Last Updated : 29 Jul, 2014 03:12 PM

 

Published : 29 Jul 2014 03:12 PM
Last Updated : 29 Jul 2014 03:12 PM

மரம் தரும் ஆக்சிஜன்: ஆண்டுக்கு ரூ. 23 கோடி -உலக இயற்கை பாதுகாப்பு நாள்: ஜூலை 28

ஒவ்வொரு மரமும் ஒரு வரம். ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் அளவின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.23 கோடி என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது.

ஒரு மரத்தின் மதிப்பு விலை மதிக்க முடியாதது. ஆனால், அதன் உண்மையான மதிப்பை உணர்ந்துகொள்ளப் பொருளாதார ரீதியில் அதை மதிப்பிட வேண்டி யிருக்கிறது. இதை டெல்லி கிரீன்ஸ் அமைப்பு செய்திருக்கிறது.

ஒரு வளர்ந்த ஆள் ஒரு நிமிடத்துக்கு 7-8 லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறார். அதாவது, ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் காற்றை. இதில் 20 சதவீதம் ஆக்சிஜன். அப்படியென்றால், ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்சிஜனை கிரகித்துக்கொள்கிறார். 2.75 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.6,500. இதைக் கொண்டு கணக்கிட்டால் ஒரு மனிதன் ஒரு நாளைக்குச் சுவாசிக்கும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.13 லட்சம்.

மரங்கள் தரும் சேவைகளை மதிப்பிட்ட ஆராய்ச்சிகளை ஒப்பு நோக்கும்போது 2 வளர்ந்த மரங்கள், ஒரு நபருக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஆண்டுக்கு ரூ.23 கோடி.

இயற்கை பாதுகாப்பு

ஒரு மரம் தரும் ஆக்சிஜனின் மதிப்பே இவ்வளவு என்றால், அது நமக்குத் தரும் மற்ற சேவைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மரத்தைப் போன்று இயற்கையும் அதிலுள்ள பல்வேறு உயிரினங்களும் தாவரங்களும் மனித குலத்துக்குக் காலங்காலமாகச் செய்துவரும் சேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், உலக இயற்கை பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) அனுசரிக்கப்படுகிறது.

நாம் உயிர் வாழ சுவாசிக்கும் காற்று முதல் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் உருவாக்குவதற்கான மூலப்பொருள் வரை அனைத்தும் இயற்கையிடம் இருந்தே கிடைக்கின்றன. கணக்கற்ற இந்த இன்றியமையாத சேவைகளைக் காசு வாங்கிக் கொள்ளாமல், ஒவ்வொரு விநாடியும் இயற்கை நமக்கு வழங்கிவருகிறது.

அழியும் இயற்கை

1970-களுக்குப் பிறகு இயற்கை வளங்களை மனித குலம் பயன் படுத்தும் விகிதம் இரண்டு மடங் காக அதிகரித்து, 33 சதவீத இயற்கை வளங்களைப் பூமி இழந்தி ருக்கிறது என்று உலக இயற்கை நிதியம் (WWF) கூறுகிறது. பல உயிரினங்களின் அழிவு இதற்கு எடுத்துக்காட்டு.

இயற்கையைப் பாதுகாக்கவில்லை என்றால், எதிர் காலத்தில் ஒட்டுமொத்த அழிவு (mass extinction) விரைவாக நிகழ வாய்ப்பு அதிகம் என்று உயிரியல் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கின்றனர்.

இயற்கை வளங்களைப் புத்திசாலித்தனமாக நிர்வகித்து, பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை, இயற்கை பாது காப்பு நாளின்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் வளங்குன்றாத வளர்ச்சியை உருவாக்கவும், சூழலுக்கு இணக்கமான பசுமை வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் வேண்டிய அத்தியாவசியம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x