Published : 14 Mar 2017 10:36 AM
Last Updated : 14 Mar 2017 10:36 AM

தொழில் தொடங்கலாம் வாங்க! - 06: உடைத்துப் பேசுவது நல்லது!

சொந்தத் தொழில் செய்வது என்பது வாழ்க்கையின் முக்கிய முடிவு. அதனால் உங்கள் குடும்பத்தின் ஆதரவும் புரிதலும் உங்களுக்கு நிச்சயம் தேவை. முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு இது அத்தியாவசியம். சொந்தத் தொழில் பற்றி ஒவ்வொரு குடும்பத்துக்கும் கலாசாரம் சார்ந்த பார்வை ஒன்று உண்டு. “இந்தத் தொழில் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமா?”, “இந்தத் தொழில் செஞ்சா உனக்குப் பொண்ணு குடுக்க யோசிப்பாங்க!” போன்ற கேள்விகள் வரும்.

எதிர்பார்ப்புகள் உடையும்!

அதேபோல உங்கள் வாழ்க்கை முறையை முழுவதும் மாற்றக்கூடியது உங்கள் தொழில். அதை உங்கள் குடும்பத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். பாரம்பரியமாகத் தொழில் புரிபவர் வீட்டில் இது இயல்பாக நடக்கும். “அவரு கடையை மூடிட்டு வீட்டுக்கு வர ராத்திரி 11 ஆகும்!”, “வெளியூர் போகறதுன்னா நிறைய பிளான் பண்ணனும்!” “சதா செல்ஃபோன்லதான் இருப்பார். ஏன்னா கஸ்டமர் எப்ப கூப்பிட்டாலும் எடுக்கணும்!”

ஆனால் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டிலிருந்து புதிதாக ஒருவர் தொழில் செய்ய ஆரம்பிக்கும்போது நிறைய எதிர்பார்ப்புகள் உடைந்துபோகும். “வியாழன் பண்டிகை லீவு. வெள்ளி லீவு போட்டா சனி, ஞாயிறு சேத்து நாலு நாள் ஃப்ரீ. எங்காவது போகலாம்” என்று நினைப்பது வேலை பார்ப்பவர் மனோபாவம். “பண்டிகை, மழை, லீவு நாள் எல்லாம் சேத்து 21 நாள்தான் இந்த மாசம் புரொடக்ட்டிவா இருக்கு. அதுக்குள்ள டார்கெட்ட முடிக்கணும்” என்று நினைப்பது தொழில் செய்பவர் எண்ணம்.

அதிலும் தமிழ் சமூகத்தில் பாராட்டுதல் முக்கியம். சொந்த வீடு இருக்கணும். செய்யும் வேலை அல்லது தொழில் பெருமையாய்ச் சொல்லிக் கொள்வதாய் இருக்கணும். இப்படி நிறைய சொல்லலாம். அதனால்தான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ஹோம் லோன் போட்டு ஃப்ளாட் வாங்கி ‘ஈஎம்ஐ’யால் நம்மைச் சிறைப்படுத்திக் கொள்கிறோம். நாம் செய்ய முடியாதவை அனைத்துக்கும் இதைக் காரணமாகச் சொல்வோம். “மாசாமாசம் முப்பதாயிரம் ஈஎம்ஐ. இது முடியாம வேற எந்த ரிஸ்கும் எடுக்க முடியாது!”

வீட்டிலேயே ஐடியா இருக்கும்

வட மாநிலத்தைச் சேர்ந்த பெரிய வியாபாரிகளை சென்னையில் பார்த்திருப்பீர்கள். அவர்கள் வசிப்பிடத்தைப் பார்த்திருக்கிறீர்களா? குறுகலான சவுகார்பேட்டைத் தெருக்களில் கூட்டுக் குடும்பமாக வாடகை வீட்டில் வசிப்பார்கள். வீடு, ஆஃபீஸ், கார் என்பதில் பகட்டு இருக்காது. மொத்தக் கவனமும் தொழிலில் மட்டும்தான்.

நம் சமூகம் அப்படியில்லை. தொழில் ஸ்திரப்படும் முன்னே ஆபீஸ் வைக்கப் பிரமாதமாய்ச் செலவு செய்வார்கள். விசிட்டிங் கார்டை அசத்தலாக அச்சிடுவார்கள். புதுமனை புகு விழா போல ஊரை அழைத்துச் சொல்வார்கள். பாங்க் லோனையும் தெரிந்தவர்களிடம் கடனையும் கிடைத்த மட்டும் வாங்குவார்கள். வருமானம் வருவதற்கு முன்பே செலவுகளை ஏற்றிக்கொள்வது காலில் கல்லைக் கட்டிக்கொண்டு ஓடுவது போலத்தான்.

முதலாவதாக, உங்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் அவசியம் பேச வேண்டும். பெற்றோர், வாழ்க்கை துணை, பிள்ளைகள் எல்லோரும் அவசியம். என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களைப் பெரும்பாலும் குடும்பமாகத்தான் வரச்சொல்வேன். அவர்கள் பின்புலம் அறிய மட்டுமல்ல, தொழிலால் ஏற்படக்கூடிய குடும்பச் சிக்கல்களையும் ஆரம்பக் காலத்திலேயே சரி செய்யத்தான். பல நேரங்களில் வீட்டிலேயே நல்ல பிஸினஸ் ஐடியாக்கள் இருக்கும். ஆனால் அவற்றைக் குறைத்து மதிப்பிட்டு விடுவோம். அதே போலச் சில நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை முதலிலேயே விவாதிக்காமல் விட்டுவிடும் அபாயமும் உண்டு.

