Published : 28 Mar 2015 03:25 PM
Last Updated : 28 Mar 2015 03:25 PM

மறைந்திருந்து தாக்கும் கொதிப்பு

ரத்தக்கொதிப்பு நோய்க்கு ஆயுர்வேதத்தில் தீர்வு உள்ளதா?

- சந்திரன், காருக்குறிச்சி

ரத்த அழுத்தம் என்பது சுத்த ரத்த நாளங்களில் உருவாகும் அழுத்த நிலை. இதயத்தால் வெளியேற்றப்பட்ட ரத்தம் arteries என்று சொல்லக்கூடிய சுத்த ரத்த நாளங்களில் ஏற்படுத்துகிற ஒரு அழுத்த நிலையை high blood pressure (hypertension) என்கிறோம்.

இது இரண்டு எண்ணிக்கையில் குறிப்பிடப்படுகிறது. ஒன்று systolic blood pressure, இது மேலே உள்ள எண்ணைக் குறிக்கும். அடுத்தது diastolic blood pressure, இது கீழே உள்ள எண்ணைக் குறிக்கும். உதாரணமாக மருத்துவர்கள் 120/80 mm of hg என்று எழுதுவார்கள். இதில் ஒன்றோ, இரண்டோ அல்லது இரண்டுமே அதிகமாக இருக்கலாம்.

பொதுவாக ஒரு மனிதனுக்கு 120/80 என்று ரத்த அழுத்தம் இருக்கும். இந்த ரத்த அழுத்தம் 140/90 என மாறும்போது hypertension என்று குறிப்பிடப்படுகிறது. சிலர் இதை Prehypertension என்று குறிப்பிடுவதும் உண்டு. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதய நோய் உள்ளதா, சிறுநீரக நோய் உள்ளதா, பக்கவாதம் வரும் வாய்ப்புள்ளதா என்பதையெல்லாம் மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள்.

காரணங்கள்

ரத்த அழுத்தத்துக்குப் பல காரணங்கள் உள்ளன. உடலில் சேருகிற நீர், உடலில் சேருகிற உப்பு, சிறுநீரகம், நரம்பு மண்டலம், ரத்த நாளங்கள் வேலை செய்கிற விதம், ஹார்மோன்கள் வேலை செய்கிற விதம் போன்றவை முக்கியமானவை.

வயது ஆக ஆக ரத்த அழுத்தம் சற்று அதிகரிக்கும். ரத்த நாளங்கள் கனமாவதே இதற்குக் காரணம். ரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பக்கவாதம், அதனால் பேச்சுத் தடை, மாரடைப்பு, இதயப் பலவீனம், சிறுநீரக நோய், ஏன் மரணம்கூட ஏற்படலாம்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உப்பு, ஊறுகாய், வடகம், வத்தல் போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, குடும்பத்தில் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரலாம். சிலருக்கு எந்தக் காரணத்தால் வருகிறது என்பது தெரியாது. இதை essential hypertension என்று குறிப்பிடுவார்கள். சில நேரம் மற்ற உறுப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்பால் ரத்த அழுத்தம் அதிகமாகும்.

மறைமுக ரத்த அழுத்தம்

1. சிறுநீரகக் கோளாறுகள்

2. அட்ரீனல் சுரப்பி பிரச்சினைகள்

3. பாரா தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரத்தல்

4. கர்ப்பக் காலத்தில் உண்டாகும் pre eclampsia எனும் நோய், கர்ப்பத் தடுப்பு மாத்திரைகள், சாதாரண ஜலதோஷத்துக்குப் பயன்படும் மாத்திரைகள், தலைவலிக்குப் பயன்படும் மாத்திரைகள், பிறவியிலேயே சிறுநீரகத்துக்குச் செல்லும் (renal artery stenosis) சுத்த ரத்தக் குழாய்கள் சுருங்கி இருத்தல்.

பல நேரம் ரத்த அழுத்தத்துக்கு எந்த அறிகுறியும் இருக்காது. இதைக் கருவி மூலம் கண்டுபிடித்தால் மட்டுமே முடியும். பல நோயாளிகளும் தலைவலி இல்லை, தலை சுற்றுவதில்லை என்று சொல்வார்கள். முக்கியமாக நோயாளிகள் தெரிந்துகொள்ள வேண்டியது, பல நேரம் ரத்த அழுத்தத்துக்கு எந்த அறிகுறியும் காணப்படுவ தில்லை. சில நேரம் மாரடைப்பு வந்த பிறகு, சிறுநீரக நோய் வந்த பிறகு, பக்கவாதம் வந்த பிறகுதான் ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வரும். அதுவரை ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்திருக்க மாட்டார்கள். Malignant hypertension என்று ஒரு நோய் உண்டு. இதில் மிக அதிக நிலையில் ரத்த அழுத்தம் காணப்படும்.

