Last Updated : 03 Mar, 2015 12:51 PM

 

Published : 03 Mar 2015 12:51 PM
Last Updated : 03 Mar 2015 12:51 PM

வெற்றிப்பாதை: எஸ்.எஸ்.எல்.சி.- புத்தகத்தைக் கரைத்துக் குடித்தால் 100க்கு 100தான்

வருகிற 10-வது கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள் சென்னையைச் சேர்ந்த கணித ஆசிரியைகள் கே.கல்பனாவும் சொர்ணவல்லியும்.

பொதுவானவை

தேர்வறைக்குள் நுழைந்ததும் விடைத்தாளை அமைதியாக படிக்கவும். நன்றாகப் படிக்கிற மாணவர்கள் கூட பதற்றத்தில் பிளஸ் குறி போடும் இடத்தில் மைனஸ் குறி போட்டு மொத்த மதிப்பெண்கள் இழந்து போகிற சம்பவங்களும் நடக்கின்றன. பதற்றம் வேண்டவே வேண்டாம்.

வினாக்களின் எண்களை மிகச்சரியாக குறிப்பிட்டு விடைகளை எழுத வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண் இழப்பு ஏற்படும்.

கேள்விக்கான விடையை செய்து பார்ப்பதற்கு விடைத்தாளில் ஒரு பகுதியை ஒதுக்குவார்கள். செய்து பார்க்கிற பகுதியில் சரியான விடையை உருவாக்குகிற மாணவர்கள் கூட அந்த விடையை எடுத்து எழுதும்போது தப்பாக எழுதும் விசித்திரமும் நடக்கிறது. கவனம் தேவை. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் சரியான விடையை மாணவர் உருவாக்கி உள்ளார். ஆனால் எடுத்து எழுதும்போதுதான் தவறு செய்துள்ளார் என உணர்ந்தாலும் அவரால் மார்க் போட முடியாது.

ஒரு கணிதக்கேள்விக்கான விடையை நிறுவும்போது படிநிலைகளில் வரிசைக்கிரமமாக,நிறுவுதல் முக்கியமானது. அதற்கு ஸ்டெப் மார்க் உண்டு. நிறுவலை தவறாக எழுதிவிட்டு விடையை சரியாக எழுதினாலும் மதிப்பெண்கள் கிடைக்காது.

பத்து மதிப்பெண்கள் கேள்விகளான செய்முறை வடிவியல்,வரைபடம் ஆகியவற்றுக்கும் இத்தகைய ஸ்டெப் மார்க் உண்டு. வடிவியல் கேள்விகளுக்கான விடை எழுதும்போது உதவிப்படம், வரைபடம், வரைபடமுறை,நிரூபித்தல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மதிப்பெண்கள் உண்டு.கவனம் தேவை.

விடைத்தாள்களை திருத்துவதற்கான வழிகாட்டலாக அரசாங்கம் ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கும்.அதில் ஸ்டெப் மதிப்பெண்கள் வழங்கவும் வழி உள்ளது.

தெளிவான கையெழுத்தில், விடைகளை அடித்தல் ,திருத்தல் இல்லாமல் எழுதுவது அதிக மதிப்பெண்களை பெற உதவும். விடைத்தாளின் கடைசி இரண்டு வரிகளில் புதிய கேள்வியை ஆரம்பிக்க வேண்டாம்.

கடைசி நிமிடம் வரைக்கும் தேர்வு எழுத வேண்டாம். பத்து நிமிடம் முன்னதாகவே முடிக்கவும். எழுதி முடித்ததை முழுமையாக பரிசீலிக்கவும். அப்படி செய்தால் அதில் கவனக்குறைவான விடுதல் இருந்தால் சரி செய்ய முடியும்.

10 மதிப்பெண்கள் பகுதியில் உள்ள செய்முறை வடிவியல்,வரைபடம் ஆகிய இரண்டு வினாக்களுக்கான விடைகளை முதலில் எழுதினால், கடைசி நேர பதற்றம் இல்லாமல் அழகாக அவற்றை வரைய முடியும். அப்படி செய்தால், 20 மதிப்பெண்களை பெற்றுவிட்ட தன்னம்பிக்கையில் அடுத்த பகுதிகளை பார்க்கலாம்.

கணித தேர்வு என்றால்…

பொதுவாக, தேர்வில் கேட்கக்கூடிய மிகப் பெரும்பாலான கேள்விகளும் பாடப்புத்தகத்தை அடிப்படையாக கொண்டே கேட்கப்படும்.

பாடப்புத்தகங்களில் உள்ள ஒரே மாதிரியான கேள்விகள்தான் தேர்வுக்கு தேர்வு மாறி மாறி உங்களிடம் வந்து கொண்டிருக்கிறது. கேள்விகளுக்கு சாய்ஸாக புத்தகத்தில் வருகிற கேள்விகள்கூட மாறுவதில்லை. எனவே, பாடப்புத்தகத்தை முழுமையாக பயிற்சி செய்வதுதான் மாணவர்களுக்கு உதவும்.

