Last Updated : 15 Mar, 2015 12:17 PM

 

Published : 15 Mar 2015 12:17 PM
Last Updated : 15 Mar 2015 12:17 PM

சிற்பங்கள் தொன்மங்களைச் சித்திரிக்கின்றன: செந்தீ நடராசன் நேர்காணல்

செந்தீ நடராசன், கல்வெட்டு ஆய்வாளர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர். ‘பண்பாட்டுத் தளங்கள் வழியே’ ஆய்வுக் கட்டுரை நூல் இவரது முக்கியமான ஆக்கம். ‘தொல் தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்’ கல்வெட்டுத் துறைக்கே சிறப்புச் செய்யும் நூல். அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் நாகர்கோவிலில் வசிக்கிறார்.

அறிவியல் பட்டதாரியான நீங்கள் இத்துறைக்கு எப்படி வந்தீர்கள்?

என் கல்லூரித் தோழரான எழுத்தாளர் பொன்னீலன் மூலமாக நாட்டார் வழக்காற்றியலாளர் நா.வானமாமலையின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம்தான் வரலாற்றுத் துறையில் ஆர்வம் வந்தது. கல்வெட்டுத் துறைக்கு வரக் காரணம் தே. கோபால். அவர்தான் கல்வெட்டு எழுத்துகளை வாசிக்கக் கற்றுக்கொடுத்தார்.

கல்வெட்டுகளில் என்ன மாதிரியான எழுத்து வடிவங்கள் இருக்கின்றன?

முதலில் மொழியையும் அதன் வரி வடிவத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும். வரி வடிவத்தைப் பொறுத்தவரை தமிழுக்கு ஆதியில் இருந்த வடிவம் பிராமி. அதற்கு முன்னால் வேறு வடிவம் இருந்திருக் கலாம். ஆனால் நமக்கு பிராமி வரிவடிவம்தான் சான்றாகக் கிடைக்கிறது. கி.பி.2-ம் நூற்றாண்டுக்குப் பிறகு வட்டெழுத்து வரிவடிவம் வருகிறது.

கிடைக்கப் பெற்றவற்றுள் பழமையான தமிழ் பிராமி வரிவடிவம் எது?

பழனிக்கு அருகில் பொருந்தலில் தொல்லியலாளர் கா.ராஜன் மேற்கொண்ட அகழாய்வு மண் ஜாடியில் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த ஜாடியின் மேற்பரப்பில் தமிழ் பிராமி வரிவடிவம் எழுத்துகள் இருந்தன. அதற்குள்ளிருந்த நெல் மணிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வுசெய்தபோது அது கி.மு. 450 க்கும் கி.மு. 490 க்கும் இடையிலானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டு பிடிக்கப்பட்டவற்றில் இதுதான் பழமையானது.

வரிவடிவங்கள் கல்வெட்டுகளுக்காக உருவாக்கப்பட்டவையா?

தோலில் எழுதியிருக்கிறார்கள். துணியில் எழுதியிருக்கிறார்கள். ஓலைச்சுவடியில் எழுதியிருக் கிறார்கள். ஆனால் இவற்றின் ஆயுள் காலம் மிகக் குறைவுதான். கல்வெட்டுகள் அப்படிப்பட்டதல்ல. அவற்றை இப்போதும் நம்மால் பார்க்க முடிகிறது.

தமிழ் கிரந்த வரிவடிவம் எப்போது வருகிறது?

கி.பி.5-ம் நூற்றாண்டில் வருகிறது. சமணர்களின் மொழியான சூரகேணியும் பவுத்தர்களின் மொழியான பாலியும் பிராகிருதக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தப் பிராகிருத மொழிகளைச் சொல்ல தமிழ் எழுத்துகளில் ஒலி போதாது. பிராகிருதத்தின் உயிர் எழுத்து, மெய் எழுத்துத் தன்மைகள் வேறு. ‘எ’ குறில் கிடையாது. ‘ஒ’ குறில் கிடையாது. தமிழில் ‘க’வர்க்கம் ‘ச’வர்க்கம் கிடையாது. ஆக இந்த எழுத்துகளையும் சேர்த்துத் தமிழில் எழுத உருவானதுதான் கிரந்த வரிவடிவம்.

இந்தக் காலகட்டத்தில்தான் சமணம் இங்கு வருகிறதா?

கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே சமணர்கள் வந்துவிட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் வைசாக முனிவர் தலைமையிலான சமணர்கள் சோழ, பாண்டிய நாடுகளில் சமணத்தைப் பரப்பினர். கி.மு. 3-ம் நூற்றாண்டில் அசோகர் மூலம் கிழக்குக் கடற்கரை ஓரமாகப் பவுத்தம் வருகிறது. தமிழ்ச் சங்க காலம் எனச் சொல்லப்படும் காலகட்டத்திலேயே தமிழர்களுக்கு சமணமும் பவுத்தமும் தெரியும்.

அதற்கு முன்பு இங்கு என்ன சமயம் இருந்தது?

எல்லாச் சமயங்களும் இருந்தன. பொதுவான சமயம் என்ற ஒன்று இல்லை. சங்க இலக்கியத்தில் யாகங்களைச் செய்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. வைதீகம் இருந்திருக்கிறது. சமணமும் பவுத்தமும் ஆசிவகமும் இருந்திருக்கினறன. பின்னால் சங்க இலக்கியத்தை சைவர்கள் தொகுக்கும்போது சமண, பவுத்த தடயங்களை நீக்கிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதையும் மீறிச் சில இடங்களில் இவற்றைப் பார்க்க முடிகிறது.

உதாரணம் சொல்ல முடியுமா?

