Last Updated : 23 Aug, 2016 10:45 AM

 

Published : 23 Aug 2016 10:45 AM
Last Updated : 23 Aug 2016 10:45 AM

ஒலிம்பிக் அலசல்: 130 கோடிப் பேருக்கு 2 பதக்கங்கள்தானா?

பி.வி. சிந்துவும் சாக்‌ஷி மாலிக்கும் ரியோ ஒலிம்பிக்கில் இறுதிவரை போராடி இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றெடுத்துவிட்டார்கள். இவர்கள் மட்டுமல்ல; ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகரும் கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்கும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி நம்மைப் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளனர். பெற்றெடுத்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றவே போராடும் நிலை இன்றுவரை இந்தியாவில் நீடித்தாலும், இந்தப் பெண்கள் இந்தியாவையே காப்பாற்றித் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

என்ன காரணம்?

அதே நேரத்தில், 130 கோடிப் பேரில் 2 பேரால் மட்டும்தான் பதக்கம் வெல்ல முடியுமா என்கிற கேள்வி எல்லோரையும் குடைகிறது.

இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டை அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் நிச்சயமாக ஒப்பிட முடியாது. ஆனால் ஒலிம்பிக் நடத்தும் பிரேசிலும்கூட இந்தியா போலவே வளரும் நாடுதான். அது 18 பதக்கங்களை வென்றிருக்கிறது. எப்போதும் மக்கள்தொகைப் பெருக்கத்திலும் பொருளாதார முன்னேற்றத்திலும் நம்முடன் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் சீனா 70 பதக்கங்களை வென்றுவிட்டது. இந்திய மக்கள்தொகையில் வெறும் 6% மட்டுமே கொண்ட தாய்லாந்து 6 பதக்கங்களையும், ஒட்டுமொத்தமாக 90 லட்சம் பேரை மட்டுமே கொண்ட அஜர்பைஜான் 15 பதக்கங்களையும் வென்றுள்ளன.

வறுமை, ஊட்டச் சத்துக் குறைபாடு, அடிப்படை வசதிகளில் பின்தங்கிய நிலை இப்படிப் பல பிரச்சினைகள் இந்தியாவைப் பிடித்தாட்டுகின்றன என்பதையும் காரணமாகச் சொல்வதற்கில்லை. வட ஆப்பிரிக்க நாடான நைஜர், உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டைச் சேர்ந்த இஸோஃபூ அல்ஃபகா அப்துல்ரசாக் என்பவர் கராத்தே போன்ற டேக்வாண்டோ (Taekwondo) என்னும் விளையாட்டில் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்திருக்கிறார்.

இந்தியாவை விடவும் அதிகமான உள்நாட்டுப் பிரச்சினைகளிலும் போர்ச் சூழலிலும், லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக நிர்க்கதியாக்கப்பட்ட நிலையிலும் சிக்கித் தவிக்கும் துருக்கி 8 பதக்கங்களையும் ஈரான் 8 பதக்கங்களையும் வென்றுள்ளன.

எங்கே தொடங்குவது?

இந்தியாவில் கிரிக்கெட்டை மட்டுமே தூக்கிப் பிடிக்கிறார்கள். அதனால்தான் மற்ற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை எனச் சொல்பவர்களுக்குப் பதில், ‘தென் ஆப்பிரிக்கக் குயின்’ என வாஞ்சையுடன் அழைக்கப்படும் சுனெட் விலோயன்தான். தற்போது ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெறிருக்கும் இவர் முன்னாள் தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் வீராங்கனை. இவர் மட்டுமல்ல உலகம் முழுவதும் வெவ்வேறு விளையாட்டை விளையாடியவர்கள் அதிலிருந்து தடம் மாறி வேறு விளையாட்டுகளில் சாதித்திருக்கிறார்கள்.

கற்றல் குறைபாட்டால் சிறுவயதில் பாதிக்கப்பட்டவர் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ். அத்தனை தடைகளையும் தாண்டித் தனிமனிதராக அவர் மட்டும் தன்னுடைய ஒலிம்பிக் பயணத்தில் 28 பதக்கங்களை வென்றிருக்கிறார். ஆனால் 1900 முதல் 2016 வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒட்டுமொத்தமாக ஜெயித்தே 28 பதக்கங்கள்தான்!

சாக் ஷி, சிந்து, மைக்கேல் ஃபெல்ப்ஸ், இஸோஃபூ அல்ஃபகா அப்துல்ரசாக் போன்ற விளையாட்டு வீரர்களின் சாதனைகளைக் கண்டு இன்று நாம் மெய்சிலிர்க்கிறோம். ஆனால் தங்களுடைய பிள்ளைகள் சிந்துவைப் போல பாட்மிண்டனோ சாக்‌ஷி போல மல்யுத்தமோ அல்லது வேறெதாவது விளையாடப் பிரியப்பட்டால் ஊக்குவிக்க இந்தியப் பெற்றோர்கள் தயாரா? அப்படியே பெற்றோர் அனுமதித்தாலும் ஆர்வம் கொண்ட பிள்ளைகள் விளையாடவும் விளையாட்டை முறைப்படி கற்றுக்கொள்ளவும் உகந்த சூழல் இந்தியாவில் பரவலாக இருக்கிறதா?

நமது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து செல்லிவருகிறோம். அதற்கு விசாலமான விளையாட்டு மைதானம், உரிய உடற்பயிற்சி சாதனங்கள், தரமான விளையாட்டு உபகரணங்கள் தேவை. முதலாவதாக, ஒரு குழந்தையின் தனித்திறனை அடையாளம் கண்டு அதை வளர்த்தெடுக்கச் சிறப்பான ஆசிரியர்களும் பயிற்சியாளர்களும் தேவை.

அதேபோல குழந்தைகளும் இளைஞர்களும் தங்களிடம் இருக்கும் தனித்திறமைகள் மீது தன்னம்பிக்கைவைத்து இலக்கை நோக்கி இடைவிடாது உழைக்க வேண்டும். உடற்பயிற்சியிலும் விளையாட்டுகளிலும் துடிப்புடன் ஈடுபடும் இளைஞர்கள்கூட ஒரு கட்டத்தில் சிறப்புச் சலுகையோடு வேலை பெறும் வழியாக அதைப் பார்க்கும் அவல நிலை இங்கு உள்ளது. அல்லது தோல்வியால் துவண்டு போராட்டக் குணத்தை விட்டுக்கொடுத்துவிடும் பழக்கம் நிலவுகிறது. அப்படி வழக்கமான படிப்பை மட்டுமே படித்து வேலைக்குச் சென்றிருந்தால் இன்றைக்குச் சிந்துவும், சாக்‌ஷியும் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள்.

இவற்றையெல்லாம் செய்த பிறகு 130 கோடிப் பேருக்கு 2 பதக்கங்கள்தானா எனக் கேட்கலாம்.

“ஒருவர் ஏதேனும் ஒரு விஷயத்தில் பங்கேற்கப் பல சமூகக் காரணங்கள் சாதகமாக இருக்க வேண்டும். படிப்பறிவு இல்லை என்றாலோ பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலோ ஊட்டச்சத்துக்குக் குறைபாட்டினாலோ, சமூகப் பொருளாதாரப் பாகுபாட்டினாலோ பொருளாதார ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்டாலோ பங்குபெற்று வெல்வது கடினம்.”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x