Last Updated : 07 May, 2016 11:56 AM

 

Published : 07 May 2016 11:56 AM
Last Updated : 07 May 2016 11:56 AM

காசில்லாமல் கிடைக்கும் இயற்கை உரம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி உதிரும் இலைச்சருகுகளைத் தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழலுக்குச் சீர்கேடாக இருப்பது மட்டுமில்லாமல், காசு கொடுக்காமல் கிடைக்கும் வளத்தை வீணடிப்பதும்கூட.

காடுகளில் உள்ள மரங்கள், குறைந்த மழைபொழிவுக் காலத்திலும்கூடப் பச்சைப் பசேலென இருப்பதற்கான காரணத்தைப் பற்றி யோசித்திருக்கிறோமா? இதற்கு, அவை நுகரும் இயற்கை உரங்களே அடிப்படைக் காரணம். மரங்களிலிருந்து விழும் இலைகள், சருகுகள், இதர மரச் சிதைவுகள் மக்கிப் பலன் தரும் உரமாக மாறுகின்றன.

இதை நாமும் பின்பற்றலாம். வீடுகளிலும் பெரும் வளாகங்களிலும் உதிர்ந்த இலைகள், சருகுகளை ஓரிடத்தில் சேகரித்து இயற்கை உரமாக்கலாம். 2009 14 ஆண்டுகளுக்கு இடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் 60.3 சதவீதத்தில் விவசாயம் செய்தாலும், விவசாய உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு 2,962 டன் என்ற அளவிலேயே உள்ளது.

ஆனால், தனது 12.6 சதவீத நிலப்பரப்பில் மட்டும் விவசாயம் செய்யும் ஜப்பானில் 6,105 டன் விவசாய உற்பத்தி கிடைக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் ரசாயன உரமோ, நவீனத் தொழில்நுட்பமோ அல்ல. இயற்கையான மட்கு உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதே.

நீடித்த வளம்

இயற்கை முறையில் அங்ககப் பொருட்களை, நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி மட்கச் செய்தால் கிடைப்பதே மட்கு உரம். இவற்றில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை சேர்ந்துள்ளன. தாவரக் கழிவுகளுக்கு ஏற்ப இவற்றின் விகிதாச்சாரம் மாறுமே ஒழிய, அனைத்துக் கழிவிலும் இந்த மூன்று சத்துகளும் உள்ளன. இச்சத்துகள் மண் வளத்தை நிலைநிறுத்துவதில் முக்கியக் பங்கு வகிக்கின்றன. நீடித்த வேளாண்மைக்கும் உதவுகின்றன.

மட்கு உரங்கள் ஊட்டச்சத்துக்கு ஆதாரமாக இருப்பது மட்டுமல்லாமல் மண்ணின் இயற்கையான வேதிப் பண்புகளை மேம்படுத்துகின்றன. இந்த மேம்பாட்டின் விளைவாக வறட்சி நோய், நச்சுத்தன்மைகளைத் தாங்கும் விதத்தில் மண் மாறுகிறது. இதனால் பயிர்களிலும் மரங்களிலும் அதிக மகசூல் கிடைக்கும்.

சருகு உரம் எப்படித் தயாரிப்பது?

மரங்கள் அமைந்திருக்கும் வளாகத்தின் ஒரு மூலையில் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அல்லது விழும் இலைகளின் அளவுக்கேற்ப குழிகளை வெட்டி அவற்றில் உலர்ந்த இலைகளைப் போட்டு வைத்தாலே போதும். பசுஞ்சாணம், இதர கழிவு கிடைத்தால் அக்குழிகளில் சேர்க்கலாம். கிடைக்காத பட்சத்தில், உரக் கடைகளில் கிடைக்கும் நுண்ணுயிரிக் கூட்டுக் கலவையைத் தண்ணீரில் கலந்து, அக்குழிகளில் பரவலாக ஊற்றலாம்.

இரண்டும் முடியாத நேரங்களில் வாரத்துக்கு ஒருமுறை நீர் தெளித்தாலே போதும். குழிகளில் உள்ள இலைகளைக் கிளறி விட வேண்டும். இப்படி நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குச் செய்த பிறகு, மக்கிய உரம் கிடைக்கும். அழகுப் புல்வெளிகள் அமைப்பதற்கு முன் இந்த மட்கு உரக் கலவையைப் பரப்பி, அதன்மீது மண்ணைப் பரப்பிப் புற்களை நடலாம்.

பூமிக்கு உதவுவோம்

இப்படி எதுவுமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை. பெருக்கிச் சேர்த்த இலைகளை மூட்டைகளாகக் கட்டி அருகிலுள்ள விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்தாலே, அவற்றை அவர்கள் நிலத்தில் இட்டு மண்வளத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.

சருகை மக்கவைத்து உரமாக்குவதைப் பெரிய வளாகங் களில் மட்டும்தான் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. வீட்டு மரங்களிலிருந்து விழும் இலைகளைக் கொண்டும் மட்கு உரம் தயாரிக்கலாம். இதற்கு மூன்று அடிக்கு மூன்று அடி குழி வெட்டி இலைகளைப் போட்டுச் சாணக் கரைசலை ஊற்றி வந்தாலே போதும்.

குழி வெட்ட இயலாவிட்டால் பயனற்ற வாளி, கெட்டியான பிளாஸ்டிக் பைகளிலும் இதைச் செய்யலாம். நான்கு மாதங்களில் மட்கு உரம் தயாராகிவிடும். வீட்டுப் பூச்செடிகளில் அரை அடி ஆழத்துக்கு மண்ணை அப்புறப்படுத்திவிட்டு இந்த மக்கிய உரத்தைப் போட்டு, அகற்றிய மண்ணை மேலே இட்டு நீர் பாய்ச்சினால் சிறந்த பலன் கிடைக்கும். மரங்களுக்கும், மாடித்தோட்டச் செடிகளுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம்.

இலைகளை எரிப்பதைத் தடுப்பதன் மூலம் உரம் கிடைப்பது மட்டுமல்லாமல், ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக ‘புவி வெப்பமயமாதலையும்’ சிறிதளவாவது தணிக்கலா

கட்டுரையாளர் தொடர்புக்கு: nattu28051971@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x