Last Updated : 05 Apr, 2016 12:00 PM

 

Published : 05 Apr 2016 12:00 PM
Last Updated : 05 Apr 2016 12:00 PM

மாநிலம் அறிவோம்: இந்தியாவின் பிரான்ஸ் - புதுச்சேரி

ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. அரவிந்தர், மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் புதுச்சேரியில் தங்கியிருந்து இந்திய விடுதலை வேட்கையைத் தூண்டினார்கள். அரவிந்தர், மதர், பாரதிதாசன் முதல் இன்றைய மைக்ரோசாப்ட் துணைத் தலைவர் சோமசேகர், விஞ்ஞானி கணபதி தணிகைமொனி வரை புதுச்சேரியின் அடையாளங்கள் பல. அத்தகைய புத்துச்சேரியின் வரலாற்றைப் புரட்டிப்பார்ப்போமா!

பிரஞ்சுக்காரர்களை அழைத்தது யார்?

பிரஞ்சு மொழியில் புதுச்சேரி என்பதற்கு ‘புதிய உடன்பாடு’ என்று அர்த்தம். கிபி முதல் நூற்றாண்டில் இருந்து புதுச்சேரியின் வரலாறு தொடங்குகிறது. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரோமானியர்களின் வணிகத் தளமாக புதுச்சேரி விளங்கியிது. கிபி 4-ம் நூற்றாண்டில் காஞ்சி பல்லவர்கள், 10-ம் நூற்றாண்டில் தஞ்சை சோழர்கள், 13-வது நூற்றாண்டில் பாண்டியர்கள் அதன் பிறகு, வட பகுதி முஸ்லிம்கள், மதுரை சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு, 1638-ல் செஞ்சியை ஆண்ட பிஜப்பூர் சுல்தான்கள் எனப் பலரையும் கண்டது புதுச்சேரி.

இதனிடையே 1497-ல் போர்த்து கீசியர்கள் புதுச்சேரி வந்தனர். பிறகு டச்சுக்காரர்களும் வந்து வியாபாரங்களைப் பெருக்கினர். இவர்களுக்குப் போட்டியாக வியாபாரம் செய்ய பிரஞ்சுக்காரர்களை புதுச்சேரிக்கு அழைத்தது அப்போதைய செஞ்சி அரசு.

இதன்படி, 1673 பிப்ரவரி 4-ல் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரி பெல்லாங்கர் புதுச்சேரி வந்தார். பிரஞ்சு ஆதிக்கத்துக்கான முதல் அடி அப்போதுதான் எடுத்து வைக்கப்பட்டது. 1738-ல் காரைக்காலையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. பின்னர் மெட்ராஸ் பட்டணமும் பிரெஞ்சு கைக்குச் சென்றது. ஆனால் ராபர்ட் கிளைவ் இந்தியா வந்த பிறகு புதுச்சேரியை ஆங்கிலேய அரசு கைப்பற்றி பிரெஞ்சு ஆட்சியை ஒழிக்க நகரத்தை நிர்மூலமாக்கியது. இதனால் தென் இந்தியாவில் தங்களுக்கு இருந்த பிடியை இழந்தது பிரான்ஸ்.

பின்னர் 1765-ல் இங்கிலாந்தில் இரு தரப்புக்கும் உடன்படிக்கை கையெழுத்தாகி புதுச்சேரி வந்தார் பிரெஞ்சு ஆளுநர் லா டி லாரிஸ்டன். அவர் புத்துச்சேரியை மறுநிர்மாணம் செய்தார். அடுத்த 50 ஆண்டுக்குப் பிறகு 1816-களில் பிரெஞ்சின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் புதுச்சேரி மீண்டும் வந்தது. அதன் பிறகு 138 ஆண்டுகளுக்கு புதுச்சேரி மண்ணில் பிரெஞ்சு நிலைத்து நின்றது.

