Published : 21 Dec 2014 09:48 AM
Last Updated : 21 Dec 2014 09:48 AM

ரஜினியை சந்தித்து முறையிட விநியோகஸ்தர்கள் முடிவு

‘லிங்கா’ திரைப்படம் சரியாக வசூலா காததைத் தொடர்ந்து ரஜினியை சந்தித்து முறையிட விநியோகஸ்தர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட விநியோகஸ்தர்கள் நேற்று மாலை ஒரு மனுவைக் கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ திரைப்படத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வெளியிட்டுள்ளோம். ஆனால் சரியாக வசூலாகவில்லை. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவில் இத்திரைப்படத்தை ரூ.4.20 கோடி கொடுத்து வாங்கினோம். ஆனால் இதுவரை ரூ.1.50 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இதே நிலைமைதான், பல ஏரியாக்களில் நிலவுகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் எங்களை நெருக்குகின்றனர்.

இதுதொடர்பாக 22-ம் தேதி (நாளை) ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம். அன்றைய தினம் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பலர் வருகின்றனர். அதனால் உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x