Published : 15 Apr 2014 10:37 AM
Last Updated : 15 Apr 2014 10:37 AM

நோய் அறிவோம்: நமக்கு வருவது எந்தத் தலைவலி?

தலைவலிக்கான காரணங்கள், மருத்துவப் பரிசோதனைகள் பற்றிப் பார்த்தோம். தலைவலிகளின் வகைகள் பற்றித் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

மைக்ரேன் தலைவலி:

மைக்ரேன் அல்லது ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடும். பெற்றோரில் ஒருவருக்கு மைக்ரேன் இருந்தால், குழந்தைக்கு வரும் வாய்ப்பு 50%; இருவருக்கும் இருந்தால் வரும் வாய்ப்பு 75%.

மைக்ரேன் தலைவலிகள் முன்னெச்சரிக்கைகள் அல்லது சமிக்ஞையுடனோ (AURA) அல்லது அவை இன்றியோ வரக்கூடும். சமிக்ஞைகள், திடீரென்று தோன்றி மறையும் பார்வைக் கோளாறுகள், தோலில் தொடு உணர்ச்சி, நல்ல மணம் அல்லது துர்நாற்றம், காதில் இரைச்சல், இசை, பேசும் குரல்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக, மைக்ரேன் வருவதற்கு முன்பாக நோயாளியால் அறியப்படும்.

மைக்ரேனைத் தூண்டக்கூடிய சில காரணிகள் உள்ளன. அவற்றை அறிந்து, தவிர்க்க முடிந்தால், ஓரளவுக்கு மைக்ரேனைக் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, ‘டைரமின்’ என்னும் வேதிப்பொருள் அதிகமாக உள்ள கெட்டுப்போன ‘சீஸ்’, வாழைப் பழங்கள், சாக்லெட், மது வகைகள் போன்றவை மைக்ரேனைத் தூண்டக்கூடும். அதிக நெடியுள்ள வாசனைப் பொருட்கள், மாதவிடாய் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், சோர்வு, மினுக்கும் வெளிச்சம், அதிகத் தூக்கம் அல்லது தூக்கமின்மை, அதிக காபி, மது, சில கொழுப்பு உணவு வகைகள், நீண்ட நேரம் கணினியைப் பார்த்தல், தட்பவெப்பநிலை மாற்றங்கள் போன்றவையும் மைக்ரேனைத் தூண்டவல்லவை என்பதால், அவற்றைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

1. சமிக்ஞை தோன்றும் நிலையிலேயே அல்லது வலி மிதமாக இருக்கும் நிலையிலேயே மருந்துகள் உட்கொண்டால் மைக்ரேன் ஓரளவுக்குக் கட்டுப்படும். மிகத் தீவிரமான வலி, வாந்தி ஆகியவை தோன்றிய பிறகு, மருந்துகள் வேலை செய்யாமல் போகலாம்.

2.மைக்ரேனைத் தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பது அவசியம் அது நல்ல நோய்த் தடுப்பு முறை!

3.பீட்டா பிளாக்கர்கள், வலிப்பு நோய் மருந்துகள், மனஇறுக்கத்தைக் குறைக்கும் மருந்துகள், கால்சியம் சேனல் பிளாக்கர்கள் மற்றும் புதிதாக வந்துள்ள ‘டிரிப்டான்ஸ்’ (Tryptons) போன்ற மருந்துகள் மைக்ரேன் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கக்கூடியவை.

டென்ஷன் தலைவலி:

முப்பது வயது முதல் 40 வயதுவரை உள்ளவர்களுக்கு டென்ஷன் தலைவலிகள் அதிக அளவில் வருகின்றன. 90% மகளிருக்கும், 70% ஆண்களுக்கும் டென்ஷன் தலைவலி வருவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மிகக் குறைந்த அளவு மருந்துகள், அளவான ஓய்வு, நல்ல பழக்கவழக்கங்கள் போன்றவை மனதையும் உடலையும் தளர்த்தி, டென்ஷன் தலைவலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடியவை. ஐஸ் ஒத்தடம், இளஞ்சூடான நீரில் குளித்தல், சரியான நேர நிர்வாகம், அக்குபங்சர், சுவாசப் பயிற்சி, மனோ நிலை - நடத்தை முறையை மாற்றும் பயிற்சிகள், மசாஜ், ரிலாக்ஸேஷன் பயிற்சிகள் போன்றவையும் உதவும். திட்டமிட்ட, அமைதியான, ஆரோக்கியமான மன / உடல்நிலையுடன் கூடிய வாழ்க்கை போன்றவை நம்மிடம் டென்ஷன் தலைவலிகளை நெருங்கவிடாது.

கிளஸ்டர் தலைவலி அல்லது ‘கொத்துத்’ தலைவலி: மைக்ரேனைப் போலவே வரக்கூடியவை. ஆனால் தினமும், பல முறை கொஞ்ச நேரமே இருக்கக்கூடிய (கொத்து கொத்தாக) தலைவலி இது! சில நாட்கள் அல்லது சில மாதங்கள் இருந்து, பிறகு ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை காணாமல் போய்விடக் கூடியவை. புகை பிடித்தல், மதுப் பழக்கம் உள்ள ஆண்களுக்கு (75%) அதிகமாக வரக் கூடியது.

இந்த வலியின் கொடுமை தாங்காமல், சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சிப்பார்கள். அதனால் இதற்கு ‘தற்கொலைத் தலைவலி’ என்ற காரணப் பெயரும் உண்டு. இதற்கு உடனடி மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x