Last Updated : 18 Aug, 2015 11:45 AM

 

Published : 18 Aug 2015 11:45 AM
Last Updated : 18 Aug 2015 11:45 AM

இறந்த செல்கள் மூலமா நகம் வளர்கிறது?

தலை முடியும் நகமும் நமது உடல் உறுப்புகள்தான். நமது உடலின் ஏதாவது ஒரு பாகத்தை வெட்டினாலோ, கத்தியால் கீறினாலோ வலிக்கும், திகுதிகுவென எரியும். ஆனால் தலைமுடி, நகத்தை வெட்டினால் ஏன் அப்படி எதுவும் ஆவதில்லை? ஏன் காயம் ஏற்படுவதில்லை?

இதற்குக் காரணம் நமது நகமும் தலை முடியும் இறந்த திசுக்களால் ஆனவை என்று பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால், அது தவறான நம்பிக்கை. எலும்பைப் போல, நகமும் உயிருள்ள ஒரு விஷயம்தான். உயிருடன் இருப்பதால்தான் அது வளர்கிறது.

பாதுகாப்பு உறை

நகத்துக்கு அடியில் நகப் படுக்கை இருக்கிறது. நகக் கண்ணில் இருக்கும் வேரிலிருந்து நகம் வளர்கிறது. விலங்குகளுக்கு நகம், கொம்பு வளர்வதுபோல, அடர்த்தியான கெரட்டின் என்ற புரதமே மனிதர் களுக்கு நகம் வளரக் காரணமாக இருக்கிறது.

விரல்களின் மென்மையான நுனிப் பகுதி காயமடையாமல் பாதுகாப்பதற்காக மேலே வளரும் உறைதான் நகம். நகம் இல்லாத விரலின் மேற்பகுதியில் ஏற்படும் காயம் கடுமையான வலியை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்க வேண்டும்.

நகங்கள் ஒரு வருடத்தில் 2 அங்குலம் வரை வளரும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிக வேலை பார்க்கிறோமோ, அவ்வளவு வேகமாக விரல் முனைகளைப் பாதுகாக்க நகமும் வேகமாக வளர்கிறது.

வலிக்குமா, வலிக்காதா?

நகத்தில் ஏற்படும் குறைபாடுகளை வைத்து, ரத்தச் சோகை, சொரியாசிஸ், மஞ்சள் காமாலை போன்ற உடல் குறைபாடுகளைக் கண்டறியலாம் என்பதால், நகம் என்பது இறந்த திசுவாகக் கருதப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல் நகப்படுக்கை நரம்புடன் தொடர்பு கொண்டுள்ளது.

விரலின் நுனிக்கு வெளியே, சதையோடு ஒட்டாமல் துருத்திக் கொண்டிருக்கும் நகத்தின் நுனிப் பகுதி மட்டுமே ரத்தம் பாயாமல், உணர்வில்லாமல் இருக்கிறது.

வலி, வெப்பம் போன்ற உணர்வுகளை மூளைக்குக் கடத்தும் கடத்திகளாக நரம்புகள்தான் செயல்படுகின்றன. நகத்தின் நுனிப்பகுதியுடன் நரம்புப் பிணைப்பு இல்லாததால், வலி தெரிவதில்லை. அதேநேரம் நகமும் தசையும் ஒட்டியிருக்கும் இடத்தில் நகத்தை வெட்டினாலோ, நகம் ஒட்டியிருக்கும் சதைப் பகுதி இழுக்கப்படும். அந்தச் சதை நரம்புடன் பிணைக்கப்பட்டிருப்பதால், வலி தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x