Published : 07 Mar 2017 10:35 AM
Last Updated : 07 Mar 2017 10:35 AM

தொழில் தொடங்கலாம் வாங்க! - 05: முதல் முறை என்ன தேவை?

ஒரு தொழில் செய்வதற்கு முன் சின்னதாய் ஒரு ஆராய்ச்சி அவசியம்.

கண்ணில் படும் வாய்ப்புகளெல்லாம் கவர்ச்சியாகத் தெரியும். குறிப்பாக ‘ஸ்டார்ட் அப்’ பற்றி வரும் செய்திகள் ரொம்பவும் தெம்பு கொடுக்கும். குறுகிய காலத்தில் இத்தனை கோடி வருமானம், இத்தனை கோடி முதலீடு, இவ்வளவு பெரிய வளர்ச்சி என்று படிக்கையில் நாமும் அப்படி ஒன்று தொடங்கினால் என்ன என்று தோன்றும்.

ஆனால் முழு பக்க விளம்பரம் தரும் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன என்றால் நம்புவீர்களா? முதலீடு செய்யப் பெரும் தந்திரம் தெரிந்த பலர் வியாபாரம் மூலம் பணம் பண்ண முடிவதில்லை. அதைவிடவும் முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து கம்பெனியின் மதிப்பை ஏற்றி, நல்ல நிலையில் உள்ளபோது தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வேறு தொழிலில் செட்டில் ஆவார்கள். Golden Tap எனும் புத்தகத்தைப் படிக்கையில் இந்த வியாபாரச் சூழல் புரியும்.

சந்தை ஆராய்ச்சி அவசியம்

அதனால் நீங்கள் ஆரம்பிக்கும் தொழிலின் சந்தை பற்றியும், அதில் ஏற்கெனவே உள்ள கம்பெனிகளின் நிலை, சந்தையின் வளர்ச்சி விகிதம், முக்கிய சவால்கள் என அனைத்தையும் ஆராயுங்கள். கட்டிடம் கட்டி விற்பது என்று முடிவெடுத்தால், ரியல் எஸ்டேட் பற்றிய ஆய்வுகள், அறிக்கைகள், அரசாங்கத் திட்டங்கள், முக்கியப் போக்குகள் எல்லாவற்றையும் படியுங்கள். எல்லாப் பெரிய நிறுவனங்களும் இப்படி ஒரு சந்தை ஆராய்ச்சி செய்யாமல் எந்தப் புதிய தொழிலிலும் இறங்குவதில்லை.

என்னைக் கேட்டால் பெரிய நிறுவனங்கள் செய்வதைவிட முதல் முறை தொழில் செய்ய நினைப்பவர்கள், இப்படி ஆராய்ச்சி செய்வது அத்தியாவசியம். தொழில் ஆலோசகர்களை நாடி அவர்களின் உதவியுடன் இதைப் புரஃபெஷனலாகச் செய்வது நல்லது.

எனக்குத் தெரிந்த ஒரு ஆடிட்டர் தன் மகனுக்குக் கார் பொட்டீக் (காரின் உள்புற வேலைப்பாடுகளுக்காக) ஒன்று வைத்துக் கொடுத்தார். வெறும் பிஸினஸ் மாடல் மட்டும் போட்டுப் பார்த்து, கையில் உள்ள பணத்தால் நல்ல இடத்தில்தான் தொழில் ஆரம்பித்தார். ஆனால் இரு ஆண்டுகள் ஆகியும் போதிய வியாபாரம் ஆகவில்லை. தொழிலை நடத்தவே மாதா மாதம் பணம் செலவானது. முதலில் சந்தை ஆராய்ச்சி செய்ய யோசித்தவர் தற்போது ‘பிஸினஸ் டயக்னாஸ்டிக்ஸ்’காக என்னிடம் வந்தார். கட்டிடம் கட்டுவதற்கு முன் பிளான் போடுவதற்கும் கட்டி முடித்த பின் மாற்றியமைக்கப் பிளான் போடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம்?

இதற்கு இன்னொரு சிறந்த வழி தொழிலுக்கு வங்கி அல்லது தனியாரிடம் கடன் கேட்டுச் செல்வது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்கள் வேண்டுமென்றால் நிச்சயம் ஒரு ஸ்டடி செய்வது நல்லது.

குறை சொல்பவர்கள் வேண்டும்

பாஸிடிவாக யோசிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் தொழிலில் நெகடிவாக உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்வது. குறை கண்டு பிடிப்பதுகூட இங்குப் பெரும் திறன். அதனால் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கியவர்களைத் தேடிப் பிடித்து உங்கள் ஐடியாவைச் சொல்லுங்கள். நீங்கள் பார்க்காத பல அபாயங்களை அவர்கள் பார்க்கலாம். அதற்காகத் தொழிலைக் கைவிட வேண்டாம். உங்கள் திட்டத்தை இன்னமும் வலுப்படுத்திக் கொள்ளலாம்.