பாடப்புத்தகத்தில் உள்ள அத்தியாயம் 10:1 மற்றும் 10:2-ல் பயிற்சிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக,10:2 பயிற்சியில் உள்ள பயிற்சிகளை முழுமையாக படித்தால் எளிதாக 10 மதிப்பெண்கள் பெறலாம்.

செய்முறை வடிவியலில் மூன்று பயிற்சிகள் உள்ளன. அதில் ஏதாவது இரண்டு பயிற்சிகளை முழுமையாக பயின்றாலே,கண்டிப்பாக 10 மதிப்பெண்கள் கிடைத்துவிடும்.

மூன்றாவது அத்தியாயத்தில் உள்ள இயற்கணிதம்,வர்க்கமூலம், காரணிப்படுத்து,ஆகிய பயிற்சிகளை படித்தால் ஒரு ஐந்து மதிப்பெண் கேள்விக்கு விடையளித்துவிடலாம்.

புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் கணங்களும், சார்புகளும் பற்றிய பயிற்சிகளில் நான்கு கணித விதிகள் உள்ளன. அவற்றிலிருந்து இரண்டு ஐந்து மதிப்பெண் கேள்விகள் வரும்.

நான்காம் அத்தியாயத்தில் அணிகள் பற்றிய பயிற்சிகளில் ஒரு ஐந்து மதிப்பெண் கேள்வி வரும். 12 வது அத்தியாயத்தில் உள்ள நிகழ்தகவு பற்றிய பயிற்சிகளில் பகடை உருட்டல்,நாணயங்கள் சுண்டுதல், சீட்டுக்கட்டுகள் தொடர்பான பயிற்சிகள் வரும். அவை எல்லாவற்றும் ஒரே பார்முலாதான். அந்த பார்முலாவை நன்கு பயிற்சி எடுக்கக்கூடியவர் ஒரு ஐந்து மதிப்பெண்ணை அள்ளிவிடலாம்.

சுமாராக படிக்கிற மாணவர்களுக்காக

ஐந்து மதிப்பெண்களுக்கான கேள்விகள் வரக்கூடிய புத்தகத்தின் அத்தியாயங்கள் 1,4,12 ஆகியவற்றை நன்றாக பயிற்சி எடுத்தாலே இரண்டு மதிப்பெண்கள் பகுதியில் உள்ள 2,3 கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்வகையில் திறமை பெற்றுவிடுவீர்கள்.

புத்தகத்தின் ஒன்று, நான்கு, 12வது அத்தியாயங்களில் உள்ள பயிற்சிகளை முழுமையாக பயின்றாலே, 30 மதிப்பெண்களை எளிதாக எடுக்கலாம். 10 மதிப்பெண்கள் கேள்விகளான செயல்முறை வடிவியல்,வரைபடம் தொடர்பான இரண்டு கேள்விகளையும் சரியாக போட்டுவிட்டாலே 50 மதிப்பெண்களை நீங்கள் எட்டிவிடலாம்.

புத்தகத்தின் இந்தப்பகுதிகளை இன்னமும் பயிற்சி எடுக்காதவர்கள் கூட இன்று ஆரம்பித்தால் கூட 10 நாள்களில் படித்து தேர்வை எழுதிவிடலாம்.

புத்தகத்தில் உள்ள நான்காம் அத்தியாயத்தில் உள்ள அணிகள் தொடர்பான பயிற்சிகளில் எண் 4:3 ல் உள்ள பயிற்சிகளைச் செய்து பார்த்தாலே 5 மதிப்பெண்கள் எடுக்கலாம்.

சென்டம் மாணவர்களுக்கு

100க்கு 100 வாங்க வேண்டும் என நினைக்கிற மாணவர்களைப்பொறுத்தவரையில் கணித அறிவை அவர்கள் புத்தகத்துக்கு வெளியிலும் தேடும் அளவுக்கு தங்கள் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்த வேண்டும்.

இன்று கணித அறிவை தேட இணையத்தில் பலவிதமான புதுமையான நவீன வசதிகள் உள்ளன. ஆனாலும் மதிப்பெண்கள் அடிப்படையில் பார்க்கும்போது பாடப்புத்தகத்தை முழுமையாக புரிந்து பயிற்சி எடுப்பதும் மனப்பாடம் செய்வதும்தான் அவர்களுக்கு உதவும்.

புத்தகத்தில் இருந்துதான் அனைத்து வினாக்களும் தேர்வுக்கு வரும். புத்தகத்தில் உள்ள எல்லா பயிற்சிகளையும் முழுமையாக பயில்பவரே 100க்கு 100 எடுக்க முடியும்.

கணிதத்தையும் ஒரு ஜாலியான விளையாட்டாக ரசித்து பயிலும் மனநிலைக்கு வந்து விட்டால் கணிதத்திலும் அள்ளலாம் நூற்றுக்கு நூறு.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x