இவர் களுக்கு வேண்டு மானால் அதிகத் தலைவலி, வாந்தி, பார்வையில் வேறுபாடு, மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகுதல் போன்றவை ஏற்படலாம். ஒரு நோயாளியைப் படுக்க வைத்து, உட்கார வைத்து, நிற்க வைத்து, இரு கைகளிலும் ரத்த அழுத்தத்தைப் பார்க்க வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் ரத்த அழுத்தப் பரிசோதனையை மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது செய்துகொள்ள வேண்டும். விவரங்களை ஒரு தாளில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கிட்னியில் இருந்து புரதம் வெளியேறுகிறதா, கண் பார்வை சரியாக உள்ளதா, கொழுப்புச் சத்து எவ்வாறு உள்ளது என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ECG, Echo போன்றவற்றை எடுத்துக்கொண்டால் நல்லது. நவீன மருத்துவத்தில் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளன.

ஆயுர்வேத அணுகுமுறை

ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொண்டால் வாழ்க்கை முறை மாற்றம் அவசியம். எளிமையான உணவு வகைகளை ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. பொட்டாசியம் கலந்த உணவுகள், நார்ச்சத்து கலந்த உணவுகள், அதிகமாகத் தண்ணீர் பருகுதல், உடற்பயிற்சி செய்தல், நம் உள்ளே இழுக்கும் மூச்சையும் வெளியே விடும் மூச்சையும் உற்று நோக்குதல், ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதைக் கட்டாயமாக நிறுத்த வேண்டும், ஒரு நாளைக்கு 1.5 கிராம் அளவுக்கு உப்பைக் குறைத்தல், மனதை அமைதிப்படுத்துதல், தியானம் செய்தல், உடல் எடையைக் குறைக்கச் சொல்லுதல் போன்றவற்றைப் பரிந்துரைக்கலாம்.

சில நேரம் மாரடைப்பு, பார்வைத் திறன் இழத்தல், காலுக்கு ரத்தம் போவது தடைபடுதல் போன்றவை எல்லாம் வரும் என்பதால் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி மருத்துவரிடம் சென்று ரத்தக் கொதிப்பைப் பரிசோதிக்க வேண்டும்.

எளிமையான ஆயுர்வேத மருந்துகள்:

பாலில் இரண்டு வேளை வெண்தாமரை பொடி இஞ்சி, முசுமுசுக்கை, சர்ப்பகந்தா சூரணம் 3 கிராம் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

வெண்தாமரை சூரணம், முருங்கை இலை சூரணம் கலந்து கொடுக்க வேண்டும்.

நெருஞ்சில் முள் கஷாயத்தில் கடுக்காய் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

சாரணை வேர் கஷாயத்தில் தான்வந்தரக் குளிகையும், வெண்தாமரை மாத்திரையும் சேர்த்துக் கொடுக்க ரத்த அழுத்தம் குறையும்.

வெள்ளரி, நெல்லி, கேரட், தக்காளி, திராட்சை, கொத்தமல்லி, அன்னாசி, பேரீச்சை, ஆரஞ்சு, முளைகட்டிய தானியங்கள், முருங்கை, வெங்காயம், பூண்டு, இளநீர், வாழைத்தண்டு, கோதுமைப்புல் சாறு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சாப்பிட உயர் ரத்த அழுத்தம் குறையும்.

நெல்லி வற்றலும், பச்சைப் பயிறும் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி காலை, மாலை 100 மில்லி வீதம் சாப்பிட்டுவந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

அகத்திக் கீரை, சுண்ட வத்தல் ஆகியவற்றைச் சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.

கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஜடமாஞ்சி வேர், கற்பூரம், லவங்கப்பட்டைகளை நன்றாக இடித்துப் போட்டு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவந்தால் குறைந்த ரத்த அழுத்தம் மாறும்

பசும் பாலில் 2 பல் பூண்டை நசுக்கிப் போட்டுக் காய்ச்சி இரவில் குடித்து வந்தால் ரத்தக் கொதிப்பும், கொழுப்பும் குறையும்.

டீ, காப்பிக்குப் பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிட்டுவந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

எலுமிச்சை சாறு, இஞ்சிச் சாறு, பூண்டுச் சாறு, ஆப்பிள் பழச் சாறு ஆகிய சாறுகளில் தலா ஒரு கப் வீதம் எடுத்து ஒன்றாகக் கலந்து மிதமான சூட்டில் சூடாக்கி இறக்க வேண்டும்.

ஆறிய பின் அதனுடன் மூன்று மேசைக் கரண்டி தேன் கலந்து ஒரு கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். அதை தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால் கொழுப்பு குறைந்து ரத்தக் கொதிப்பும் குறையும்.

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,

தி இந்து, கஸ்தூரி மையம், 124,

வாலாஜா சாலை, சென்னை - 600 002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x