Last Updated : 06 Jan, 2018 11:06 AM

 

Published : 06 Jan 2018 11:06 AM
Last Updated : 06 Jan 2018 11:06 AM

படிப்போம் பகிர்வோம்: உணவு... மனநலம்... மரணம்..!

2017-ம் ஆண்டு மருத்துவத் துறை சார்ந்து தமிழில் வெளியான சில முக்கியமான புத்தகங்கள்...

மருத்துவ மாயங்கள் - டாக்டர் கு.கணேசன்

மருத்துவ உலகம் மிகவும் புதிரானது. டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டுகூட நோயாளிக்குப் புரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற மருத்துவர்கள் வாழ்கிற இக்காலத்தில், 21-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், நவீன சிகிச்சைகள் குறித்து எளிய தமிழில் எழுதியிருக்கிறார் மருத்துவ எழுத்தாளர் கு. கணேசன். மருத்துவச் சொற்களைக் கூறி நம்மை அச்சுறுத்தாமல், குடும்ப நண்பரைப் போன்று விஷயங்களை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு.

காவ்யா பதிப்பகம், 16, 2வது குறுக்குத் தெரு,

டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை-24

இனி இல்லை மரணபயம் - சந்தியா நடராஜன்

மரணம், வாழ்க்கையின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை ஏற்க மறுக்கிற மனம், பயத்தில் வாழ்க்கையின் பெரும்பாலான சந்தோஷத் தருணங்களைக் கொண்டாட விடாமல் செய்கிறது. இதனால் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறவர்கள் நிறைய பேர். மரணத்தைப் பற்றி தேவையில்லாத பயமும் குழப்பமும் கொண்டவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் இந்த நூல்.

சந்தியா பதிப்பகம், புது எண்: 77, 53-வது வீதி,

9வது அவென்யு, அசோக் நகர், சென்னை –83, 044-24896979

விலை - ரூ.100/-

புற்றுநோய்ப் படுக்கையில் சிரிப்பு - இன்னசென்ட் | தமிழில்: மு.ந.புகழேந்தி

இன்னசென்ட் என்று அழைக்கப்படும் இன்னசென்ட் வரீத் தெக்கேதலே மலையாளத் திரைப்பட நடிகர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இவர், அதிலிருந்து மீண்டு வந்த கதையை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். ‘மனிதர்களைச் சிரிக்க வைத்துப் பிழைத்துக்கொண்டுள்ள எனக்கும், கண்ணீர் மற்றும் துக்கத்தினுடைய உலகமான புற்றுநோய்க்கும் எப்படி ஒத்துப் போகும்?’ என்று கேள்வி எழுப்புபவரின் வெற்றிக் கதை இது.

பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை, சென்னை -18

விலை - ரூ.50/-

உணவோடு உரையாடு - அ.உமர் பாருக்

உணவு பசியாற்றுவதற்கு மட்டுமின்றி அதை மருந்தாகவும் பயன்படுத்தலாம். நாம் சாப்பிடும் உணவு, நம் உணவுப் பழக்க வழக்கம் ஆகியவற்றைப் பொறுத்தே மருந்தாகவும் மாறும் தன்மை கொண்டது. நாம் எப்படிப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்நூல் உரையாடுகிறது.

எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி, 04259 226 012

விலை - ரூ.50/-

மருத்துவர் பார்வையில் குழந்தைகள் மனநலம் - டாக்டர் பி.பி.கண்ணன்

குழந்தைகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் சிக்கல்கள், நெருக்கடிகள், கீழ்ப்படியாமை, நடத்தைக் குறைபாடு போன்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் கள அனுபவத்தின் மூலம் விளக்கமாக இந்த நூலில் மருத்துவர் விளக்கியிருக்கிறார். குழந்தைகள் மனநலத் துறையில், தமிழில் நல்ல புத்தகங்கள் வராமல் இருக்கிறது என்ற குறையைப் போக்கும் விதமாக இந்த நூல் அமைந்துள்ளது.

புத்தொளி நல மையம், 64/1, கெங்கு ரெட்டி தெரு,

எழும்பூர், சென்னை - 8

‘தி இந்து’ வெளியீடு மருத்துவ வெளியீடுகள்

ஏன் தெரியுமா?

டாக்டர் கு. கணேசன்

சாதாரணத் தலைவலி முதல் மாரடைப்புவரை, நமக்கு உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள், பிரச்சினைகள், அவை ஏன் ஏற்படுகின்றன, அவற்றுக்கு என்ன தீர்வு என்பதைப் பற்றி மருத்துவர் கணேசன் எழுதியிருக்கும் பிரபல நூல் இது.

பதின் பருவம் புதிர் பருவமா?

டாக்டர் ஆ.காட்சன்

பதின் பருவத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து மனநல மருத்துவர் காட்சன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு.

பரிசோதனை ரகசியங்கள்

டாக்டர் கு. கணேசன்

எக்ஸ்-ரே எடுப்பது முதல் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள்வரை, அவை ஏன் முக்கியம், எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த பரிசோதனைகள் என்பதைப் பற்றி சாமானியர்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் எழுதப்பட்ட நூல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x