Published : 22 Apr 2014 10:58 AM
Last Updated : 22 Apr 2014 10:58 AM

யோகாவும் தியானமும் நோய்களைக் குணப்படுத்துமா?

நவீன வாழ்க்கையில் பரபரப்பாக இயங்க வேண்டிய நெருக்கடியான சூழலில் இன்றைய உலகம் சுழல்கிறது. தகவல் தொழில்நுட்பத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி காரணமாக, எல்லோரும் அறிவியல் கருவிகளுடன் புழங்க வேண்டியுள்ளது. முன்னர் நிலத்தில் தானியத்தை விதைத்துவிட்டு எவ்வித அவசரமும் இன்றி வாழ்ந்த கிராமத்து விவசாயிகளின் இயற்கை சார்ந்த எளிமையான மனநிலை தற்போது அந்நியமாகிவிட்டது.

இன்று குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது முதலாகத் தொடங்கும் ஓட்டமும் பதற்றமும் ஒருபோதும் முடிவதில்லை. ஏதாவது பொருளை வாங்கு, பயன்படுத்து, ரசனையை மாற்று, தூக்கியெறி, புதிய பொருளை வாங்கு என்ற நுகர்பொருள் பண்பாட்டு தாரக மந்திரம் எல்லாவற்றையும் சந்தைப்படுத்திவிட்டது. கணவன், மனைவி, குழந்தைகள் என்ற அணுக் குடும்பம் காரணமாகச் சிதிலமான குடும்ப உறவுகள், அந்நியமாதலை ஏற்படுத்திவிட்டன. இந்தச் சூழலில் பல்வேறு பிரச்சினைகளால் அல்லல்படும் மனிதன், மன உளைச்சலுக்கு உள்ளாகிறான். இதனால் உடலிலும் மனதிலும் ஏற்படும் நோய்கள் பெரிதும் மனதையே பாதிக்கின்றன.

நெருக்கடியும் நோயும்

நவீன வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி, அரசியல், குடும்பம், தேவைகள் நோக்கிய ஓட்டம் காரணமாகப் பலரும் மனஅமைதியை இழந்துவிடுகின்றனர். பொதுவாக எதிலும் பிடிப்பற்று ஒதுங்கிப் போகும் மனிதர்கள் பெருகிவிட்டனர். சோகமான மனநிலை, கவலை, மனஇறுக்கம், மனஅழுத்தம் பலரையும் பற்றிப் படர்கிறது.

அன்றாட வாழ்வில் உற்சாகத்தை யும் கொண்டாட்டத்தையும் தொலைத்தவர்கள் மன அளவில் சுருங்குகின்றனர். இன்றைய சூழ்நிலையில் மனச்சோர்வு எனப்படும் நோயால் பாதிக்கப்படாதவர்கள் பூமியில் மிகக் குறைவு. ஜலதோஷம், காய்ச்சல் போல யாருக்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் மனச்சோர்வு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. மனதில் நோய் என்றவுடன் பொதுப்புத்தியில் உள்ள மெண்டல், பைத்தியம், கிறுக்கு போன்ற சொற்களால் அவதிப்பட வேண்டியது இல்லை. உடல் நோய்க்குள்ளாவது போல மனமும் நோய்க்குள்ளாவது இயற்கைதான்.

நுரையீரலின் வேலை சுவாசம் போல, மூளையின் வேலை மனம் சார்ந்தது என்பது உளவியலாளர் கருத்து. உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டறியும் மனம், அதற்குப் பிரச்சினை என்றால் குழம்பிப் போகிறது. மனதைப் பற்றிக் காலங்காலமாகத் தத்துவஞானிகளும் மதவாதிகளும் நிரம்பச் சொல்லியுள்ளனர். புத்தர் சொன்ன கதையில் வரும் பார்வையற்றோர் யானையைத் தடவி ஒவ்வொருவரும் சொன்ன வேறுபட்ட அபிப்ராயங்கள் போல, மனதைப் பற்றிய பேச்சுகளும் நீள்கின்றன. இன்றுவரையிலும் அறிவியலாலும் விளக்கமுடியாத மனதின் சூட்சுமங்களைப் பற்றி ஆன்மிகம், யோகா, தியானம் மூலம் பரப்பப்படும் பரப்புரைகள் எந்தளவுக்குச் சரியானவை என யோசிக்க வேண்டியுள்ளது.

