Published : 16 Dec 2014 04:08 PM
Last Updated : 16 Dec 2014 04:08 PM
போர்ச்சுகீசியர்களின் பிடியில் 450 ஆண்டுகளாக இன்றைய கோவா மாநிலம் இருந்தது. 1812-1815 காலகட்டத்தில் கோவா ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. 1961, டிசம்பர் 17-ல் இந்தியாவோடு இணைந்தது. ஆங்கிலேயர்களிடமிருந்து 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் போர்ச்சுகல் கோவா மாநிலத்தில் இருந்து வெளியேற மறுத்தது.
இந்திய இராணுவம் 1961 டிசம்பர் 12-ல் ஆப்ரேஷன் விஜய் எனும் நடவடிக்கையால் கோவாவையும் , டாமன் மற்றும் டையூ தீவுகளையும் கைப்பற்றியது. 1987 மே 30-ல் கோவா இந்தியாவின் 25-வது மாநிலமாகியது. டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களாக தொடர்கின்றன.
இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பழமையான பாறைகள் கோவாவில் கண்டறியப்பட்டுள்ளன. 360 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கடினப்பாறைகள் என அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. கோவா தன் பரப்பில் 56.6% பகுதியில் காடுகளையும் மரங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் சிறிய மாநிலம். இந்தியாவில் மிகக்குறைந்த அளவில் பழங்குடியின மக்களை கொண்ட மாநிலம் எனும் தனித்தன்மைகள் கோவாவுக்கு உண்டு.
சுற்றுலாவே கோவாவின் முதல் தொழிலாகும். இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் 12% பேர் கோவா செல்கின்றனர். இந்தியாவின் மாநிலங்களில் கோவா வளமானது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள தனிநபர் வருமானத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக இங்கே உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT