Published : 19 Jun 2018 11:36 AM
Last Updated : 19 Jun 2018 11:36 AM

சிறப்பு கேள்வி நேரம்: கால்பந்து - நாமும் சாதனையாளரே!

1. உலக கால்பந்துப் போட்டிகளில் இந்தியா சார்பில் இரண்டு 'ஹாட்ரிக்' அடித்த சாதனை படைத்த சாதனையாளர், கேரளத்தைச் சேர்ந்தவர். 'கறுப்பு முத்து' என்று பாராட்டப்பட்டவர். 'திமிரு', 'கெத்து', 'கொம்பன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ள அவருடைய பெயர் என்ன?

2. இந்திய கால்பந்தை உலக உயரத்துக்குக் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவர் பைசுங் பூட்டியா. இந்திய கால்பந்தில் பல்வேறு முதன்மைகளுக்குச் சொந்தக்காரர். 1999-ல் இங்கிலாந்து தொழில்முறை கிளப் ஒன்றில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவதற்குக் காரணமாக இருந்த கிளப்பின் பெயர் என்ன?

3. முன்கள, தாக்குதல் ஆட்டக்காரர்களில் ஒருவர் சுனில் சேத்ரி, இந்திய அணிக்காக அதிக முறை விளையாடியவர் (100 போட்டிகள்), அதிக கோல் அடித்தவர் (59 கோல்கள்) என்ற பெருமையைப் பெற்றவர். இந்திய அணியின் தற்போதைய கேப்டனான அவர், எந்த இந்திய கிளப்புக்காக தற்போது விளையாடி வருகிறார்?

4. இதுவரை இரண்டு கால்பந்து வீராங்கனைகள்தான் அர்ஜுன விருதைப் பெற்றுள்ளனர். இந்திய மகளிர் அணியின் கேப்டனாக 10 ஆண்டுகளுக்கு இருந்த மணிப்பூரைச் சேர்ந்த ஆய்னம் பெம்பெம் தேவி, கடந்த ஆண்டு அந்த விருதைப் பெற்றார். அவருக்கு முன்னதாக அர்ஜுன விருது பெற்ற முதல் கால்பந்து வீராங்கனை யார்?

5. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் இரண்டு முறை (1948, 1952) விளையாடியவர் அகமது கான். பெங்களூருவில் 90 வயதில் கடந்த ஆண்டு காலமானார். அவரை உள்ளடக்கிய இந்திய முன்கள வரிசைக்கு 'பஞ்ச பாண்டவர்கள்' என்று பெயர். வளைந்து நெளிந்து விளையாடும் முறை காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர் என்ன?

6. சுபிமல் சுனி கோஸ்வாமி இந்திய கால்பந்து வீரர். முதல்தர கிரிக்கெட் வீரரும்கூட. இந்திய அணிக்காக 50-க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஆடியுள்ளார். ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் வங்க அணிக்காக கிரிக்கெட்டும் ஆடியுள்ளார். பன்முகத்தன்மை கொண்ட இந்த வீரரின் மற்றொரு விளையாட்டுத் திறமை என்ன?

7. இந்தோனேசியாவில் 1962-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் கால்பந்து அணி தங்கப் பதக்கம் வென்றது. உலகக் கால்பந்துப் போட்டிகளில் இந்திய அணி பெற்ற மிகப் பெரிய, கடைசி சாதனை என்று அது போற்றப்படுகிறது. தென்கொரியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அந்தப் போட்டித் தொடரிலும் இந்தியா ஜொலிக்கக் காரணமாக இருந்த வீரர் யார்?

8. இந்தியக் கால்பந்து வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் தாலிமரன் அவோ. நாகாலாந்தைச் சேர்ந்த இந்த மருத்துவர், சிறந்த கால்பந்து வீரரும்கூட. நாடு விடுதலை பெற்ற பிறகு, லண்டனில் 1948-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பங்கேற்றது. இந்தியக் குழுவின் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவத்தை கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த தாலிமரன் அவோ பெற்றார். அந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி பெற்ற தனிச்சிறப்பு என்ன?

9. ஹைதராபாத்தை சேர்ந்த சையது அப்துல் ரஹிம் 1950 முதல் 1963 வரை இந்தியக் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார். இந்தியக் கால்பந்து அணியின் சிற்பியாக அவர் கருதப்படுகிறார். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் கால்பந்து பிரிவில் அரையிறுதிவரை இந்திய அணி தகுதி பெற்றது. அந்த வெற்றியின் பெருமை என்ன?

10. ஆசியாவின் மிகவும் பழைமையான, உலகின் மூன்றாவது பழைய கால்பந்து போட்டித் தொடரான இந்த கால்பந்துப் போட்டி இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் 1888-ல் தொடங்கியது. இந்தப் போட்டியை நிறுவியவர் இந்தியாவின் அப்போதைய வெளியுறவுத் துறை செயலராக இருந்த வெள்ளைக்காரர். பாரம்பரியம் மிக்க இந்த கால்பந்து போட்டித் தொடர் அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது அவரது பெயர் என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x