Published : 11 Apr 2017 10:13 AM
Last Updated : 11 Apr 2017 10:13 AM

தொழில் தொடங்கலாம் வாங்க! - 10: நண்பனாய் இருப்பது தகுதி அல்ல!

கல்யாணத்தில் ஜோடி சேர்வதைப் போலத்தான் வியாபாரத்தில் பங்குதாரரைத் தேர்வு செய்தல். பார்ட்னரைத் தேர்ந்தெடுத்தல் தொழில் ஆரம்பிக்கும்போது கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று. முதலில் நீங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: எதற்காக இந்தப் பார்ட்னர்ஷிப்?

வியாபாரமும் நட்பும் சிக்கலில்

தனியாக ஆரம்பிக்க பயமாக இருக்கிறது. கூட ஒரு ஆள் இருந்தா சவுகரியம். நல்லது கெட்டதில் சம பங்கு இருக்கும் என்று நினைத்தால் உங்களுக்குத் தொழில் பற்றிய பாதுகாப்பின்மை உள்ளது. வாரன் பஃபே பங்குச் சந்தை வெற்றிக்குச் சொல்வது என்னைப் பொறுத்தவரை எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும். அவர் சொல்வது இதைத்தான்: “உங்கள் முடிவுகள் பயத்தாலோ பேராசையினாலோ எடுக்கப்பட்டு இருந்தால் நீங்கள் வெற்றி பெற முடியாது!”

அதனால் பயத்தினால் பார்ட்னர் தேடுவது நல்லதல்ல. ஆனால் படிக்கும் காலம் தொட்டே நமக்குக் கூட்டாளிகளோடு இருப்பது இயல்புதான். நண்பர்கள் சேர்ந்து வியாபாரம் தொடங்குவதும் இப்படித்தான். ஆனால் நண்பர்களைக் கொண்டு தொழில் தொடங்குதல் உங்கள் வியாபாரம், நட்பு இரண்டையும் பாதிக்கக் கூடியது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் சுற்று வட்டாரத்திலேயே பார்த்திருப்பீர்கள் ஆரம்பித்துச் சில காலத்தில் பிய்த்துக் கொண்டு போவதை. நண்பர்களைத் தொழிலில் பங்குதாரராய்ச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதல்ல என் வாதம். நண்பர்கள் என்பது மட்டும் தகுதி ஆகிவிடக் கூடாது. அது தான் முக்கியம்!

முழு முதலாளி ஆகியிருக்கலாமே?

என் நண்பர் ஒரு சேவை நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தார். கையில் பணமில்லை. நண்பர் ஒருவர் உதவவந்தார். ரூபாய் ஐந்து லட்சம் வரை கொடுத்துப் பார்ட்னரானார். தடபுடலாக ஆஃபீஸ் போட்டு பப்ளிசிட்டி செய்தார்கள். மெல்லத் தொழில் வளர்ந்தது. முதலாமவர் முழு உழைப்பில் காசு வர ஆரம்பித்தது. எதிர்பாராத வகையில் முதல் வருட லாபமே ரூபாய் பத்து லட்சத்தை தொட்டது. இப்போது நம் நண்பர் எதற்கு அந்த நண்பரை பார்ட்னராய்ச் சேர்த்தோம் எனப் புலம்ப ஆரம்பித்தார். “ரூபாய் ஐந்து லட்சத்தைக் கடன் வாங்கிப் போட்டிருந்தால் முழு முதலாளி ஆகியிருக்கலாமே? இவர் ஒரு முறை முதலீடு செய்துவிட்டு வேலை செய்யாமல் லாபம் பார்க்கிறாரே” என்று பேச ஆரம்பித்துவிட்டார்.

“நான் அந்த நேரத்தில் கொடுத்து உதவாவிட்டால் இப்படி வளர்ந்திருக்க முடியுமா? தவிர, நஷ்டம் அடைந்தால் நானும் தானே பாதிக்கப்பட்டிருப்பேன்?” என்று எதிர் வாதம் செய்தார் அவருடைய நண்பர். சில காலத்தில், ஏகப்பட்ட மனக்கசப்புகள், கடன், கெட்ட பெயருடன் அவர்கள் பார்ட்னர்ஷிப் முறிந்தது.

