Published : 19 Jun 2018 10:44 AM
Last Updated : 19 Jun 2018 10:44 AM

வேலை வேண்டுமா? - விமான நிலையங்களில் பணி

மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென்பிராந்தியம் இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பணி) பதவியில் 147 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப உள்ளது.

தேவையான தகுதி

எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு மூன்றாண்டுகள் பொறியியல் டிப்ளமா (பாலிடெக்னிக்) முடித்த அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண்களும், பெண்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். அதோடு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அல்லது லகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இரண்டாண்டுகள் பூர்த்தியானவர்களாக இருக்க வேண்டும். நல்ல பார்வை அவசியம். உயரம் ஆண்களுக்கு 167 செ.மீ., பெண்களுக்கு 157 செ.மீ. அவசியம்.

வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

என்ன கேட்பார்கள்?

எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது. ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வில் எஸ்.எஸ்.எல்.சி. நிலை அடிப்படைக் கணிதம், அடிப்படை அறிவியல், அடிப்படை ஆங்கிலம், இலக்கணம் ஆகியவற்றில் தலா 25 கேள்விகளும், பிளஸ் டூ நிலை பொது அறிவு பகுதியில் 25 கேள்விகளும் (மொத்தம் 100 கேள்விகள்) இடம்பெறும்.

தேர்வு 2 மணி நேரம். மொத்த மதிப்பெண் 100. உடல் திறன் தேர்வில் 100 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல், கம்பி ஏறுதல், ஏணி ஏறுதல், கூடுதல் எடையை வைத்துக்கொண்டு 60 மீட்டர் ஓட்டம் ஆகியவை இடம்பெறும். எழுத்துத் தேர்வு சென்னை, பெங்களூரு, கொச்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும். உரிய கல்வித் தகுதி, வயது வரம்புத் தகுதி, உடல் திறன் தகுதி உடையவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 15

இணையதளத் தகவல்: www.aai.aero

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x