Last Updated : 06 Feb, 2016 01:12 PM

 

Published : 06 Feb 2016 01:12 PM
Last Updated : 06 Feb 2016 01:12 PM

விசாரணையை வைத்து டரியல் ஆக்காதீர் தோழர்களே..!

சமூக வலைதளங்களில் கவனிக்கத்தக்க சினிமா, எழுத்து ஆர்வலர்கள் 'விசாரணை' பற்றி எழுதும்போது, 'அதிகார வர்க்கம், விளிம்புநிலை, கோட்பாடு, கட்டவிழ்த்தல், குரூரத்தின் நிஜ முகம், பரிணாமம், செரிமானம், குரலற்றவர்களின் குரல், மனித உரிமை மீறல், அத்துமீறல், சாமானியனின் மரண ஓலம், அதிகாரத் துஷ்பிரயோகம், அவதானிப்பு, அவனண்டர்வார்ப்பு...' என்பன போன்ற டரியல் மொழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் நல்லது. இதையெல்லாம் பார்த்துவிட்டு, "விடுங்கடா சாமி... இது நமக்கான படம் இல்லைடா"ன்னு பலரும் தெறிச்சி ஓடக் கூடும்.

அதேபோல், இந்தப் படத்தைப் பார்க்க தனி தைரியம் வேண்டும்; மன உறுதி வேண்டும்; இரும்பு நெஞ்சம் வேண்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்வதையும் நிறுத்துங்கப்பு. முக்கியமாக இந்தப் படத்தைப் பார்த்துட்டு நாலு நாள் தூங்கலை. பருத்திவீரன் கிளைமாக்ஸுக்கு அப்புறம் என்னை தூங்க விடாம பாதிச்ச படம் என்று போகிற போக்கில் உங்கள் சினிமா அறிவை வெளிப்படுத்த நினைக்காதீர்கள் நண்பர்களே!

தொண்டையில் வாய்வைத்துக்கு கடித்துக் குதறும் படக்காட்சிகளை டிவி பொட்டி முன்பு அமர்ந்து, நொறுக்குத் தீனையைக் கொறித்துக்கொண்டே குழந்தைகள் ரசிக்கும் வகையில் தமிழ் சினிமாவை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். செய்தித்தாள் தொடங்கி செய்தி சேனல் வரையில் அங்கிங்கெனாதபடி ரொம்ப ஈஸியா வன்முறைகளைக் கடந்து போகிற காலத்தில் இருக்கிறோம்.

சின்ன சின்ன செயல்களைக் கூட பேரன்பின் தரிசனம் என்று மிகைப்படுத்துவதும் வழக்கமாகிப் போய்விட்டது. உச்சபட்ச வன்முறை என்பது கழுத்தை நெறிப்பதும், குரல்வளையைக் கடிப்பதும், ரத்தம் சொட்டச் சொட்ட செத்த பிணத்தின் மீது தாக்குதல் நடத்துவதும் படத்தில் இமை கொட்டாமல் பார்ப்பது பழக்கமாகிப் போனது.

இந்த நிலையில், விசாரணை படத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வன்முறைக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது போலவும், இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம் என்று சொல்வது நகைமுரண்!

நிஜத்தில் தாங்கிக்கொள்ளவே முடியாத வன்முறைகளை அப்படியே ர்ராவாக பதிவு செய்யாமல், ப்யூர் சினிமாவுக்கே உரியவகையில், வன்முறைகளின் பாதிப்புகளை மட்டும் ரசிகர்களை உணரவைக்கிறது விசாரணை. ரத்தம் தெறிக்கும் ஓர் இடத்தைக் கூட கறுப்பு - வெள்ளையில் காட்டியதே இதற்கு மிகச் சிறந்த உதாரணம். வன்முறைக் காட்சிகளை அப்படியே பதிவு செய்வது சாதாரண படைப்பாளிகளின் திறமையை காட்டும். ஆனால், அந்த வன்முறை தரும் வலியை மட்டும் உணரச் செய்யும் வகையில் காட்சிகளை அமைப்பதுதான் அசாத்திய படைப்பாளியின் வல்லமை. அப்படி ஓர் அபார சினிமா படைப்பாளியான வெற்றி மாறனை கொண்டிருப்பது நமக்குப் பெருமை.