‘யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா’எனும் கணியன் பூங்குன்றனாரின் வரிகள் ஆசிவக சமயத்தின் கோட்பாட்டைப் பிரதிபலிப்பது. ‘நாடா கொன்றோ காடா கொன்றோ, அவலா கொன்றோ மிசையா கொன்றோ, எவ்வழி நல்லவ ராடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே’ எனும் ஒளவையின் பாடல் பவுத்ததின் தம்மபதத்தை அப்படியே சொல்கிறது. சங்க இலக்கியத்தில் சிவன், விஷ்ணு என்ற சொற்களே இல்லை. ஒரு இடத்தில் முக்கண்ணன் என்ற சித்திரிப்பு வருகிறது. அது இந்திரனைக் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும். அவனுக்கும் மூன்று கண்கள்.

தற்காலத் தமிழ் வரிவடிவம் எப்போது உருவானது?

கி.பி.5-ம் நூற்றாண்டு வரை வட்டெழுத்து வரிவடிவம்தான் கல்வெட்டுகளில் பார்க்க முடிகிறது. ஆனால் அதே காலகட்டத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கிட்டதட்ட இன்றைக்குள்ள தமிழ் வரிவடிவத்தில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழர்களின் எழுச்சிக்குப் பிறகு தமிழ் வரிவடிவம் பரவலாக்கம் பெறுகிறது. அது ராஜராஜ சோழனின் காலகட்டம்.

தமிழ்நாடு முழுக்க சிற்பங்களை ஆய்வு செய்திருக்கிறீர்கள். சிற்பங்களை வைத்து வரலாற்றை அறிந்துகொள்ள முடியுமா?

சிற்பங்களும் காலம் காட்டும் கருவிகளாகும். சிற்பங்கள் வழியாகத் தொன்மங்களும் வெளிப்படும். சுசீந்திரம் கோயிலின் கோபுர அடிவாரத்தில் ஒரே ஒரு சட்டகத்தில் மகாபலி சக்கரவர்த்தியின் கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. மேலும் சிற்பங்கள் அழகுணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்துபவை அல்ல. குகைகளில் ஒரு மானை வேட்டையாடுவதைப் போல ஓவியங்களை வரைகிறான். நாளை அவன் வேட்டையாடப் போவதை முன்னால் செய்து பார்த்துக்கொள்கிறான். அதை மாந்திரிகச் சடங்கு என்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கென ஒரு தனித்துவமான கோயில் கட்டிடக் கலை என ஒன்றைச் சொல்ல முடியுமா?

அப்படிச் சொல்வது சரியல்ல. தென்னாட்டுக் கலை என்று பிரிக்கலாம். கோயில்களைப் பொறுத்தவரை அது காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுக்கொண்டு வந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. திருவட்டார் கோயிலில் உள்ள ஒரு மூன்று வரிக் கல்வெட்டு, குலோத்துங்கச் சோழனின் மெய்கீர்த்தியைச் சொல்கிறது. அதற்கு முன்பு உள்ள கல்வெட்டுகள் எங்கே போயின? ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கோயில் வேலைப்பாடுகளைக் கலைத்து மீண்டு வேலை பார்த்திருக்கிறார்கள். தமிழகக் கோயில் கட்டிடக் கலையில் ஆந்திரம், கன்னடம், தமிழகம், பல்லவம் எனப் பலவிதமான பங்களிப்புகள் உள்ளன.

சிற்பக் கலையையும் தனித்துவப்படுத்த முடியாது அல்லவா?

காலகட்டத்தைப் பொறுத்துத் தனித்துவப்படுத்த லாம். கி.பி.6-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை வளை சிற்பங்கள் கிடையாது. நேரடியாக நிற்கக்கூடிய சிற்பங்கள்தான் உணடு. விஜயநகரப் பேரரசு காலகட்டச் சிற்பங்கள் மிகவும் வளைந்தவை.

தென்னாட்டுக் கோயில்களில் மட்டும் காணக் கிடைக்கும் யாளி எதைக் குறிக்கிறது?

அது ஒரு தொன்ம, கற்பனை விலங்குதான். பிரம்மாண்டமான ஒரு உருவச் சித்திரிப்புதான் யாளி. சிங்க முகமும், யானையின் துதிக்கையும் கொண்டு இருக்கும் யாளியின் பிரம்மாண்டத்தைக் காட்டுவதற்காக அதன் காலடியில் ஒரு யானையும் செதுக்கப்பட்டிருக்கும். இதில் சிம்ம யாளி, மகர யாளி, யானை யாளி எனப் பல வகை உண்டு.

சிற்பங்கள் வரலாற்றைச் சித்திரிக்க முயல்கின்றனவா?

சிற்பங்கள் வழிபாட்டு வடிவங்களாக இருக் கின்றன. இதன் வழியாக ஒரு சமய வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடியும். கி.பி. 9-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை தாயார் சந்நிதிகள் கிடையாது. சரஸ்வதி சிற்பங்கள் 11-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் கிடைக்கின்றன. அதற்கு முன்பு சரஸ்வதி வழிபாடே கிடையாது. வாக் தேவி என்னும் பவுத்த தெய்வத்தைப் பின்னால் இந்து சமயம் உள்வாங்கிக் கொள்கிறது. மேலும் வழிபாட்டு தெய்வமாக மூதேவி இருந்திருக்கிறாள் என்பதையும் இன்றைக்குக் கிடைக்கும் சிற்பங்கள் மூலம் அறிய முடிகிறது.

கல்வெட்டு அடிப்படையிலான வரலாறு ஓரளவு முழுமை பெற்றிருக்கிறதா?

இன்னும் கண்டுபிடிக்க வேண்டிய கல்வெட்டுகள் இருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல இன்னும் படிக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றில் சில காணாமல் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அரசுதான் இதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.

- மண்குதிரை, தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x