விடுதலை

இந்நிலையில் 1947-ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். ஆனால் பிரான்ஸுக்கு புதுச்சேரியை விட மனமில்லை. இது இந்தியாவின் பிரான்ஸாக இருந்து வந்தது. ஒருவழியாக 1954 அக்.18-ம் தேதி ரகசிய வாக்கெடுப்பு நடத்தியது. 178 பிரதிநிதிகளில் 170 வாக்குகள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து விழுந்தன. இதையடுத்து 1954 நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரியை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. ஆனால், 1963-ல்தான் புதுச்சேரி இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என பிரெஞ்சு நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மக்கள் தலைவர்

ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய இந்தியர்கள் பலருக்கு பிரெஞ்சு அரசு புதுச்சேரியில் அடைக்கலம் கொடுத்தது. ஆனால் சொந்த நாட்டுக்குள் விடுதலைக்கு எதிரான போராட்டங்களை பிரெஞ்சு அரசு ஒடுக்கியது. கம்யூனிஸ்ட்டாகக் களத்தில் நின்று பிரெஞ்சு காலனி ஆதிக்கத்துக்கு எதிராக போராடியவர்களில் முதன்மையானவர் வ.சுப்பையா.

ஆசிய கண்டத்திலேயே தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை பெற்றுத்தந்தவர் அவர். சுப்பையாவுக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமானவர் இடதுசாரி இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.

புதுச்சேரி விடுதலை பெற்ற அன்றைய தினத்தில் சுப்பையாவைத் தேரில் அமர வைத்து கோட்டைகுப்பம் முஸ்லிம் மக்கள் நடத்திய பிரம்மாண்ட ஊர்வலத்தை 1954 ஜனசக்தி நவம்பர் புரட்சி தின மலரில் தத்ரூபமாக விவரித்தவர் தியாகி ஐ.மாயாண்டி பாரதி. பிரெஞ்சு அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் என்று தலையங்கம் தீட்டியது ‘தி இந்து’ நாளிதழ்.

எந்த நாள்?

இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை அடைந்து பல வருடங்கள் கழித்துதான் புதுச்சேரி பிரெஞ்சிடமிருந்து விடுதலை அடைந்தது. ஆகையால் நவம்பர் 1-தான் புத்துசேரியின் சுதந்திர தினம் எனவும் ஆகஸ்ட் 16-தான் புதுச்சேரிக்கான குடியரசு தினம் எனவும் ஒரு சாரரின் வாதமாக இன்றளவும் நீடிக்கிறது.

புதுச்சேரியின் மேயராக இருந்த எட்வர்ட் கோபர்ட் முதல் முதலமைச்சராக 1963 ஜூலை 1-ல் பதவி ஏற்றார். தொடக்கத்தில் பிரெஞ்சு ஆதரவாளராக இருந்த அவர், பின்னர் காங்கிரஸில் இணைந்தார். கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பையா, 1954, 1963-ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் 1969-ல் கூட்டணி அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இப்படியாக இந்திய ஜனநாயகப் பாதைக்குள் நுழைந்தது புதுச்சேரி.

பிரஞ்சுகாரர்களாகவே வாழ்பவர்கள்

தமிழ், பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம், உருது உள்ளிட்ட மொழிகள் புதுச்சேரியில் புழக்கத்தில் உள்ளன. தமிழ், ஆங்கிலம் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகள். மக்கள் தொகை 6.54 லட்சம். படிப்பறிவு 81.24 சதவீதம். பிரெஞ்சுக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் இன்னமும் இங்கு வசிக்கின்றனர்.

நேரடியாகவும் மறைமுகமாகவும் 45 சதவீதம் பேர் வேளாண்மையைச் சார்ந்திருக்கின்றனர். தாது வளம் இல்லாத பிரதேசம் இது. காரைக்காலில் மட்டும் சிறிய அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்படுகின்றன.

புதுச்சேரி மக்களின் முக்கியத் தொழில் மீன்பிடித்தல். 27 கடலோர மீன்பிடி கிராமங்களும், 23 உள்நாட்டு மீன்பிடி கிராமங்களும் உள்ளன.

ஊர் சுற்றலாம் வாங்க!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக புதுச்சேரி விளங்குகிறது. அரவிந்தர்- மதர் ஆசிரமங்கள், ஆரோவில், கடற்கரை ஆகியவை வசீகரிப்பவை. இங்கு பிரெஞ்சு கலாச்சார பாணியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இந்தியாவுக்குள் ஒரு பிரான்ஸ் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x