Published : 26 Apr 2015 02:07 PM
Last Updated : 26 Apr 2015 02:07 PM

விஜய் அவார்ட்ஸ்: இளையராஜா ஏமாற்றம், சிவகார்த்திகேயன் பதிலடி மற்றும் பல!

நடப்பு ஆண்டின் 'விஜய் அவார்ட்ஸ்' நிகழ்ச்சி பெரும் சர்ச்சைகளையும், விடை தெரியா கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் பதிலடி:

நிறைய நிகழ்ச்சிகளில் எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்று சிவகார்த்திகேயனை முன்னிலைப்படுத்துவது விஜய் டிவி-யின் வாடிக்கை. கடந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை அழுததை மறுபடியும் மறுபடியும் போட்டு டிஆர்பி-யை எகிறவைத்தனர். ஆனால், இம்முறை சிவகார்த்திகேயன் பேசியதை அவர்களால் ஒளிபரப்ப முடியாது.

ஏனென்றால், "இந்நிகிழ்ச்சி அதிகாலை 2 மணி வரை போகும். குடிக்க தண்ணிக் கூட தரமாட்டார்கள். அடுத்த முறை வரும்போது எல்லாம் புளி சோறு, தக்காளி சோறு கட்டிக் கொண்டு வந்துவிடுங்கள்" என்று மேடையில் பேசினார் சிவகார்த்திகேயன்.

எப்போதுமே விஜய் அவார்ட்ஸ் என்றால், சிவகார்த்திகேயன் முதல் ஆளாக வந்து இறுதிவரை இருந்து சிறப்பிப்பார். ஆனால், துல்கர் சல்மானுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருது (வாயை மூடி பேசவும்) கொடுத்து முடித்தவுடன், எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

நிகழ்ச்சி முடியும்வரை அவரை காண முடியவில்லை. மேலும், 'ரஜினி முருகன்' படத்தின் பர்ஸ்ட் லுக், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில்தான் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் வெளியிடவில்லை. மாறாக ட்விட்டர் தளத்தில் 6 மணிக்கே வெளியிட்டு விட்டார்கள்.

விருது வாங்காமல் வெளியேறிய இளையராஜா

எப்போதுமே பெரும்பாலான விருது வழங்கும் நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்வதில்லை. ஆனால், 'செவாலியே சிவாஜி கணேசன் விருது' வழங்குகிறோம் என்று பல தரப்பட்ட முயற்சிக்கு பிறகு இளையராஜா அழைத்து வந்தார்கள். "வந்தால் ஒரு மணி நேரம்தான் இருப்பேன். விருது வாங்கிவிட்டு கிளம்பிவிடுவேன்" என்று கூறிவிட்டுதான் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால், அவர் வந்த சமயத்தில் அவ்விருது வழங்குவதற்கு சிவாஜி குடும்பத்தினர் மற்றும் பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. இதனால் சிறிது நேரம் அமர்ந்திருந்த இளையராஜா, விருது வாங்காமலே கிளம்பிவிட்டார். இறுதிவரை சிவாஜி குடும்பத்தினர் இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. யாருக்கு இந்த வருடம் செவாலியே சிவாஜி கணேசன் விருது என்பதையும் தேர்வுக்குழு அறிவிக்கக்கூடவில்லை.

எரிச்சலடைய வைத்த டி.டி

எப்போதுமே டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், அவரே பேசிக் கொண்டிருப்பார். அவருடன் உரையாடுபவர்கள் பேசுவதற்கு கொஞ்சமே நேரம் ஒதுக்குவார். நேற்றைய விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை கோபிநாத் மற்றும் டிடி தொகுத்து வழங்கினார்கள். அதிலும், ஒரு கட்டத்தில் டிடி என்ன பேசுகிறார் என்பது பலருக்கு புரியவே இல்லை. கே.எஸ்.ரவிகுமார் அதை மேடையிலேயே போட்டு உடைத்தார். ஸ்பெஷல் ஜூரி இன்னொவேஷன் விருதினை, கோச்சடையான் படத்துக்காக செளந்தர்யா ரஜினிகாந்த் சார்பில் பெற்றுக் கொண்டார் கே.எஸ்.ரவிகுமார்.

