Published : 26 Sep 2015 12:26 PM
Last Updated : 26 Sep 2015 12:26 PM

கிழக்கில் விரியும் கிளைகள் 2: உணவுத் தாவரங்கள்: பழங்குடிகள் தந்த கொடை- கொல்லி மலை

உலகிலுள்ள பூக்கும் தாவரங்களில் ஏறத்தாழப் பத்தில் ஒரு பங்கு (25,000 சிற்றினங்கள்) இந்தியாவில் காணப்படுகின்றன. அதனால், உலகில் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவின் தாவர வளம் மிகுந்துள்ள பகுதிகளில் முக்கியமானது கிழக்கு மலைத்தொடர்.

இந்தியாவின் ஆறில் ஒரு பங்கு தாவரங்கள் (ஏறத்தாழ 200 தாவரக் குடும்பங்களைச் சேர்ந்த 4,200 சிற்றினங்கள்) இந்த மலைத்தொடரில் காணப்படுகின்றன. இந்தச் சிற்றினங்கள், பல்வேறு காடு வகைகளைச் சேர்ந்தவை. இவை மரங்கள்-குறுமரங்களாகவோ, செடிகளாகவோ, கொடிகளாகவோ வளர்கின்றன. தமிழ்நாட்டு கிழக்கு மலைத்தொடரில் மட்டும் 2,500 சிற்றினங்கள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

மரபுப் பொக்கிஷம்

இந்த மலைத்தொடர்களில் வாழும் பழங்குடி மக்கள் (ஏறத்தாழ 54 இனங்கள்) இயற்கையோடு இயைந்த தம்முடைய நீண்டகால வாழ்க்கையின் மூலம், தாவரங்களின் பயன்களைக் கண்டறிந்துள்ளனர். அதன்வழியாக 550 சிற்றினங்கள் மருத்துவத் தாவரங்களாகவும், 85 கால்நடை மருத்துவத் தாவரங்களாகவும், 320 உணவுத் தாவரங்களாகவும், 570 இதர பயன்பாட்டு தாவரங்களாகவும் அவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சில தாவரங்கள் வழங்கிவரும் தொடர் பயன்களின் அடிப்படையில், அந்தத் தாவரங்களை இயல் நிலையிலிருந்து (Wild status), பயிர்த்தாவரங்களாக (Domesticated crops) மாற்றிய பெருமை அவர்களையே சாரும். எனவே இந்த மலைத்தொடர், முதன்மை/இரண்டாம் நிலை பயிர்த்தாவரத் தோற்றம் மற்றும் விரவலாக்க வள மையங்களில் (Centers of origin and diversification of cultivated plants) ஒன்றாக உள்ளது.

உணவுக் கிண்ணம்

நெல், உளுந்து, வாழை, மா, எள், மரப்பருத்தி, சில சிறுதானியங்கள், புடலை, வெள்ளரி, இலந்தை, சில கீரைகள் என இந்தியாவில் தோன்றி - விரிவடைந்த ஏறத்தாழ 120 பயிர்த் தாவரங்களில் சிலவும், 325 இதர பயன் தாவரங்களில் சிலவும் இங்குத் தோன்றியவைதான். அதற்குச் சான்றாக இங்குக் காணப்படும் பயிர்த்தாவர இயல் உறவினர்களையும் (Wild relatives), நில ரகங்களையும் (Land races) குறிப்பிடலாம். இவற்றின் எண்ணிக்கை ஏறத்தாழ 110.

இந்த மலைத்தொடர் தாவர வளத்தின் மற்றொரு சிறப்பு இங்கு காணப்படும் 530 ஓரிடவாழ் தாவரங்கள் (Endemic). இவை இந்த மலைத்தொடருக்கு மட்டுமே உரியவை, வேறு எங்கும் காணப்படாதவை. இந்த மலைத்தொடரின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால், இந்தத் தாவரச் சிற்றினங்கள் அனைத்தும் உலகை விட்டே முற்றிலும் அற்றுப்போய்விடும். ஏற்கெனவே, இந்த மலைத் தொடரில் 325 அரிதான, அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தாவரங்கள் உள்ளன.

பெருகும் களைகள்

கடந்த இருநூறு ஆண்டுகளாகப் பல வெளிநாட்டு தாவரங்கள், இந்த மலைத்தொடரின் பல பகுதிகளில் அதிவேகமாகக் களைகளாகப் பரவிவருகின்றன. உள்ளூர் இயல் தாவரங்களை அச்சுறுத்தும் வகையில் இவை வளர்கின்றன. இவற்றின் எண்ணிக்கை 400-த் தாண்டிவிட்டது பெரும் கவலையளிக்கிறது.

(மேலே கூறப்பட்டுள்ள தாவரங்களில் முக்கியமானவற்றைப் பற்றி, அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்

தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x