Published : 11 Jul 2015 02:05 PM
Last Updated : 11 Jul 2015 02:05 PM

பூச்சிக்கொல்லிகளால் விவசாயிகள் சந்திக்கும் ஆபத்துகள்

நம்மூர் விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு மிக அதிக அளவில் இருக்கிறது. இதைப் பாதுகாப்பு இல்லாமல் கையாளுவதால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் மோசமடைகின்றன. நீண்டகாலம் பூச்சிக்கொல்லிகளுடன் புழங்குவதால், உயிருக்கே ஆபத்துகூட நேரலாம்.

சரி, பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை எவ்வாறு குறைப்பது?

இந்தியப் பண்பாட்டில், மக்களின் வாழ்க்கையும் வாழ்வின் நடைமுறைகளும் விவசாயத்தோடு இணைந்துள்ளதாகக் கருதப்படுகின்றன. பண்டைய விவசாய முறைகளில், ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வெப்பமான வானிலையில் குறைந்த ஆடைகளை அணிந்துகொண்டு விவசாயிகள் வேலை செய்வதைப் பார்த்திருப்போம். இன்றைய வேளாண்மை, ரசாயனத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, ரசாயனங்களின் நஞ்சுத் தன்மையுடைய விளைவுகளிலிருந்து விவசாயிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், பூச்சிக்கொல்லிகள் அல்லது உரங்களைக் கையாளும்போது பாதுகாப்பு உடைகளையும் கருவிகளையும் மக்கள் பயன்படுத்துவதில்லை. அதற்கான காரணங்கள் என்ன?:

1. சோம்பேறித்தனத்தால் தொழிலாளிகள் பாதுகாப்புக் கருவிகளைப் பயன்படுத்துவதில்லை என்று சில முதலாளிகள் கூறுகின்றனர்.

2. வெப்பமான தட்பவெப்பநிலையில் பாதுகாப்புக் கருவிகளை அணிவது வசதியாக இல்லை.

3. பாதுகாப்புக் கருவிகளும் உடைகளும் பெரியதாகவோ, சிறியதாகவோ, கிழிந்தோ இருக்கும்.

பெரும்பாலும் தோட்டத் தொழிலாளிகள் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த விரும்ப மாட்டார்கள். தமக்கும் தம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உடல்நலக் கேடு ஏற்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால், வியாபார நோக்கத்தில் பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் மற்றவர் நிலங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளிகளுக்கும் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவதைத் தவிர, வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

நீங்கள் பூச்சிக்கொல்லிகளைக் கையாளும்போது, அவற்றை மிகுந்த கவனத்துடன் கையாளுங்கள். உங்களுடைய நலனுக்கும் மற்றவர்களுடைய நலனுக்கும் சுற்றுப்புறத்தின் நன்மைக்கும் பொறுப்புடையவராக நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். உங்களையும் உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள்ள கீழ்வருவனவற்றைச் செய்யுங்கள்:

முடிந்தவரை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்.

தனியொரு ஆளாக இருக்கும்போது பூச்சிக்கொல்லிகளைக் கையாளாதீர்கள்.

குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகளைக் குறிப்பிட்ட பயிர்களின் மீது மட்டுமே பயன்படுத்துங்கள்.

குறைந்த அளவிலேயே பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள். அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது நல்லதல்ல.

பல வகையான பூச்சிக்கொல்லிகளை ஒன்றுசேர்த்துக் கலக்காதீர்கள்.

உங்கள் உடலுக்குச் சமீபமாகப் பூச்சிக்கொல்லிகளை வைக்காமல், தொலைவில் வைத்திருங்கள்.

பூச்சிக்கொல்லிகளை மற்றவர்கள் கையாளுவதற்கு வாய்ப்பில்லாதவாறு வைத்திருங்கள்.

நீர்நிலைகளிலிருந்து பூச்சிக்கொல்லிகளைத் தொலைவில் வையுங்கள்.

காற்று வேகமாக வீசும்போதும், மழை பெய்யும்போதும் அல்லது மழை பெய்வதற்கு முன்பும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாதீர்கள்.

பூச்சிக்கொல்லியை பயன்படுத்துவதற்கு முன், உங்கள் ஆடைகள் உங்களை முழுவதுமாக மூடியுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

பூச்சிக்கொல்லிகளைக் கையாளும்போது உங்கள் கண்களையும் முகத்தையும் கழுத்தையும் தொடாதீர்கள்.

உண்பதற்கு முன், குடிப்பதற்கு முன், உங்கள் முகத்தைத் தொடுவதற்கு முன், கைகளை நன்கு கழுவுங்கள்.

பாதுகாப்பு உடைகளும் கருவிகளும் உங்களிடமிருந்தால் அல்லது அவற்றை நீங்கள் பெற முடிந்தால், அவற்றைப் பயன்படுத்துங்கள்.

பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வயல்களில், தோட்டங்களில், பாதுகாப்பாகச் செல்ல முடியுமா என்று தெரிந்துகொண்ட பின்னரே செல்லுங்கள்.

பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திய பின்னர் நன்கு குளியுங்கள்.

தோட்டங்களில், வயல்களில் வேலை செய்யும்போது…

உங்கள் பாதுகாப்பு உடைகளைக் கேட்டுப் பெறுங்கள் அல்லது வாங்கிக்கொள்ளுங்கள்.

பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பு உடைகளை அணியுங்கள்.

உங்களிடம் பாதுகாப்புக் கருவிகள் இல்லையென்றால் மழைக்கு அணியும் உறைகளை (ரெய்ன் கோட்) அல்லது பெரிய பிளாஸ்டிக் பைகளைக்கொண்டு பாதுகாப்பு உடைகளைச் செய்து, அவற்றைப் பயன்படுத்தலாம். உங்கள் தலைக்கும், கைகளுக்கும் ஏற்ற துணிகளை உருவாக்கிக்கொண்டு அணியலாம். மற்ற பிளாஸ்டிக் பைகளை உங்கள் கைகளுக்கும் கால்களுக்கும் அணிந்துகொண்டு பணிபுரியலாம்.

பூச்சிக்கொல்லிகள் நஞ்சாகும்,

ஜெஃப் கொனன்ட்,

அடையாளம் வெளியீடு, 1205/1, கருப்பூர் சாலை,

புத்தாநத்தம் - 621310,

தொடர்புக்கு: 04332-273444

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x