Last Updated : 18 Jul, 2015 01:17 PM

 

Published : 18 Jul 2015 01:17 PM
Last Updated : 18 Jul 2015 01:17 PM

நம் நெல் அறிவோம்: பசித்தவனுக்கு ஏற்ற கலியன் சம்பா

ஒரு பகுதியின் மண்ணைப் பொறுத்துத்தான் நெல் சாகுபடி நடைபெறும். கரிசல் மண், வண்டல் மண், களிமண் எனப் பல மண் வகைகள் தமிழகத்தில் இருந்தாலும், பரவலாகக் களிமண் நிலத்திலேயே நெல் சாகுபடி செய்யப்படுகிறது. களிமண்ணுக்கு ஏற்ற நெல் ரகம் கலியன் சம்பா.

பசித்தவனுக்கு ஏற்ற ரகம்

கலியன் என்றால் `பசித்தவன்’ என்று ஒரு பொருள் உண்டு. பசித்தவருக்கு ஏற்ற நெல் ரகமாகவும் ஐந்தடி வரை வளரக்கூடிய நெல் ரகமாகவும் கலியன் சம்பா விளங்குகிறது. `வெள்ளமே போனாலும் பள்ளமே விளையும்’ என்ற பழமொழிக்கு ஏற்பப் பள்ளமான பகுதிகளுக்கு ஏற்றது. இயற்கையாகவே கலியன் சம்பாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் பயிருடன் ஒரு வகையானகளையும் அதிகமாக இருப்பதால் பூச்சித் தாக்குதலும் இருக்காது.

2 கிலோ விதை போதும்

நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளில் கலியன் சம்பா பெரும்பாலும் சாகுபடி செய்யப்பட்டுவந்துள்ளது. சாதாரண நடவு முறை, திருந்திய நெல் சாகுபடி (ஒற்றை நடவு முறைக்கு) ஏற்ற ரகம். சாதாரண அளவில் ஏக்கருக்கு முப்பது கிலோவும், திருந்திய நெல் சாகுபடிக்குத் தரமான இரண்டு கிலோ விதையும் போதும். இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரும் இந்த ரகத்துக்குச் சாயும் தன்மை குறைவு.

சிவப்பு நெல், சிகப்பு அரிசி, மோட்டா ரகம். இட்லி, தோசை போன்ற உணவு வகைகளுக்கு ஏற்ற ரகம்.

நோய் எதிர்ப்புத் திறன்

பாரம்பரிய நெல் என்று சொன்னாலே மருத்துவக் குணம் கொண்டதாகவே இருக்கும். அந்த வகையில், கலியன் சம்பா அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்துவந்தால், நீண்ட காலமாக ஆறாத புண்கள்கூட ஆறும். புற்றுநோய் வந்தவர்களுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இந்த ரகத்துக்கு இயற்கை யாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.

- நெல் ஜெயராமன், தொடர்புக்கு: 94433 20954.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x