Published : 30 Jan 2016 10:59 AM
Last Updated : 30 Jan 2016 10:59 AM

கிழக்கில் விரியும் கிளைகள் 15: பூப்பதை நிறுத்திய தாவரம்

உண்மையான வெட்டி வேர் பழங்குடி, சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இது தற்போது விலாமிச்சை வேர் எனப்படுகிறது. பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்குத் தீர்வளிக்க இது பயன்படுத்தப்பட்டுவருகிறது. தலைவலி, காய்ச்சல், கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு, குடல் புண்கள், வாந்தி, தோல் நோய்கள், முடிகொட்டுதல், மயக்கம், வீக்கங்கள், கல்லீரல் நோய்கள், நுண்ணுயிரி தாக்கத்துக்குச் சிகிச்சை அளிக்கவும், ஆயுர்வேதத்தில் இருவேரி கஷாயம், தேவாஷ்டகந்தா, ஸ்நான சூரணம் போன்ற மருந்துகளில் ஒரு கூறாகவும் காணப்படுகிறது. சித்த மருத்துவத்தில் நல்ல குளியல் தூளாகப் பயன்படுத்தப்படுகிறது.

தப்பிப் பிழைத்த இடம்

ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு கேரளம், தமிழ்நாடு, தெற்கு ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே உரித்தான (Endemic) இந்தத் தாவரம் மணல் பாங்கான பகுதிகளில் இயல்பாக வளர்ந்து காணப்பட்டது. அதன் பின்பு இத்தாவரம் தன்னுடைய இயல் சூழலிலிருந்து முற்றிலும் மறைந்துவிட்டது. பிறகு இதன் தண்டுப்பதியன்களை (Stem cuttings) மக்கள் பரவலாகப் பயிரிடத் தொடங்கினர். குறிப்பாக வட ஆற்காடு, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கம்வரை அதிக அளவில் இது பயிரிடப்பட்டது. எனினும் இதன் பயன்பாடும், இது தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்ததால், கடந்த நூறு ஆண்டுகளுக்குள் இதைப் பயிரிடும் நிலத்தின் அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் ஐந்து கிராமங்களில் மட்டுமே, அதுவும் ஒரு சில விவசாயிகளின் வயல்களில் மட்டுமே இது பயிரிடப்பட்டது, மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. கொள்ளிடத்துக்கு அருகிலுள்ள தில்லைமங்கலம் மற்றும் சுந்தரபெருமாள் கோயில் கிராமங்களில் மட்டுமே இது பயிரிடப்படுகிறது.

தேவை அவசரக் கவனம்

இயல் சூழலிலிருந்து முற்றிலும் மறைந்துவிட்ட, தற்போது ஓரிரு பகுதிகளில் மட்டுமே பயிராக வளர்க்கப்படும் இந்தப் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த, ஆன்மிக, மருத்துவத் தாவரம் போர்க்கால அடிப்படையில் பேணப்பட வேண்டியது அவசியம். ஏற்கெனவே, தொடர் வளர்ப்பால் தன்னுடைய பூக்கும் பண்பையே இழந்துவிட்ட இந்தத் தாவரம், தொடர்ந்து உயிர்வாழ மனிதர்களை மட்டுமே சார்ந்துள்ளது.

இதைக் கடைசியாக 1689-ம் ஆண்டில் பூக்கும் நிலையில் கண்டவர், ‘ஹார்டஸ் மலபாரிகஸ்’ என்ற நூலைத் தொகுத்த டச்சு கவர்னரான வான் ரீட் (Van Rheede) என்பவர்தான். இது பூப்பதை மீண்டும் பார்க்க முடியாவிட்டாலும், இந்தத் தாவரத்தைப் பாதுகாப்பது தமிழர்களாகிய நம்முடைய கடமை. இந்தியத் தேசிய மருத்துவத் தாவர நிறுவனம் (National Medicinal Plant Board) உடனடியாகக் காப்பாற்ற வேண்டிய 32 இந்திய மருத்துவத் தாவரங்களில் இதையும் ஒன்றாகச் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(அடுத்த வாரம்: தேவலோக மலர்)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x