Published : 06 Jan 2018 11:06 AM
Last Updated : 06 Jan 2018 11:06 AM

டிஜிட்டல் போதை 16: எந்த நிலையிலும் ‘இணை’க்கும் சூது!

ன்லைனில் இருக்கும் பல்வேறு சூதாட்டங்களை விரிவாகப் பார்த்துவிடலாம். இதை நடத்துபவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வலைத்தளங்கள், ‘ஆப்’களின் உதவியுடன் ஆன்லைன் சீட்டாட்டத்தை விளையாடலாம். இந்த விளையாட்டுகளில் நீங்கள் நேரடியாகப் பங்கேற்கலாம். உலக நாடுகளில் இருந்து பலர் ஒரே நேரத்தில் ஒன்றுகூடி விளையாடும் ஆட்டமாகவும் இதை ஒருவர் விளையாடலாம்.

ஆன்லைன் கேசினோக்கள்

இவை நம் ஊரில் உள்ள கிளப்புகளைப் போன்று இருக்கும். இங்கு சூதாட்டம் மட்டுமே விளையாடப்படுவதால், இவை கேசினோக்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் கோவாவிலும் சிக்கிமிலும் மட்டும் கேசினோக்கள் அரசு அனுமதியுடன் இயங்குகின்றன. மற்ற மாநிலங்களில் இன்னும் தடை நீடிக்கிறது.

நீங்கள் இதனுள் சென்று விளையாட 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால், அதே நேரம் ஆன்லைன் கேசினோவில் வயது வரம்பு கிடையாது. யாராக இருந்தாலும் உங்களிடம் ஒரு ஸ்மார்ட் போன் அல்லது இணையம் இருந்தால் போதும். யார் கண்காணிக்கப் போகிறார்கள்? ஆடும் முன் உங்களுக்குப் பதினெட்டு வயது ஆகிவிட்டதா என்று கேள்வி கேட்கப்படும். நீங்கள் ‘ஆம்’ என்ற பட்டனை அழுத்தினால் போதும். ஒரு குழந்தை தெரியாமல் அழுத்தினாலும், அனுமதி கிடைத்துவிடும்.

ஆன்லைன் கேசினோக்களில் பல வகை சூதாட்டங்கள் ஆடப்படும். அவற்றை எழுத ஆரம்பித்தால் இந்தத் தொடர் போதாது.

‘பெட்டிங்’ விளையாட்டு

சூதாட்டத்தில் எனக்குத் தெரிந்தது மங்காத்தா, ரம்மி ஆகியவைதான். நாமே வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் சில நேரம் இவற்றை விளையாடி இருப்போம். இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றால், யார் ஜெயிப்பார்கள் என்று பந்தயம் வைப்பது. பேட்மிண்டனில் பி.வி. சிந்து தங்கம் வெல்வாரா இல்லையா என பந்தயம் வைப்பது. இதையே நீங்கள் ஆன்லைன் மூலம் செய்யலாம். வென்றால் உங்களுக்குப் பணம் வரும். சில நேரம் ரூ.10 ஆயிரம் கட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுவிட்டால், லட்ச ரூபாய்கூடக் கிடைக்கும். அதுதான் ‘மேட்ச் பிக்ஸிங்!’

நிற்க, அது நமக்குத் தேவையில்லை. ஆன்லைனில் பெட்டிங்கில் ஈடுபடலாம். இந்தியாவில் இன்றுவரை ஆன்லைன் பெட்டிங்குக்கு அனுமதி இல்லை. சிக்கிமில் மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுக்கவும் இதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று பேசப்படுகிறது.

லாட்டரி சீட்டின் ஆன்லைன் வடிவம் ஆன்லைன் லாட்டரி. லாட்டரி சீட்டுக்குத் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிக்கிமில் இன்னும் அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்திலும் விற்பனைக்குத்தான் தடை. ஆனால், ஆன்லைனில் விளையாடத் தடையில்லை.

குதிரைப் பந்தயம்

ஆன்லைனில் குதிரைப் பந்தயத்துக்கு பெட் கட்டி விளையாடுவார்கள். இதில் வசதி என்னவென்றால், நீங்கள் பெட் கட்ட வரிசையில் நின்று நேரத்தை விரயம் செய்யத் தேவையில்லை என்பதுதான்.

மேற்கண்ட ஆன்லைன் சூதாட்டங்களின் சிறப்பம்சம், இந்த விளையாட்டுகள் அனைத்தும் ‘லைவ்’ விளையாட்டுகள். அதாவது, ஆரம்பத்திலிருந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் விதி இல்லை. விளையாட்டு முன்னேறிக்கொண்டிருக்கும்போதுகூட ஒருவர் பெட் கட்டலாம். ஆம், இவை உங்களை எந்த நிலையிலும் எங்கும் ‘இணை’க்கும் சூதாட்டங்கள்!

(அடுத்த வாரம்: சூது ஒரு மனக்கோளாறு!)

கட்டுரையாளர்,டிஜிட்டல் சமூக ஆய்வாளர்

தொடர்புக்கு: write2vinod11@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x