பலரின் கேள்விகளாலும் புறக்கணிப்புகளாலும் உங்கள் தொழில் எண்ணம் மெருகேறும். இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் தொடர்ந்து அளித்துவரும் நான் பிஸினஸ் என்று ஆலோசனைக்கு வருகையில் மட்டும் முதலில் அவர்கள் திட்டத்திலுள்ள குறைகளுடன்தான் செஷனை ஆரம்பிப்பேன். பிழை நீக்க மட்டுமல்ல, அவர்கள் இந்தத் தொழிலில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்று அறியவும் இதைச் செய்வேன்.

உங்களுடைய முடிவுதான்!

பல திரைப்பட இயக்குநர்களுக்கு முதல் படம் தரும் வெற்றி இரண்டாம் தராது. காரணம் என்ன? ஒரு கதையை வருடக்கணக்கில் யோசித்து, நூற்றுக்கணக்கான கம்பெனிகள் ஏறி இறங்கிக் கதை சொல்லி, அவர்களில் பலர் கதையை நையப்புடைத்து, ஆயிரம் கேள்விகள் கேட்டு, பலரின் யோசனைகள் கேட்டு, பல பல மாறுதல்கள் செய்து, கடைசியாக ஒரு புரொடியூசர் சிக்குகையில் ஒரு காவியம் தயாராக இருக்கும்! அதனால்தான் சினிமாவில் கதை எழுதுவதைவிடக் கதையை விவாதிப்பார்கள். தயாரிப்பாளர் முதல் கடைசி அசிஸ்டெண்ட்வரை கருத்து சொல்லலாம். முதல் பட வெற்றிக்குப் பிறகு உடனடியாக அட்வான்ஸ் வாங்கித் தனியாகக் கதை யோசித்து அவசரமாக எடுக்கையில் படம் படுக்க வாய்ப்புகள் அதிகம்.

எத்தனை பேர் கருத்து சொன்னாலும் கடைசியாக எதை எடுப்பது, எதை விடுப்பது என்பது இயக்குனரின் தேர்வு. அது போலதான் தொழில் ஆலோசகர், வங்கி மேலாளர், முதலீட்டாளர், கடன் தரும் நண்பர் என யார் என்ன சொன்னாலும் கடைசியாக இந்தத் தொழிலை எப்படி நடத்துவது என்பது உங்களுடைய முடிவுதான்! பின் ஏன் இதை எல்லோரும் செய்வதில்லை? அவசரம் தான். தனக்கு நிறைய தெரியும் என்ற எண்ணம். பிறரைக் கேட்டால் குழப்பி விடுவார்கள் என்ற பயம். இப்படி நிறைய இருக்கும்.

ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?

பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு கார்ப்பரேட் ஃபிலிம் எடுத்த போது படத்தைத் தொகுத்துக் கொண்டிருந்த எடிட்டர் சொன்னார்: “எஃப்.சி.பி. தான் இனி மேல் எல்லாம். ஒரு கம்ப்யூட்டரும் இந்த சாஃப்ட்வேரும் வாங்கிப் போட்டா அந்தக் காசை மூணு பட எடிட்டிங்கில எடுத்துடலாம். தவிர சீரியல் ஒண்ணு கையில் இருந்தா ரொம்ப சேஃப். அஞ்சு லட்சம் ரூபாய் போதும். அதிகப் பட்சம் ஆறு மாசத்துல பெரிசா லாபம் பார்க்கலாம்!”

தொழில் ஆரம்பித்த பின்புதான் எப்படித் தடாலடியாக தொழில்நுட்பத்தின் விலை குறையும், படங்கள் உள்ளே வருவதில் எவ்வளவு சிக்கல், சீரியலில் பேமெண்ட் வாங்குவதில் எவ்வளவு தாமதம் என எல்லாம் தெரிந்தது. சொன்ன நண்பர் ஆறு மாதத்தில் கம்பி நீட்டிவிட்டார். கடைசியாக மொத்தத்தையும் பாதி விலைக்குக் கொடுத்து வெளியே வந்தேன்.

“என்ன சார் நீங்க போய் இப்படிப் பண்ணீட்டீங்க? என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?” என்று விஷயம் கேள்விப்பட்ட திரைப்படம் சார்ந்தவர்கள், ஒரு டஜன் பேராவது என்னிடம் கேட்டிருப்பார்கள். ஆனால், தொழில் தொடங்க நினைத்த போது யாரிடமும் ஆலோசனை கேட்கும் மனநிலை எனக்கு இல்லை.

பிறரிடம் ஆலோசனையோ உதவியோ கேட்கத் தயங்குபவர்கள் தொழிலில் ஜெயிப்பது சிரமம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x