வன்முறைகளை முன்வைத்துப் பார்க்கும்போது, 15 வயதுக்கு மேற்பட்ட எவரும் தனியாக அரங்கில் பார்க்கக் கூடிய அளவில்தான் விசாரணை இருக்கிறது என்பது தெளிவு.

இப்படம் குறித்த அனுபவக் கருத்துகளைப் படிக்கிறபோது, இதுதான் காவல்துறையின் உண்மையான முகம் என்கிற ரீதியிலும் கருத்துகள் திணிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. நம் காவல்துறையினரின் இருண்ட பக்கம் மட்டும்தான் விசாரணை. மனித உயிர்களைக் காக்கும் மருத்துவத் துறையில் உள்ள இருண்ட பக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எது பயங்கரம் என்று விவாதிக்கத் தொடங்கினால் முடிவு எட்டப்படுதல் கடினமே.

இப்படி எல்லா துறைகளிலும் இருண்ட பக்கங்கள் உள்ளன. எல்லா மனிதர்களிடத்திலும் ஓர் இருண்ட பகுதி இருக்கின்றது. ஒரு தனி மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். தன் ரத்த பந்தங்களுக்கு மட்டுமே தெரியும், தன் உறவுகளுக்கு மட்டுமே தெரியும், தன் நண்பர்களுக்கு மட்டுமே, தன் சுற்றத்தாருக்கு மட்டுமே தெரியும் பக்கங்களுக்குடன் இருப்பார். அவருக்குள் உள்ள வக்கிரங்களும் இன்னபிற நெகட்டிவ்களும் அவரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிய எளிதில் வாய்ப்பில்லை. இத்தகைய ஓர் இருண்ட பக்கத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவரை முழுமையாக இப்படித்தான் என்று தீர்மானிப்பது எந்த வகையில் சரி என்பது விவாதிக்கத்தக்கது.

இதுபோலவே, காவல்துறையின் இருண்ட பக்கம் ஒன்றை விசாரணை வெளிச்சப்படுத்தியது என்பதற்காக, ஒட்டுமொத்த காவல்துறையினரின் உண்மை முகம் இதுமட்டுமே என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதும் சரியல்ல. ஏனென்றால், சென்னை போன்ற பெருநகரில் பெரிய அளவில் அச்சுறுத்தல் இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் போதுமான பாதுகாப்பு உணர்வுடன் பெரும்பாலான மக்கள் வாழ்வதற்கு காவல்துறையின் பங்களிப்பு என்பது மிகப் பெரியது என்று நம்புகிறேன்.

ஹரி, கவுதம் முதலானோர் படங்களில் வரும் போலீஸ் அதிகாரிகள்தான் காவல்துறையின் உண்மையான முகம் என்று 100 சதவீதம் நம்புவது எவ்வளவு அபத்தமோ, அதற்கு இணையானதுதான் விசாரணையில் காட்டப்பட்ட காவல்துறையினர்தான் காவல்துறையின் 100 சதவீத உண்மை முகம் என்பதும்.

அதேநேரத்தில், நாம் சம்பந்தப்பட்டிருப்பதால், நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய காவல்துறையின் இருண்ட பக்கத்தை நேர்மையாகவும் நேர்த்தியாகவும் காட்டிய வகையில் இங்கே விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.

*

படப்பிடிப்பில் தொலைந்து போகும் என் படங்களை அடையாளம் காட்டும் படத்தொகுப்பாளர் கிஷோருக்கு இப்படம் சமர்ப்பணம் என்ற வாசகத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் கரவொலி எழுப்பி வெற்றி மாறனின் நேர்மையை அங்கீகரித்தது முதல் காரணம்.

