Published : 20 Dec 2014 03:28 PM
Last Updated : 20 Dec 2014 03:28 PM

பெருகி வரும் கிரீன் டீ மோகம்

தேநீருக்குச் சிறந்த மாற்றாகவும், ஆரோக்கிய மானதாகவும் கருதப்படும் கிரீன் டீயைச் சிறு தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்து லாபம் ஈட்டலாம்.

சுற்றுலாவும், தேயிலையும் நீலகிரி மாவட்டப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. தேயிலை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுவரும் எல்லோருக்கும் தேயிலைத் தொழில் லாபத்தை அள்ளித் தருகிறது. ஆனால், பசுந்தேயிலை எனப்படும் கிரீன் டீயைச் சாகுபடி செய்யும் சிறு தேயிலை விவசாயிகளுக்கு மட்டும் அந்த லாபம் கிடைப்பதில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி மூலப்பொருளான பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ள விவசாயிகள், மெல்ல மெல்லத் தேயிலை விவசாயத்தையேக் கைவிட்டு வருகின்றனர். இன்றைக்கு ஒரு கப் தேநீர் ரூ.10. ஆனால், ஒரு கிலோ பசுந்தேயிலையின் விலையோ வெறும் ரூ.8 தான்.

சிறு தொழிற்சாலை

இப்படிப் பசுந்தேயிலைக்கு விலை குறைந்து வரும் நிலையில், “சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் பசுந்தேயிலையை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம் லாபம் ஈட்டலாம்” என்கிறார் நீலகிரி தேயிலை மேம்பாட்டு அறக்கட்டளைத் தலைவர் சிவன். “நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்தை மேம்படுத்தவும், லாபகரமாகச் செயல்படுத்தவும் தற்போது மைக்ரோ மற்றும் மினி கிரீன் டீ தொழிற்சாலைகள் அமைக்கத் தேயிலை வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்மூலம் விவசாயிகள் தாங்களே தேயிலைத் தூள் உற்பத்தி செய்து வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம். தங்களது தோட்டங்களிலேயே தொழிற்சாலைக்கான தேயிலை அரவை இயந்திரங்களை நிறுவி, தரமான தேயிலை தூளை உற்பத்தி செய்ய முடியும். இதற்கான முதலீடு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம்வரை. விவசாயிகள் குழுவாகச் சேர்ந்தும் மைக்ரோ தொழிற்சாலைகளை அமைக்கலாம். இந்தச் சிறிய தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 400 கிலோ தேயிலை அரைக்கப்பட்டு, 100 கிலோ தேயிலை தூளை உற்பத்தி செய்ய முடியும்.

மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை

இந்தத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தனித்தன்மை கொண்ட, மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை வகைகள் மூலம் பார்கின்சன்ஸ் நோய், அல்சைமர்ஸ், பல் சொத்தை, கொழுப்பு, ரத்த அழுத்தம், தோல் நோய்களைக் குணப்படுத்தும் கிரீன் டீ, வொயிட் டீ ஆகியவற்றை உற்பத்தி செய்யலாம். இதற்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளதால் ஏற்றுமதி செய்யவும் முடியும்” என்கிறார் சிவன். மைக்ரோ தொழிற் சாலைகள் அமைக்கத் தேயிலை வாரியம் மூலம் கடனுதவி மற்றும் மானியமும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் அறிய 94438 56694/ 98439 08540 ஆகிய செல்போன் எண்களில் சிவனை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x