டிடி மைக்கில் எப்படி இருக்கிறீர்கள் என்றவுடன், நல்லா இருக்கேன் என்று பயங்கரமாக கத்தினார். உடனே, "முன்னாடி மைக் இருந்தாலே பேசுவது நல்ல சத்தமாக கேட்கும். முன்னாடி மைக் இருந்தாலும் கத்துவது டிடி மட்டும்தான்" என்றார். பல இடங்களில் அவர் என்ன பேசினார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

வழங்கப்படாத சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருது

வருடந்தோறும் சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருது என்பது விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பெரிய விருதாக கருதப்படுகிறது. இம்முறை அந்த விருது யாருக்கு என்பதை அறிவிக்கவே இல்லை. அதிலும், இம்முறை விஜய், கார்த்தி, சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. நடிகர்களில் கமல், தனுஷ் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஆர்யா, ஜெயம் ரவி இருவருமே கலந்து கொண்டாலும் பாதிலேயே வெளியேறிவிட்டார்கள். முன்னணி நடிகைகளில் ஹன்சிகா, லட்சுமி மேனன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

சுவாரசியமே இல்லாத விழா

கடந்த ஆண்டு ஷாருக்கான் - விஜய் இணைந்து நடனம், சிவகார்த்திகேயன் அழுதது, விஜய் சேதுபதி - நயன்தாரா காமெடி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இருந்தன. இந்தாண்டு கமல் - ஸ்ருதிஹாசன், குஷ்பு - ஹன்சிகா இணைந்து நடனமாடிய சிறு நடனம், சிவகார்த்திகேயன் - துல்கர் சல்மான் விருது கொடுத்தது போன்ற சின்ன விஷயங்களைத் தவிர வேறு எந்த ஒரு சுவாரசியமே இல்லாத விழாவாக அமைந்தது.

அதிலும் பிரபுதேவா, லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், பூஜா குமார் ஆகியோர் நடனமாடினார்கள். சில நடிகர்கள் மேடையிலேயே, என்ன இன்னும் ஃபுட்டேஜ் போதவில்லையே என்று கலாய்த்ததும் அரங்கேறியது. குறிப்பாக, பல நடிகர்கள் பாதியிலேயே வெளியேறியதும் நடைபெற்றது. ஒரு குறுந்தகவல் - லட்சுமி மேனன் நடனமாட அழைக்கப்பட்ட போது மணி நள்ளிரவுக்குப் பின் 1 தான் மக்களே!

ஆச்சரிய ஒற்றுமை

தொலைக்காட்சி உரிமை கொடுத்த படத்துக்கு பெரும்பாலான விருதுகள் கிடைத்தது ஒரு ஆச்சரியமான ஒற்றுமை. 'குக்கூ', 'ஜிகர்தண்டா', 'காவியத்தலைவன்' உள்ளிட்ட படங்கள் விஜய் டி.வி இடம் உரிமை இருக்கிறது.

விருதுப் பட்டியல்:

லிங்கா படத்துக்காக ரஜினிக்கு ஃபேவரிட் நடிகர் விருது, வேலையில்லா பட்டதாரி படத்துக்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது, அதே படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது, விஜய் நடித்த கத்தி திரைப்படத்துக்கு ஃபேவரிட் படம் விருது, வேலையில்லா பட்டதாரி படத்தின் 'அம்மா அம்மா' பாடலுக்கு ஃபேவரிட் பாடல் விருது, கத்தி படத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஃபேவரிட் இயக்குநர் விருது, நடிகை ஹன்சிகாவுக்கு ஃபேவரிட் ஹீரோயின் விருது (மான் கராத்தே), சிறந்த பாடலாசிரியர் - கபிலன் (யான் படத்தில் இடம்பெற்ற 'ஆத்தங்கரை ஓரத்தில்' பாடல்)... இந்த விருதுப் பட்டியல் போதுமென்று நினைக்கிறேன்.

ட்விட்டரில் ரசிகர்கள் கலாய்ப்பும் கோபமும்:

விஜய் அவார்ட்ஸ் குறித்து ட்விட்டரில் உடனுக்குடன் ரசிகர்கள் தெறித்த நூற்றுக்கணக்கான கருத்துகளில் பலவும் >#RIPvijayawards என்ற ஹேஷ்டேகை தாங்கி வந்தது கவனிக்கத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x