Published : 05 Nov 2015 09:58 AM
Last Updated : 05 Nov 2015 09:58 AM

வீடில்லாப் புத்தகங்கள் தொடர்: புத்தகத்தின் பின்பக்கம்

பழைய புத்தகக் கடைகளில் பல அரிய நூல்களை வாங்கியிருக்கிறேன். அவற்றில் சில, ஆண்டுக்கணக்கில் மறுபதிப்பு காணாதவை. இதுபோன்ற புத்தகங்களை அறிமுகம் செய்யலாமே என்றுதான் ‘வீடில்லாப் புத்தகங்கள்’ தொடரை வியாழன்தோறும் எழுத ஆரம்பித்தேன்.

புத்தகங்களைப் பற்றி மட்டுமின்றி சாலையோர புத்தகக் கடைக்காரர்களின் பிரச்சினைகள், பல்வேறுவிதமான வாடிக்கையாளர்கள் பற்றியும் எழுத வேண்டும் எனத் திட்டமிட்டேன். அப்படித்தான் இத்தொடர் வெளியாகத் தொடங்கியது.

ஊர் ஊராகப் புத்தகக் கடைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். தனிநபர் நூலகங்கள், பொது நூலகங்கள், தூதரக நூலகங்கள் என பல்வேறுவிதமான நூல கங்களுக்கு சென்று வந்திருக்கிறேன். புத்தகங்களை அடுக்கி வைத்து பெரிய நூலகம் வைக்குமளவு வீட்டில் இட மில்லை. ஆகவே, மூன்று நான்கு அல மாரிகளில் தேவையானதை வைத்து விட்டு மற்ற புத்தகங்களை அட்டைப் பெட்டிகளில் அடைத்து பரணில் போட்டு வைத்திருக்கிறேன்.

புத்தகங்களைத் தேடித் தேடி சுவாச ஒவ்வாமை வந்துவிட்டது. மருத்துவர்கள் பழைய புத்தகக் கடை பக்கமே போகக்கூடாது, புத்தகத் தூசிதான் ஒவ்வாமைக்கு முக்கிய காரணம் என அறிவுரை சொன்னார்கள். ஆனால், அப்படி வாழ என்னால் முடியாது. புத்தகங்கள்தான் எனக்கு மருந்து என ஒவ்வாமையை சமாளித்த படியே இன்றும் புத்தகங்களைத் தேடி அலைந்துகொண்டுதான் இருக் கிறேன்.

தொடர் வெளியாக ஆரம்பித்த 2 வாரங்களுக்குப் பிறகு ஒரு வியாழன் காலை எனக்கு ஒரு பெரியவர் தொலை பேசியில் அழைத்து, ‘‘சென்னை திருவல்லிக்கேணியில் தான் 40 வருஷங் களாக பழைய புத்தகக் கடை நடத்தி வருகிறேன். என் அனுபவத்தில் எங்களை கவுரவப்படுத்தி முதன்முறையாக நீங்கள்தான் எழுதியிருக்கிறீர்கள், வாழ்த் துகள்’’ எனச் சொன்னார். அவரது கடையிலும் நான் புத்தகங்கள் வாங்கி யிருக்கிறேன் என்றேன்.

இது நடந்த அடுத்தவாரம், கோவை யில் உள்ள பழைய புத்தகக் கடை வாசலில் ‘வீடில்லாப் புத்தகங்கள்’ தொடரை ஜெராக்ஸ் எடுத்து பெரியதாக ஒட்டி வைத்திருக்கிறார்கள் என போட்டோ எடுத்து ஒரு நண்பர் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார்.

பழைய புத்தக கடை நடத்துபவர் கள், வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப் பாளர்கள், நூலகர்கள், பேராசிரியர்கள், திரைத்துறை கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் இந்தத் தொடரைப் பாராட்டி என்னோடு பேச ஆரம்பித்தார்கள்.

வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ சிறுகதை தொகுப்பைப் பற்றி எழுதிய வாரத்தில், ஓவியர் அமுதோன் தொலைபேசியில் அழைத்து நன்றியோடு பாராட்டி ‘‘இத்தனை வருஷங்களுக்குப் பிறகு நூலின் முகப்பு ஒவியத்தை பாராட்டி எழுதியிருக்கிறீர்கள், மிகுந்த சந்தோஷ மாக இருக்கிறது’’ என நெகிழ்ந்துபோய் சொன்னார்.

