Last Updated : 10 Feb, 2017 05:03 PM

 

Published : 10 Feb 2017 05:03 PM
Last Updated : 10 Feb 2017 05:03 PM

அழியும் விவசாயம்: கவனப்படுத்தும் ஆவணப்படம்!

கடந்த ஆண்டின் இறுதியில், தமிழகம் முழுவதும் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முக்கியக் காரணம், டெல்டா பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த விவசாயிகளின் தற்கொலைகள்.

நிலத்தடி நீர் குறைந்துபோனது, அதிக அளவு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டது, விதை நெல் வாங்குவதற்காக வங்கியிலும் கந்துவட்டிக்காரர்களிடமும் பெற்ற கடன், உரிய நேரத்தில் அணைகளில் தண்ணீர் திறக்கப்படாதது போன்ற சுமைகள் தந்த நெருக்கடியால், தமிழக விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் உள்ள கீழ்பூந்திருத்தி, குழிமாத்தூர் ஆகிய கிராமங்களுக்குச் சென்று, தற்கொலை செய்துகொண்ட சில விவசாயிகளின் குடும்பத்தினரின் ஆதங்கத்தை 'இறந்தாய் வாழி காவிரி' என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியிருக்கிறார், பிரபல ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன்.

சுமார் 26 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தில் நிகழ்கால வேளாண்மை சந்திக்கும் சிக்கல்களைப் பற்றி அலசுவதுடன், முந்தைய காலத்தில் பின்பற்றப்பட்ட இயற்கைவழி வேளாண்மை, நாட்டு விதைகளின் பயன்பாடு, இயற்கை உரங்கள், அவற்றால் விளைந்த நன்மை போன்றவையும் இந்த ஆவணப் படத்தில் அலசப்பட்டுள்ளன. அத்துடன் மத்திய அரசு, அண்டை மாநில அரசுகளின் வஞ்சகப்போக்கையும், விவசாயிகளின் வேதனைகள் வழிய நமக்கு உணர்த்துகிறது இந்தப் படம்.

ஆகாயம், காற்று, நீர் போல இந்தப் படமும் அனைவருக்கும் பொதுவானது என்று கூறி, யூடியூப் தளத்தில் பதிவேற்றியிருக்கிறார் இயக்குநர். ‘இந்தப் படத்தை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள்' என்பதுதான் அவருடைய வேண்டுகோள்.