Last Updated : 28 Oct, 2016 07:20 PM

 

Published : 28 Oct 2016 07:20 PM
Last Updated : 28 Oct 2016 07:20 PM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 07: கொள்கிறோம், கொடுக்கிறோமா?

மணிக்கு ஓர் உயிரினம் உலகத்தை விட்டு மறைகிறது, நான்கு நொடிக்கு ஒரு மனித உயிர் பெருகுகிறது.

பண்ணை வடிவமைப்பின் அறக் கோட்பாடுகளில் மண்ணையும் மக்களையும் பேண வேண்டும் என்பது ஒரு கோட்பாடு. அளவான நுகர்வும், தேவைக்கு அதிகமானதை மற்றவர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் பகிர்வது அடுத்த கோட்பாடு. அதாவது பகுத்து உண்ணுதலும், மற்றவர்களுக்குப் பகிர்தலுமே அது.

உயிர்களுக்கான தேவைகளை நிறைவு செய்வதற்கு அளவின்றிக் கொட்டிக் கொடுக்கிறது இந்தப் பூவுலகு. ஆனால், உலகில் பல உயிர்கள் வாழ்ந்தாலும் மனித இனம் மட்டுமே அதிகம் முன்னேறிய உயிரினமாக உள்ளது. எனவே, அதற்குத்தான் தனிக் கடமையும் உள்ளது. தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு சீரிய முறையில் மற்ற உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய இடத்தில் மனித இனம் உள்ளது.

முதல் முதல் பறிக்கும் மாங்கனியை நாம் சுவைக்கும்போது பெறும் இன்பம் அளவில்லாதது. ஆனால், அந்தக் கனிகள் தொடர்ச்சியாகக் கிடைக்கும்போது முதலில் பெற்ற இன்பத்தின் அளவு மாறுபடுகிறது. ஆனால், மாமரமோ தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுக்கிறது. ஏனென்றால், அது கொடுப்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மற்ற உயிர்களுக்கு மட்டுமல்ல, தனது இனத்தைப் பெருக்கிக்கொள்ளவும்தான்.

ஆகவே அது தனக்கானதை இயற்கையில் எடுத்துக்கொண்டு மீதமாவதைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கிறது. இந்தக் கொடைவழங்கல் என்பது மிக இன்றியமையாதது.

சுழற்சி பாதிப்பு

மேற்கண்டதை அப்படியே நாம் ஒரு பண்ணையத்தில் பொருத்திப் பார்ப்போம். பண்ணையில் கரும்பு சாகுபடி செய்கிறோம். அந்தச் செயல்பாட்டில் மண்ணின் பங்கும் - அதாவது நுண்ணுயிர்களின் பங்கும், நீரின் பங்கும், காற்றின் பங்கும், ஊட்டச்சத்துகளின் பங்கும், பண்ணையாளரின் பங்கும் கலந்துள்ளன. கரும்பை அறுவடை செய்த பின்னர், அந்த விளைச்சலின் பகிர்வு முறையாகச் செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்தால், இல்லை என்பது தெரியவரும்.

அதாவது ஒரு ஏக்கரில் இருந்து வெளியேறும் கரும்பின் அளவு, ஏறத்தாழ 60 டன் என்று வைத்துக்கொண்டால் (90 டன் எடுப்பவர்களும் உண்டு), 1,000 கிலோவுக்கு 100 கிலோ சர்க்கரை கிடைக்கும், மீதமுள்ள கருப்புச் சக்கை, தோகை போன்ற அனைத்தும் மண்ணுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும். ஆனால், அவை ஆலைகளில் எரிக்கப்படுகின்றன அல்லது தோட்டத்திலேயே எரிக்கப்படுகின்றன. இதனால் மண்ணின் வளம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இங்கு பகிர்தலும் பகுத்துண்ணலும் தடைபட்டுள்ளது. அதுவே பண்ணை விளைச்சலைப் பாதிக்கிறது.

எல்லை உண்டு

அடுத்ததாக, நுகர்வுக்கு ஒரு எல்லை ஒன்று உண்டு. காந்தியடிகள் கூறுவதுபோல, இந்தப் பூவுலகு அனைவரது தேவையையும் நிறைவு செய்யும். ஆனால், அனைவரது பேராசையையும் நிறைவு செய்ய அதனால் இயலாது. ஏன் ஒருவரது பேராசையைக்கூட நிறைவு செய்ய இயலாது. அதேபோல ஒரு பண்ணையும் பண்ணையாளரின் தேவையை நிறைவு செய்ய முடியும், ஆனால் அவரது பேராசையை நிறைவு செய்ய இயலாது.

எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு. நெல்லின் விளைச்சலை ஒரு அளவுக்கு மேல் அதிகரித்துக்கொண்டே செல்ல முடியாது. ஒரு கட்டத்தில் விளைச்சலின் அளவு நின்றுவிடும். பகிர்வும் பகுத்துண்ணலும் இல்லாவிட்டால் நிலையான விளைச்சல் வீழ்ச்சியடையும்.

அதுதான் பசுமைப் புரட்சியில் நாம் சந்தித்த அவலம். இந்த நிலையிலும் அறவியல் கோட்பாட்டைத் தூர விலக்கி வைத்துவிட்டு, மரபீனி மாற்ற விதைகள் மூலம் சிக்கலைத் தீர்த்துவிடலாம் என்று பழைய பயன்தராத அறிவியல் கோட்பாடுகளைத் தூக்கிப் பிடிக்கும் அறிவியலாளர்களை என்னவென்பது?

(அடுத்த வாரம்: மறக்கக் கூடாத அடிப்படைகள்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x