Last Updated : 27 Nov, 2014 05:11 PM

 

Published : 27 Nov 2014 05:11 PM
Last Updated : 27 Nov 2014 05:11 PM

திகார் போல் இந்திய சிறைகள் மாறினால் அமைதி நோபல் உறுதி: கிரண் பேடி

திகார் சிறை போல இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் மாறினால், இந்திய சிறைத் துறைக்கு அமைத்திக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று சென்னையில் கிரண் பேடி பேசினார்.

பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'திகார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

கிரண்பேடி படத்தின் இசையை வெளியிட, வ.உ.சி.யின் பேரன் சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், 'பவர் ஸ்டார்' சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்றார்கள்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரண் பேடி பேசியது:

" 'திகார்' என்ற வார்த்தையை படத்திற்கு தலைப்பாக வைத்த பின் எப்படி இந்த நிகழ்ச்சிக்கு வர மறுக்க முடியும். இங்கே திகாரில் நடந்த ஒரு சின்ன விஷயத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

9 மாதங்கள் எந்தவிதமான பதவியும் இல்லாமல் இருந்தேன். அந்த காலகட்டம் முழுக்க சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டிருந்தேன். ஏன் வேலை கொடுக்கவில்லை என்று உரிய அலுவலரிடம் கேட்டபோது வேறு வழியில்லாமல் எனக்கு 'திகார்' சிறைச்சாலை பணியில் அமர்த்தினார்கள். அதுவும் அந்த சிறைக்கு யாரும் போக மறுத்ததால் நான் பொறுப்பு ஏற்றுக்கொண்டு போக நேர்ந்தது.

என்னோட நண்பர்கள் பலரும் அங்கு போக வேண்டாம். அந்த பணியை வீட்டிலிருந்தே செய்யலாம் என்று ஆலோசனை கூறினர். திகார் பற்றிய குறையாக பார்த்த நேரத்தில் நான் அங்கு மனிதத்தை மட்டுமே பார்த்தேன். அங்கிருந்த நிலையை பார்த்து, அங்கிருந்தவர்களுக்கு சரியான வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று தோணியது. அந்த இடத்தை ஒரு மருத்துவமனையாகவே பார்த்தேன்.

திகார் பற்றி 'இட்ஸ் ஆல்வேஸ் பாசிபில்' என்ற புத்தகத்தை நான் எழுதியுள்ளேன். திரைத்துறையினர் அதை படமாக்க கேட்டுள்ளனர். அப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே படமாக எடுத்தால் கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும். இத்தாலி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நாடுகளில் அது பாட புத்தகமாக உள்ளது.

இந்த நூல் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தம்தான். அதை படமாக எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை சிறைச்சாலை சார்ந்த ஆசிரமக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. அங்குள்ள 10,000 கைதிகளில், 3000 க்கும் மேற்பட்டவர்கள் படிக்காதவர்கள். அங்கே ஆசிரியர்கள் கிடையாது. கல்வி இல்லாத இடத்தில் எந்தவித மாற்றமும் நிகழாது. அங்கு பணியாற்றிய நாட்களில் படித்த கைதிகளையே ஆசிரியர்களாக மாற்றினோம்.

தமிழ் மட்டுமே தெரிந்த பல கைதிகள் அங்கு படித்து ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் எல்லாம் கற்றனர். கைதிகளே ஆசிரியர்களாக மாறிய நிலை திகார் சிறைச்சாலையில் நடந்தது. காலை 9 மணி முதல் 11 மணி வரைக்கும் பாடம் கற்கும் நேரமாக உருவாக்கினோம்.

இந்த முயற்சி இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலைக்கும் சாத்தியமானது. இதை சாத்தியப்படுத்துனால் இந்தியாவை முதல் தர நாடு என்ற பட்டியலில் கொண்டு வர முடியும். அங்கு வேலை பார்த்த நாட்களில் மட்டுமில்லாமல் இப்போதும் அங்கே கல்வி சேவையோடு என்னை இணைத்துக்கொண்டே வருகிறேன். அதற்காகவே, நான் தொடங்கின 'இந்தியா விஷன் பவுண்டேஷன்' நிறுவனம் மூலம் பலருக்கும் உதவி செய்து வருகிறோம். இதன் துணையோடு செயல்பட்டு வரும் பள்ளி இங்கு இன்றும் நடந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டு கால உழைப்பில் அங்கு கைதிகளாக இருந்து படிக்கத்தொடங்கிய பலரும் இப்போது பட்டப்படிப்பு வரைக்கும் முடித்திருக்கிறார்கள். இது கடந்த 20 ஆண்டுகால உழைப்பு. திகார் சிறை போல, இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் மாற வேண்டும். அவ்வாறு மாறினால் இந்திய சிறைத் துறைக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

'திகார்' என்றால் வன்முறை என்பது திரையில் மட்டும்தான். ஆனால் அங்கு வன்முறை இல்லை. இது போன்ற படத்தை எடுப்பது கடினமான விஷயம். இந்த கடின உழைப்பை பாராட்டுகிறேன். பாலிவுட்டிற்கு பிறகு கோலிவுட் பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று கிரண் பேடி பேசினார்.

பார்த்திபன் உறுதி

கிரண் பேடி பேசி முடித்தவுடன், நடிகர் பார்த்திபன் உடனடியாக 'இட்ஸ் ஆல்வேஸ் பாசிபில்' புத்தகத்தின் தமிழாக்கம் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். கிரண் பேடியும் உங்களுக்கு புத்தகம் ஒன்றை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x