Published : 06 May 2017 03:23 PM
Last Updated : 06 May 2017 03:23 PM

ஆந்திரத்துக்கு ஆப்பிள் நிறுவன முதலீட்டை கொண்டு வரும் சந்திரபாபு நாயுடு

ஆப்பிள் நிறுவனம் ஆந்திராவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை தனது அமெரிக்க பயணத்தின் மூலம் சந்திரபாபுநாயுடு அதிகரிக்கச் செய்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் அம்மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் 5க்கும் மேற்பட்ட மாகாணங்களுக்கு அவர் செல்ல உள்ளார்.பல்வேறு தொழில் அமைப்பினருடனும் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

நேற்றைய சந்திப்பின் போது இன்னோவா சொல்யூசன்ஸ், ஐ-இன்க் உள்ளிட்ட 5 மென்பொருள் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். இதன் மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்துக்கு அழைப்பு

இந்த பயணத்தின் போது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெபி வில்லியம்ஸ்ஸை சந்தித்த சந்திரபாபு நாயுடு, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய மூதலீட்டுத் திட்டத்தை ஆந்திராவில் நிறுவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்கனவே ஆந்திர அதிகாரிகள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் தரப்பில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து பேசியிருப்பது கூடுதல் பலன்களை தரும் என்று ஆந்திர அதிகாரிகள் கூறினர். விரைவில் ஆப்பிள் நிறுவனம் ஆந்திராவில் தனது நிறுவனத்தை தொடங்க இருப்பதாகவும் அம்மாநில அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x