Last Updated : 26 Aug, 2014 10:00 AM

 

Published : 26 Aug 2014 10:00 AM
Last Updated : 26 Aug 2014 10:00 AM

யோகக் கலைக்குப் புத்துயிர் தந்தவர்

கடந்த வாரம் காலமான உலகப் புகழ்பெற்ற யோகா குரு பி.கே.எஸ். அய்யங்கார் வர்க்கம், சாதி, மதம் கடந்து யோகக் கலையை எடுத்துச் சென்றதற்காகப் பெரிதும் மதிக்கப்படுகிறார். யோகா என்ற பண்டைய கலைக்குப் புத்துயிர் தந்த அவர், சர்வதேச அரங்குக்கு அதை எடுத்துச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள யோகா பயிற்சியாளர்களுக்கு அவருடைய மறைவு நிச்சயம் பேரிழப்புதான்.

"உடல்தான் எனக்குக் கோயில், உயர்ந்த ஆன்மாவை அடைவது என் இலக்கு" என்பதே அவரது தீவிர நம்பிக்கை. பரந்து விரிந்து பலருக்கும் பயன் தரும் ஒரு ஆலமரத்தைப் போல யோகக் கலையைப் பற்றியும், யோக சிகிச்சையின் மதிப்பையும் அவர் பரப்பி வந்தார்.

தளராத உடல்

சிறு வயதிலிருந்தே பல்வேறு நோய்களால் உடல்வலு குன்றியிருந்த அவரால், டீன் ஏஜைக்கூடத் தாண்ட முடியாது என்று முன்பொரு மருத்துவர் கூறியிருந்திருக்கிறார். 1996, 1998களில் இரண்டு முறை கடும் மாரடைப்பால் தாக்கப்பட்ட அய்யங்கார், தனது யோகா பயிற்சியைக் கொஞ்சம்கூட மாற்றிக் கொள்ளாமல் தொடர்ச்சியாகச் செய்துவந்தார். இறப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை ஆசனங் களைச் செய்துள்ளார். 92 வயதில் ஏழு மணி நேர யோகா பயிற்சிகளை வாரத்தின் ஏழு நாட்களிலும் கொடுத்து வந்தார். இதற்காகச் சமீபத்திய ஆண்டுகளில்கூட ரஷ்யா, சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

உலக குரு

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் 1918-ல் பிறந்த அவரது முழு பெயர் பெல்லூர் கிருஷ்ணமாச்சார் சுந்தரராஜ அய்யங்கார். பதஞ்சலி யோகச் சூத்திரத்தில் புதுமையைப் புகுத்தி, ஆற்றல் மிகுந்த யோகா பாணியாக அவர் மாற்றினார். அது ‘அய்யங்கார் யோகா' என்று அறியப்பட்டது. 1966-ல் அவர் எழுதிய ‘லைட் ஆன் யோகா' புத்தகம், 19 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 30 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது. இந்தப் புத்தகம் யோகாவின் வேதமாகக் கருதப்படுகிறது.

இன்றைக்கு ஆஸ்திரேலியா, மெக்சிகோ, உஸ்பெகிஸ்தான், செக் குடியரசு உள்ளிட்ட 77 நாடுகளில் அவருடைய பயிற்சி மையங்கள் உள்ளன. லட்சக்கணக் கானோர் அவருடைய யோகக் கலையைப் பின்பற்றி வருகின்றனர்.

வர்க்கம், சாதி, மதத்தைக் கடந்து யோகக் கலையை அவர் கற்றுத் தந்தார். வயலின் மேஸ்ட்ரோ யெஹூதி மெனுஹின், எழுத்தாளர் ஆல்டாஸ் ஹக்ஸ்லி உள்படப் புகழ்பெற்ற பல வெளிநாட்டவர்களுக்கு யோகா கற்றுத் தந்திருக்கிறார்.

அனைவருக்கும் யோகா

"பண்டைய அறிவை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றவர் அய்யங்கார். சிக்கலான பல ஆசனங்களை அவர் முயற்சித்துப் பார்த்தார்" என்கிறார் ஆசனா ஆண்டியப்பன் யோகா கல்லூரி, ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் ஆர்.ஆண்டியப்பன்.

இன்றைக்குப் பள்ளி, கல்லூரிகள் முதல் சிறைகள் வரை யோகா கற்றுத் தரப்படுவதற்கு அய்யங்காரும் ஒரு காரணம்.

சிறைகளில் யோகா கற்றுத் தர அய்யங்காரை முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் அணுகியபோது, உடனடியாகத் தனது சீடர்களைப் பயிற்சி தர நியமித்திருக்கிறார். "யோகக் கலை மேட்டுக்குடியினருக்கு மட்டுமானது என்ற மாயையைத் தகர்த்தவர் அய்யங்கார்" என்று நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் (2014) உள்ளிட்ட விருதுகளை வழங்கி, அய்யங்காரை மத்திய அரசு கவுரவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x