ஒவ்வொரு வாரமும் இத்தொடரை வாசித்து முடித்த கையோடு என்னை தொலைபேசியில் அழைத்து பேசுபவர் வேலூர் லிங்கன். அவரைப் போல சிறந்த வாசகரை காணமுடியாது. நெ.து.சுந்தர வடிவேலு அவர்களின் நினைவலைகள் நூலைப் பற்றி எழுதியபோது அவரது சகோதரர் குடும்பத்தைச் சேர்ந்த லெனின் என்னை அழைத்து பாராட்டினார். கல்வி யாளர் ராஜகோபாலன், துளசிதாசன் உள்ளிட்ட பல ஆசிரியர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியதற்காக நன்றி தெரிவித்தார்கள். இந்த நூல் எங்கே கிடைக்கும் எனக் கேட்டு அறிந்த தாமோதரன் என்ற ஆசிரியர் 50 பிரதிகள் வாங்கி தனக்குத் தெரிந்த ஆசிரியர்களுக்குப் பரிசளித்தார். இது போலவே பெரம்பலூர் அருகேயுள்ள சிறுமலர் பள்ளியில் இந்தத் தொடரை பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாரா வாரம் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

‘ராஜராஜ சோழன்’ திரைப் படம் உருவான விதம் பற்றிய புத்தக அறி முகத்தை படித்துவிட்டு, அந்தப் புத்தகம் தனக்கு வேண்டும், ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு தந்துவிடுகிறேன் என இதை வாங்கிப் போவதற்காக மயிலாடுதுறை யில் இருந்து மூர்த்தி என்பவர் வந்து போனது நினைவில் பசுமையாக இருக்கிறது.

இது போலவே 'மஞ்சள் பிசாசு' என்ற புத்தகம் பற்றி நீங்கள் எழுத வேண்டும் என அந்த நூலை கூரியரில் அனுப்பி வைத்தவர் நகைத்தொழிலாளி அண்ணாமலை.

தோழர் நல்லகண்ணு, தோழர் ஜி.ராம கிருஷ்ணன், தோழர் நன்மாறன், டி.லட்சு மணன், தோழர் எஸ்.ஏ.பெருமாள். தமிழருவி மணியன், இறையன்பு ஐஏஎஸ், டாக்டர் கே.எஸ், திருப்பூர் எம்.எல்.ஏ. தங்கவேலு, மருத்துவர் சிவராமன், பாரதி கிருஷ்ணகுமார், துளசிதாசன், எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், சா.தேவதாஸ், ச.தமிழ்செல்வன், பவா செல்லதுரை, கவிஞர்கள் தேவதச்சன், மனுஷ்யபுத்திரன், தங்கம் மூர்த்தி, இயக்குநர்கள் லிங்குசாமி, தங்கர் பச்சான், ஏ.ஆர்.முருகதாஸ், வசந்த பாலன், சசி, ‘சமரசம்’ ஆசிரியர் அமீன், பேரா. சிவசுப்ரமணியன். டாக்டர் வீ.அரசு, டாக்டர் ராமகுருநாதன், திருப்பூர் ஈஸ்வரன், விமர்சகர் முருகேச பாண்டியன், நாடகக் கலைஞர் கருணா பிரசாத், விஜயா வேலாயுதம், காந்தி கண்ணதாசன், அன்னம் கதிர், சந்தியா நடராஜன், காவல்துறை உயரதிகாரி செந்தில்குமார், மருத்துவர் எஸ்.வெங் கடாசலம், ’புதியதலைமுறை’ ஜென்ராம், சிவகாசி தொழிலதிபர் சந்திரமோகன் போன்ற பலரும் இந்தத் தொடரில் வந்த கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து பாராட்டு தெரிவித்தார்கள்.

பல்லாயிரக்கணக்கான வாச கர்கள் இந்தத் தொடரை வாசித்து பாராட்டியதோடு, நான் குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கி சேகரித்துக் கொண்டது எனது எழுத்துக்குக் கிடைத்த கவுரவமாக கருதுகிறேன். அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும். சிறிய இளைப்பாறுதலுக்குப் பிறகு மீண்டும் எழுதுவேன்.

‘வீடில்லாப் புத்தகங்கள்’ கட்டுரைகள் ‘தி இந்து’ வெளியீடாக விரைவில் புத்தகமாக வெளியாகும்.

இந்தத் தொடரை சாத்தியப்படுத்திய ‘தி இந்து' ஆசிரியர் குழுவினருக்கு எனது மனம் நிரம்பிய நன்றி.

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x