Published : 07 Oct 2014 12:45 PM
Last Updated : 07 Oct 2014 12:45 PM

மண்ணைக் காக்க உயிர் தந்த கவிஞர் - கென் சரோ விவா பிறந்த நாள்: அக். 10

சுற்றுச்சூழல்-மனித உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைத் துறந்தவர் நைஜீரியக் கவிஞர் கென் சரோ விவா.

இயற்கை வளங்கள் செழித்து நிரம்பியிருக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது நைஜீரியா. அங்குள்ள நைஜர் பாசனப் பகுதி உலகப் புகழ்பெற்றது. ஒரு காலத்தில் அதற்குக் காரணமாக விவசாயமாக இருந்தது. அதற்கு ஆதாரமாக அந்தப் பகுதியில் 70,000 சதுரக் கிலோமீட்டர் பரப்புக்குப் பரவியிருந்த சதுப்புநிலப் பகுதிகள் இருந்தன. இங்கு 40 மாறுபட்ட பழங்குடி இனக்குழுக்களைச் சேர்ந்த 2 கோடி மக்களுக்கு அது வாழ்வளித்து வந்தது.

பெட்ரோலிய ஆதிக்கம்

ஆனால், விவசாயத்தை அழித்துப் பெட்ரோல் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. ஓகோனி பகுதியில் இருந்த எண்ணெய் வயல்களில் ராயல் டச் ஷெல் நிறுவனம் 1958-ம் ஆண்டு கச்சா எண்ணெய் எடுக்க ஆரம்பித்தது. இப்போதுவரை சுமார் ரூ. 60,000 கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட பெட்ரோலை அந்நிறுவனம் துரப்பணம் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இப்பகுதியில் கிடைக்கும் பெட்ரோலைத் துரப்பணம் செய்வதில் இன்றைக்கும் ஆதிக்கம் செலுத்துவது ஷெல் பெட்ரோலிய நிறுவனம்தான். நைஜீரியாவில் முதன்முதலில் பெட்ரோல் துரப்பணம் செய்ய ஆரம்பித்த நிறுவனம், 2 எண்ணெய் வயல்களை கைவசம் வைத்துள்ள நிறுவனம், 50 சதவீதத் துரப்பணத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிறுவனம் ஷெல்.

சூழலியல் சீர்கேடு

பெட்ரோலியத் துரப்பணம் காரணமாக இந்தப் பகுதியில் வாழும் 5.5 லட்சம் விவசாயிகள், மீனவர்களுக்கு வாழ்வாதாரம் அளித்துவந்த சுற்றுச்சூழல் சீர்கெட்டது. வளமான மண்ணாக இருந்த அப்பகுதி வயல்கள், எண்ணெய் கசிவாலும் அமில மழையாலும் மலடாகின. எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதி ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு இருந்தது. காட்டுயிர்களும் மீன்களும் இறுதிமூச்சு விட்டன.

மக்கள் குரல்

அப்பகுதியில் அதிகமாக வாழும் ஓகோனி பழங்குடி மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் கவிஞர் கென் சரோ விவா. எழுத்தில் வெளிப்பட்ட வீரியம், சமூகம் சார்ந்த அவரது செயல்பாடுகளிலும் உக்கிரமாக வெளிப்பட்டது. வலுவான பன்னாட்டு நிறுவனமான ஷெல்லை எதிர்ப்பதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை.

1990-ம் ஆண்டில் ‘ஓகோனி பழங்குடிகள் வாழ்வுரிமை இயக்கத்தை' கென் சரோ விவா நிறுவினார். எண்ணெய் மூலம் பெற்ற வருமானத்தில் பழங்குடி மக்களுக்குப் பங்கு தர வலியுறுத்தியும், அரசியல் சுயநிர்ணய உரிமை கோரியும் 3,00,000 ஓகோனி மக்களுடன் 1993-ம் ஆண்டில் கென் அமைதி நடைபயணம் மேற்கொண்டார்.

சிறையும் தூக்கும்

ஷெல் நிறுவனத்தை தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில், நான்கு ஓகோனி தலைவர்கள் கொல்லப்பட்ட பிரச்சினையில் கென் சரோ விவா கைது செய்யப்பட்டார். "கென்னை சிறைப்படுத்தியிருப்பது, நைஜர் பகுதியின் மனசாட்சியைச் சிறைப்படுத்தியது போன்றது" என்று சர்வதேச மனிதஉரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அப்போது கூறியிருந்தது. மற்றொருபுறம் ஓகோனி நிலப் பகுதிகளை நைஜீரிய ராணுவம் கைப்பற்றியது.

ராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, 1995 நவம்பர் 10-ம் தேதி கென் சரோ விவாவும் அவரது நண்பர்கள் எட்டு பேரும் தூக்கிலிடப்பட்டனர். கென் சரோ விவாவின் சடலம்கூட அவரது உறவினர்களிடம் தரப்படவில்லை. கூட்டமாகச் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அவரது சடலம் புதைக்கப்பட்டுவிட்டது.

தொடரும் போராட்டம்

கென் சரோ விவா தூக்கிலிடப்பட்ட காலத்தில் நைஜீரியாவை ஆண்ட ராணுவ சர்வாதிகாரி ஜெனரல் சனி அபாஷா 1998-ம் ஆண்டு திடீரென்று இறந்தார். இருந்தாலும், ஓகோனி பகுதி இப்பொழுதும் ராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.

தற்போது வெளிநாட்டில் வாழும் கென்னின் மகன் பத்திரிகையாளர் கென் விவா, இளைய சகோதரரும் மருத்துவருமான ஓவன்ஸ் விவா ஆகியோர் ஓகோனி மக்கள் சார்பில் போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர்.

"சிறைக்குள் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் கொள்கைகளுக்காக வாழ்பவன் நான். எனது கொள்கைகள் வாழும்" என்று கென் ஒரு முறை கூறியிருந்தனர். அவரது கொள்கைகள் வாழும், சந்தேகமில்லை.

- ஆதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x