மனச்சோர்வின் தொடக்கம்

பெரிய பள்ளிக்கூடம்/கல்லூரியில் லட்சம்லட்சமாகச் செலவழித்துப் படிக்க வைத்தாலும் மகன் அல்லது மகள் படிக்காமல் சோர்ந்து இருக்கிறார்களே எனத் தொடங்கும் பிரச்சினை காலமெல்லாம் தொடர்கிறது. கண்டிப்பான பள்ளி, மாணவனும் மாணவியும் பேசினாலே தண்டனை கொடுக்கிற ஒழுக்கம் போதிக்கும் கல்லூரி எனக் குழந்தைகளைச் சேர்த்துவிடத் துடிக்கும் பெற்றோர், குழந்தைகளின் மனதைப் புரிந்துகொள்வது இல்லை. எப்பொழுதும் படி, படி என விரட்டுவதால் மாணவர்களின் மனம் சோர்வடைகிறது.

சிலர் மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும் இயல்பிலே தனித்துவமானது என்பதை நவீனக் கல்வி முறை மறுக்கிறது. பதின்பருவத்தில் தொடங்கும் பிரச்சினையால் பாதிக்கப்படும் மனமானது வேலை, திருமணம், குடும்பம், அரசியல் எனக் கடைசிவரை பதற்றமடைகிறது. இத்தகைய சூழலில் மனநோய் தொடர்கிறது. ஒவ்வொருவரின் புரிதல்திறனும் ஓரளவு சூழல் சார்ந்தது, எனினும் மரபணு முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தையின் விருப்புவெறுப்பைத் தீர்மானிப்பதில் மரபணுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

எல்லாவற்றுக்கும் தீர்வு?

மனிதன் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை யோகா, தியானம் மூலம் தீர்க்க முடியும் எனப் பிரச்சாரம் செய்யும் கார்ப்பரேட் சாமியார்கள் இன்று பெருகிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சில யோகா மாஸ்டர்கள் உடல் நோய்களைக்கூட யோகா, மெடிட்டேஷன் மூலம் குணப்படுத்திவிட முடியும் என வாரக் கணக்கில் முகாம்கள் நடத்துகின்றனர்.

இந்திய மரபில் யோகத் தத்துவம் இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமுடையது. குறிப்பாகச் சித்தர்களும் சாமியார்களும் பூமியில் தங்கள் இருப்பை மறக்க யோகா மூலம் முயற்சித்தனர். இன்றுகூடக் கங்கைக் கரையில் வாழும் சாமியார்கள் கஞ்சா போன்ற லாகிரிப் பொருள்கள் மூலம் சூழலை மறந்து ஏகாந்தநிலையில் உறைந்திருக்கின்றனர். பலர், யோகப் பயிற்சியால் உடலை மரணத்திலிருந்து காக்கமுடியும் என்று கடுமையாக முயல்கின்றனர்.

ஆனால் மூச்சுப் பயிற்சி, குண்டலினி என முயன்றவர்களைவிட விவசாய வேலைகளில் ஈடுபட்ட கிராம மக்கள் நூறாண்டு வாழ்ந்தனர் என்பதுதான் உண்மை. உடலைக் கேவலமாகக் கருதிய மதங்கள், உடலைத் துறந்து சொர்க்கம் போகலாம் எனப் போதித்தன. மருந்து, யோகா, தியானம் மூலம் உடலை வளப்படுத்தலாம் என்று சித்தர்களும் யோகிகளும் மாற்றுக் கருத்தை முன்வைத்தனர். அன்றைய சூழலில் சித்தர்கள், கலகக்காரர்கள்.

எது உண்மை?

