Published : 26 Oct 2016 06:12 PM
Last Updated : 26 Oct 2016 06:12 PM
'காஷ்மோரா' படத்தைப் போலவே, தனக்கு ஏற்பட்ட ஒரு ப்ளாக் மேஜிக் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் கார்த்தி.
கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காஷ்மோரா'. பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார். அக்டோபர் 28-ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
ப்ளாக் மேஜிக், வரலாற்றுக் கதை, பேய் என பல தளங்களில் பயணிக்கும் கதையில் நாயகனாக நடித்திருக்கிறார் கார்த்தி. இப்படத்தை விளம்பரப்படுத்தும் போது தனக்கு ஏற்பட்ட ப்ளாக் மேஜிக் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் கார்த்தி.
"எனக்கு சிறுவயதில் இருந்தே பேய் படங்கள் ரொம்பப் பிடிக்கும். நண்பர்களுடன் பேசும்போது கூட நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டு இருக்கிறேன். வீட்டுக்கு ஒரு முறை ப்ளாக் மேஜிக் பண்ணுபவர் வந்திருந்தார். அப்போது நானும், அம்மாவும் மட்டும் தான் இருந்தோம்.
"இந்த வீட்டில் ஏதோ தப்பு இருக்கிறது, நான் சரி செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு வீட்டிலிருக்கும் பிள்ளையார் சிலையை எடுத்துவரச் சொன்னார். அந்த சிலையை கண்முன் வைத்து, அதைப் பார்த்து பேசிக் கொண்டே இருந்தார். திடீரென அந்தச் சிலை சுற்றியது.
அது ஒரு வெள்ளி பிள்ளையார். நான் ஒரு பொறியாளர் மாணவன், அதனை காந்தம் கொண்டு எல்லாம் சுற்ற வைக்க முடியாது என்பது தெரியும். நானும் எப்படி சுற்றுகிறது என யோசித்தேன். சில நேரம் சாமிக் கும்பிட்டார். எனக்கு அருகில் ஒரு குடத்தில் தண்ணீர் இருந்தது. அந்த குடத்துக்குள் கையைவிட்டு ஒரு தகடு எடுத்தார். "யாரோ உங்களுக்கு வேண்டாதவர்கள் வைத்திருக்கிறார்கள்" என எடுத்துக் கொண்டு போய்விட்டார்.
காசு கொடுத்தாலும் வாங்க மறுத்துவிட்டார். இறுதியில் 1000 ரூபாய் கொடுத்து அனுப்பினோம். எனக்கு இதே போன்று ப்ளாக் மேஜிக் அனுபவங்கள் இருக்கின்றன என்பதால் சொல்கிறேன்" என்று தன்னுடைய ப்ளாக் மேஜிக் அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார் கார்த்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT