியேறினர். அவர்கள் இந்திரேஷ் குமாருடனான சந்திப்பு தேவையற்றது என்றும், தாங்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திடம் பேசவே தயாராக உள்ளோம் என்றும் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x