தியானம் மனதையும் உடலையும் நலப்படுத்தும் என்ற கருத்து ஓரளவுதான் உண்மை. யோகா என்பது ஒருவகையில் உடற்பயிற்சிதான். ஆரோக்கியமாக இருக்கும் உடல், யோகாவால் இன்னும் மேம்படும் என்பதில் ஐயமில்லை. நோய் வயப்பட்ட உடலுக்கும் மனதுக்கும் மருத்துவச் சிகிச்சை கட்டாயம் தேவை. மருந்து, அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையிலுள்ள நோயாளிகள், நிச்சயம் மருத்துவரின் ஆலோசனையையே பெறவேண்டும்.

யோகாவும் தியானமும் பயிற்சிகள் என்பதை மறைத்து, இன்றைக்கு எல்லா விதமான நோய்களும் குணமாகும் என யோகா குருஜீக்கள் பிரச்சாரம் செய்கின்றனர். இத்தகைய குருஜீக்களை மேலைநாட்டினர் தேடி வந்தால், அதைப் பார்க்கும் தமிழர்கள் `ஆகா... குருஜீ மாபெரும் ஆற்றல் மிக்கவர். யோகாவால் எல்லா நோய்களும் குணமாகும்’ என்று கண்மூடித்தனமாக நம்புகின்றனர்.

அறிவியல் அடிப்படை

மனநலக் கோளாறுகள் சூழல் சார்ந்தும், மரபணுக்கள் சார்ந்தும் ஏற்படுகின்றன. மனதை நலமாக்க உளவியல் ரீதியில் அணுகும் மனநல மருத்துவம், அறிவியல் அடிப்படையில் அமைந்தது. மனநலப் பிரச்சினைகளுக்குத் தியானம் மூலம் தீர்வு காண முடியும் என்பது நம்பிக்கை சார்ந்தது. மனதை அடக்கியாள முடியும் என ஆன்மிகவாதிகளும் மதவாதிகளும் காலங்காலமாகப் போதித்துவருகின்றனர். ஆனால் மனம் வேலை செய்வது, முழுமையாக அவரவர் கையில் இல்லை. தியானம் மூலம் மனதைக் கட்டுப்படுத்தலாம் என்பதற்கும் மனநோயைக் குணப்படுத்தலாம் என்பதற்கும் தொடர்பு எதுவுமில்லை.

மஞ்சள் காமாலை, காசநோய், நீரிழிவு போன்ற நோய்களைக் குணப்படுத்தத் தரமான சிகிச்சையும் மருந்துகளும் அடிப்படை. ஆனால் இன்று புற்றுநோய் உள்படத் தீராத நோய்களையும் யோகாவால் குணமாக்க முடியும் என்று போலி யோகா மாஸ்டர்கள் நகர்தோறும் புறப்பட்டுள்ளனர். அவர்களை நம்பிப் பலரும் பொருளையும் உயிரையும் இழக்கின்றனர். எல்லாவற்றுக்கும் வரையறை இருப்பது போல, யோகாவுக்கும் உண்டு. ஆனால் யோகாவும் தியானமும் சர்வரோக நிவாரணிகளைப் போல முன்னிலைப்படுத்தப்படுவது அறிவியலுக்கு முரணானது.

நோய் என்பது கர்மத்தினால் வருவது, இறைவன் அளித்த தண்டனை என மதங்கள் போதித்த வேளையில், உடலுக்கு முக்கியத்துவம் தந்து சித்தர்கள் யோகாவைக் கற்பித்தனர். நோய்க்கு மருந்துகள் தந்த சித்தர்களின் நோக்கமும் முயற்சியும் தனித்துவமானவை. பணம் வாங்காமல் மக்களுக்கு யோகாவும் மருந்தும் அளித்த சித்தர்களுடன் ஒப்பிடுகையில், ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிச் சொகுசான ஆசிரமத்தில் வாழும் நவீனச் சாமியார்களின் நிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். மனித இனத்தை உய்விக்க வந்த மகான்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் சாமியார்களின் பேச்சுச் சாதுரியத்தால், இன்று யோகாவும் தியானமும் பிராண்ட் அடிப்படையில் மார்க்கெட்டிங் செய்யப்படும் சரக்காக மாறிவிட்டன.

- ந.முருகேசபாண்டியன், எழுத்தாளர்

தொடர்புக்கு: murugesapandian2011@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x