அந்நியராகப் பாவிப்பது நல்லது

எதற்குத் தொழிலில் பங்குதாரர் வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பணத்தேவை என்பதற்காகவா, அவரின் நேரம் மற்றும் பங்களிப்புக்காகவா, அவரின் சிறப்புத் தகுதிக்காகவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஒரு நெடுங்காலத் திட்டம் அவசியம். இன்றைய தேவைக்கு என்று நிறைய பேரைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம். ஆட்கள் சேரச் சேர ஒருங்கிணைப்புக்கான நேரமும் சக்தியும் அதிகம் முதலீடு செய்ய வேண்டும்.

உறவினர்களைப் பங்குதாரர்கள் ஆக்குவதிலும் கவனமாக இருங்கள். காரணம் அங்கு வியாபாரத்துடன் உங்கள் குடும்ப உறவும் சேர்ந்து பாதிக்கப்படும். ஆனால் யாராக இருந்தாலும் அந்நியர் போலப் பாவித்துச் சில புரிதல்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.

வெற்றி நழுவியது ஏன்?

அதேபோல கம்பெனியில் பங்கு உரிமை உள்ளது என்பதற்காக நிர்வாகத்தில் தலையிட வேண்டிய அவசியமில்லை. எனக்குத் தெரிந்து பத்துப் பேர் சேர்ந்து ஆரம்பித்த ஒரு வியாபாரம், அவர்களில் ஒருவர் மட்டுமே நிர்வாகம் செய்யச் செழிப்பாக வருகிறது. அதிலும் நிர்வாக இயக்குநர் என அந்த ஒருவர் இருந்தாலும் தலைமை செயல் அதிகாரி என வெளியாள் ஒருவர் புரபெஷனலாக நடத்திக் கொண்டிருக்கிறார். அத்தனை பங்குதாரர்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தவறாமல் சந்தித்து வியாபாரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டி வைத்துப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், வியாபார முடிவுகள் அந்த ஒருவரிடம்தான். அதை நடத்திக் கொடுக்க ஒருவர் இருக்கிறார். அவர் தலைமையில் நிர்வாகம் உள்ளது.

தமிழகத்தில் உள்ள சில பொறியியல் கல்லூரிகள் வெற்றியடையாமல் போனதற்குக் காரணம் பணம் போட்ட குடும்பத்தினர் நேரடியாக நிர்வாகத்தில் தலையிட்டதுதான்.

நிறுவன உறவுகள் முக்கியம்

என்னிடம் ஒரு பேராசிரியர் சொன்னார்: “மாதம் ரூபாய் மூன்று லட்சம் கொடுத்து ஒரு பெரிய பேராசிரியரைப் பணிக்கு அமர்த்த முடிகிறது இவர்களால். ஆனால் அவரை எப்படிச் சிறப்பாகப் பணி செய்யவைப்பது என்ற நிர்வாகத் திறன் இல்லை. பணம் கொடுக்கிறோம் என்று இஷ்டத்துக்கு வளைத்ததால் அவர் வந்த வழியே போய்விட்டார்!”

வியாபாரத்தில் பங்குகொள்வது வேறு. நிர்வாகம் செய்வது வேறு. யார் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆவதற்குச் சில அடிப்படை நோக்கங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். விழுமியங்கள் ஒத்துப் போக வேண்டும், கலாச்சார ஒற்றுமைகள் வேண்டும். எல்லாவற்றையும் பேசி, எழுத்து மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். யார் பிரிந்து செல்ல நேரிட்டாலும் கவுரவம் கெடாமல் வெளியேற இடம் தர வேண்டும். உங்களின் நல்லுணர்வு தூதுவராக அவர் வெளியில் பேசும் அளவுக்கு உங்கள் நிறுவன உறவுகள் இருக்க வேண்டும்.

ஊர் கூடித் தேர் இழுப்பது போல, கூட்டுறவு செயல்பாடு போல, பலர் சேர்ந்து தொழில் தொடங்குவது சிறப்புதான். ஆனால் கூட்டின் கட்டுமானம் திடமாகத் தெளிவாக இருந்தால்தான், அதன் மேல் எழுப்பப்படும் வியாபாரம் பிரம்மாண்டமாக ஓங்கி வளரும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x