எல்லாவற்றையும் உடைத்துப் பேசுவது நல்லது. மூன்று வருடங்கள் போராடினால்தான் ‘பிரேக் ஈவன் வரும். அதாவது, போட்ட முதலுக்கு இணையான வருமானம் கையில் கிடைக்கும். வருமானம் வந்தாலும் அதை மீண்டும் முதலீடு செய்ய வேண்டிவரும். அதுவரை பொருளாதாரச் சுமை இருக்கும். சொந்தக் காரியத்துக்கு வெளியூர் பிரயாணம் முடியாது. குடும்பச் செலவுகூடக் குறைக்க வேண்டியிருக்கும். இது புரிதலுக்கும் திட்டமிடலுக்கும் கவனக் குவிப்புக்கும் உதவும்.

இது வேலை நேரம்

வீட்டிலேயே கொஞ்சக் காலம் ஆபீஸ் நடத்த வேண்டி வரலாம். அப்போது கட்டுப்பாடுகள் மிக அவசியம். உங்கள் கட்டுப்பாடுதான் உங்கள் குடும்பத்தினரிடமும் கட்டுப்பாட்டை வரவழைக்கும். நேரங்காலமின்றி வீட்டிலேயே புதிய தொழிலுக்கான திட்டமிடலை நடத்தும்போது, ஆரம்பத்தில் உங்கள் குடும்பத்தினருக்குப் புரிய வாய்ப்பு இல்லை. நீங்கள் ஒரு முக்கிய வியாபார வியூகம் அமைக்கச் சிந்திக்கையில், “கொஞ்சம் ஃப்ரீயா இருந்தா கடைக்குப் போய்க் கொஞ்சம் வெங்காயமும் தக்காளியும் வாங்கிட்டு வாங்களேன்” என அனுப்பப்படலாம்.

அதனால் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் இருந்தால், நீங்கள் வியாபார வேலை செய்கிறீர்கள் என்பதை உணர்த்த வேண்டும். இன்று தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் பல தொழில்களுக்கும் ஆரம்பப் பொருள் சார்ந்த மூலதனம் ஒரு கணினிதான். உங்கள் நேரமும் இயக்கமும்தான் அறிவு சார்ந்த மூலதனம். அதனால் அதற்குப் பங்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பல தொழில்களில், ஒரு அலுவலகம் அமைக்கும் அவசியம் வரும் வரை வீட்டிலிருந்து செயல்படலாம். ஆனால் குடும்ப உறவுகளையும் தொழில் இயக்கத்தைச் சரிவரச் சமாளிக்கத் தெரியாமல்தான் பலர், பள பளா ஆபீஸ் போட்டுத் தனியாக உட்கார்ந்து வேலை செய்கின்றனர்.

குடும்பத்தாருக்குப் புரியவையுங்கள்!

ஆகவேதான், முதலில் குடும்பத்துடன் பேசித் தொழில் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும். வீடா தனி அலுவலகமா என்பதல்ல இங்குப் பிரச்சினை. உங்களுடைய தொழிலுக்கு உங்கள் குடும்பம் முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறதா என்பதுதான் கேள்வி. நீங்கள் தளரும் போது உங்களைத் தாங்கிப் பிடிக்கும் சக்தி கொண்டது உங்கள் குடும்பம்.

“இவ்வளவு கஷ்டம் எதுக்கு? ஒரு வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க முடியாதா?” என்ற கேள்வி வந்தால் உங்கள் தன்னம்பிக்கை கண்டிப்பாக அடிபடும். “எது ஆனாலும் பரவாயில்லை. சமாளிக்கலாம்.” என்று சொல்லும் வகையில் இருந்தால் உங்கள் சிந்தனை தொழிலில் ஜெயிப்பதில் மட்டும் இருக்கும். குடும்பத்தைச் சரிக்கட்டுவதில் இருக்காது.

சிலருக்குக் குடும்பத்தை மீறித் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கலாம். இது அவர்களுக்கான ஆலோசனை அல்ல. ஆனால் பெரும்பாலானவர்கள் குடும்ப ஆதரவு பெற வாய்ப்பு உள்ளது. அதேநேரம் குடும்பத்தினரைத் தொழிலில் முழுமையாக ஈடுபடுத்தலாமா என்றால், அது வேறு விஷயம். அதைப் பற்றி பிறகு விரிவாகப் பேசலாம்.

ஆக, தொழில் எண்ணம் வந்தவுடன் முதலில் பேச வேண்டியது உங்கள் குடும்பத்துடன். ஒரு முதலீட்டாளருக்குப் பிரசன்டேஷன் செய்ய வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்வீர்களோ அதே சிரத்தையுடன் எல்லாவற்றையும் குடும்பத்தினரிடம் சொல்லுங்கள்.

முதலில் உங்கள் வாழ்க்கை இணையைச் சம்மதிக்க வையுங்கள். பிற்காலத்தில் கஸ்டமர்களைச் சம்மதிக்க வைப்பதில் பெரிய சிரமம் தெரியாது!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x