பெரிய ஜாம்பவான்கள் கூட இந்தப் படத்தின் தழுவல் என்பதை திரையில் சொல்ல மறுக்கின்றனர். இன்னும் சிலர் நன்றி கார்டுடன் சேர்த்து ரசிகர்கள் உள்வாங்காத 2-3 நொடிகளில் கிரெடிட் கொடுப்பதாக தகிடுதத்தம் செய்கின்றனர். ஆனால், வெற்றி மாறன் அந்த சின்னப்புள்ளத்தனத்தை செய்யவே இல்லை.

சந்திரகுமாரின் லாக்கப் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்று ரசிகர்கள் உள்வாங்கும் வரை சில நொடிகள் திரையில் தெரியவைத்தார். மூலக்கதை சந்திரகுமார் என்று கிரெடிட் கொடுத்தார். இதனாலேயே வெற்றி மாறன் மீதான மரியாதையை அதிகரிக்க ரசிகர்கள் கரவொலி எழுப்பினர். இது அடுத்த காரணம்.

தன் படைப்புக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார் வெற்றி மாறன். அதனால்தான் படம் முடிந்த பிறகும் எழுத்தாளரின் குரலை பதிவு செய்திருக்கிறார்.

''கோட்டாவுல வந்தவன் சிஸ்டம் புரியாம தொல்லை பண்றான்''

''அப்ஸ்ல-னா அல்கொய்தாவா? ஐஎஸ்ஐஎஸ்-ஆ?''

''தமிழ்னா எல்டிடியா?''

வசனங்கள் மூலம் மற்றவர்களின் பொதுப்புத்தி அடிப்படையிலான சந்தேகப் பார்வையைப் புரிய வைக்கிறார்.

ரஜினிமுருகன் போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்த டம்மி வில்லன் சமுத்திரக்கனி நடிகனாக ஆக்கிரமிக்கிறார். தினேஷ், கிஷோர், முருகதாஸ் போன்ற நடிகர்களின் ஆளுமையை உணரமுடிகிறது.

இப்படி பல காரணங்களை பட்டியலிடுவதை விட படம் பார்த்து நீங்கள் தமிழ் சினிமாவின் வலிமையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த எளியவனின் வேண்டுகோள்.

இன்னொரு முக்கிய கோரிக்கை: பாலு மகேந்திராவின் ஆன்மா வெற்றி மாறனை வழிநடத்துகிறது. நல்ல சினிமாவை பாலு மகேந்திரா வெற்றி மாறன் மனதில் விதைத்துச் சென்றிருக்கிறார் என்றெல்லாம் ஆராதிப்பது வெற்றி மாறனின் தொழில் பக்தியை கூறு போடுவதுதான். படைப்பாளியை எந்த ஒப்பீடும் இல்லாமல் கொண்டாடுவதே அவருக்கும், படத்துக்கும் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

*

மொத்தத்தில், விசாரணை... குறியீடுகள் குதறித்தள்ளத்தக்க வகையிலான எந்த பேரறிவும் அவசியம் இன்றி எடுக்கப்பட்ட தமிழின் பெருமித சினிமா.

இப்படிப்பட்ட எளிமையானதும் உருப்படியானதுமான படத்தைப் பற்றி டரியல் மொழிகளிலும் எழுதுவதும், இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட படைப்பு என்பதால் ஸ்டாரும் மார்க்கும் தரமாட்டேன் என்று அடம்பிடிப்பதும், உலகத் தரம் என்ற சொல்லுக்கு புது புது அர்த்தங்கள் புகுத்தி 'ஃபெஸ்டிவல் சினிமா' என்று முத்திரைக் குத்துவது முதலான மேதமை அணுகுமுறைகள், இந்தப் படத்தை சாதாரண மனிதர்களிடம் இருந்து விலகவைத்துவிடும் என்பதே நான் கொண்டிருக்கும் டரியல்.

உண்மையில், சாதாரண மனிதர்களைப் பற்றிய சாதாரண மனிதர்களுக்காகவும் எடுக்கப்பட்ட அசாதாரண படைப்புதான் இந்த விசாரணை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x