Published : 03 Mar 2018 01:01 PM
Last Updated : 03 Mar 2018 01:01 PM

இது நம்ம விலங்கு 05: சிப்பாய் நடைபோடும் ஆடு

மிழகத்தில் காணப்படும் வெள்ளாட்டினங்களில் மிகவும் உயரமான ஆட்டினம், இந்த கன்னி ஆடுகள். உடல் முழுவதும் கறுப்பாக இருக்க, அதில் ஆங்காங்கே வெள்ளை நிறம் அல்லது செம்பழுப்பு நிறம் தட்டுப்படும். குறிப்பாக, காதுகள், வயிற்றின் அடிப்பகுதி, கால்கள் ஆகிய பகுதிகள் வெள்ளை அல்லது செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். வெள்ளை நிறம் அதிகமாக இருந்தால், அதை 'பால் கன்னி' எனவும், செம்பழுப்பு நிறம் அதிகமாக இருந்தால் அதை 'செங்கன்னி' எனவும் அழைக்கப்படுகின்றன.

கரிசல் பூமி, குன்றுகள் அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த ஆடுகள் தென்படுகின்றன. வறட்சி மிகுந்த பகுதிகளிலும் இவை நன்றாக வளரக் கூடியவை. அதனால்தான், ராமநாதபுரம் மாவட்டத்திலும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வெம்பக் கோட்டை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டம் புதூர், கயத்தாறு, கோவில்பட்டி ஆகிய பகுதிகளிலும், திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளிலும் இந்த வகை ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இதுபோன்ற வறட்சிப் பகுதிகளில் இதர கால்நடைகளைவிட, வெள்ளாடு வளர்ப்பே சிறந்தது என்கிறார்கள் வேளாண் நிபுணர்கள்.

ஆண் ஆடு, பெண் ஆடு ஆகிய இரண்டுக்கும் கொம்புகள் இருக்கும். ஆண் ஆட்டை 'கிடா' ஆடு என்றும், பெண் ஆட்டை 'பெட்டை' ஆடு என்றும் ஊர்ப்புறங்களில் அழைக்கின்றனர். ஆண் ஆடு 35 முதல் 40 கிலோவரையும், பெண் ஆடு 25 முதல் 30 கிலோவரையும் எடை கொண்டவை.

இந்த வகை ஆடுகள் மந்தையாகச் செல்லும்போது, அதன் கால் அசைவுகள் ராணுவ வீரர்களைப் போல வரிசையாக அமைந்திருக்கும். இதனால் இவை 'சிப்பாய் நடை ஆடுகள்' என்றும் அழைக்கப்படுகின்றன. தவிர‌ இவற்றின் காது, நெற்றியில் கோடுகள் காணப்படுவதால் இவற்றை 'வரி ஆடுகள்' என்றும் அழைக்கிறார்கள்.

இந்த ஆடுகள் முதல் முறை மட்டும் எட்டு முதல் பத்து மாதத்தில் சினை பிடிக்கும். அதன் பிறகு, ஒவ்வொரு ஏழு மாதத்துக்கு ஒரு முறை குட்டி போடும். இவை, ஒரே நேரத்தில் இரண்டு முதல் மூன்று குட்டிகள்வரை ஈனுகின்ற ஆற்றல் உடையவை. பிறந்த பிறகு தனது குட்டிகளுக்கு, தாய் ஆடே மூன்று மாதம்வரை பால் கொடுத்துப் பராமரிக்கும்.

பிறக்கும்போது, கிடா ஆட்டுக் குட்டிகளின் எடை சுமார் 2.1 கிலோவாகவும், பெட்டை ஆட்டுக் குட்டிகளின் எடை சுமார் 2 கிலோ எடையுடனும் இருக்கும். பிறந்த ஒரு வருடத்தில் கிடா ஆடுகள் சுமார் 22 கிலோ எடையையும், பெட்டை ஆடுகள் சுமார் 21 கிலோ எடையையும் கொண்டதாக வளர்ந்துவிடும். அப்போது, கிடா சுமார் 76 செ.மீ. உயரமும், பெட்டை சுமார் 72 செ.மீ. உயரமும் கொண்டிருக்கும்.

இந்த ஆடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காகவும் தோலுக்காகவுமே வளர்க்கப்படுகின்றன. செம்மறி ஆட்டைவிடவும் இந்த வெள்ளாட்டினம் பொருளாதார நன்மையை அதிகம் தரக் கூடியது என்கிறார்கள் கால்நடை ஆய்வாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x