Last Updated : 11 Nov, 2017 11:12 AM

 

Published : 11 Nov 2017 11:12 AM
Last Updated : 11 Nov 2017 11:12 AM

நண்டும் நத்தையும் ஊற…

 

மு

ன்பெல்லாம் நெல் வயல்களின் வரப்புகளில் ஏராளமான துளைகள் காணப்படும். இந்தத் துளைகளில் நண்டும் நத்தையும் வசிக்கும். மழை பெய்யும் சத்தத்தைக் கேட்டாலே இந்த நண்டும் நத்தைகளும் துளையை விட்டு வெளியே வந்து அங்குமிங்கும் ஓடி விளையாடும். களிமண்ணில் நண்டுகளின் கால் தடங்களைப் பார்க்கும்போது பாத்திரத்தில் புள்ளிகள்இட்டது போல் காணப்படும்.

கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் இந்த வயல் நண்டுகளைப் பிடித்துச் சமைத்துச் சாப்பிட்டுவந்தனர். அதேபோல் நத்தையும் மருத்துவக் குணம் கொண்டுள்ளதால் அவற்றையும் பிடித்துச் சமைத்துச் சாப்பிட்டனர்.

வயல் வரப்புகளில் முன்பெல்லாம் அதிக அளவு காணப்பட்ட இந்த நண்டுகளும் நத்தைகளும் இன்று அரிதாகியுள்ளன. இதற்குக் காரணம், வயல்களில் தெளிக்கப்பட்டு வந்த களைக்கொல்லிகள்தான். அவற்றின் காரத்தன்மையால்தான் நண்டு, நத்தை இனங்கள் அழிந்து வருகின்றன.

இதுகுறித்து தூத்துக்குடி வேளாண் அலுவலர் ‘பூச்சி’ செல்வம் கூறும்போது, “வயலில் உள்ள தண்ணீரில் மீன்கள், தவளைகள் போன்ற உயிரினங்கள் வசித்துவந்தன. வயலுக்குத் தெளிக்கப்பட்ட ரசாயனத்தால் அங்கு தேங்கிய நீர் விஷமானது. அதனால் தலைப்பிரட்டைகள், மீன்கள் ஆகியவை அழியத் தொடங்கின. அந்த ரசாயனம் மண்ணையும் பாதித்தது. இதனால் மண்ணில் ஊர்ந்து செல்லகூடிய நண்டும் நத்தையும் பாதிக்கப்பட்டன.

இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிக்கும் விவசாயிகள் வயலில் பூச்சிகளும், நண்டு நத்தையும் அதிமாக இருக்கின்றன. அதேபோல விவசாயிகள், ரசாயனத்தைக் குறைத்தால் மண் வளம் பெருகுவதோடு, மீண்டும் நண்டும் நத்தையினமும் நம் வயல்களில் நடமாடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x