Last Updated : 26 Feb, 2015 03:29 PM

 

Published : 26 Feb 2015 03:29 PM
Last Updated : 26 Feb 2015 03:29 PM

தனுஷ் பாராட்டில் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்

'காக்கி சட்டை' படத்தைப் பார்த்துவிட்டு, "நல்லா பண்ணியிருக்கீங்க சிவா" என்று சிவகார்த்திகேயனைப் பாராட்டி இருக்கிறார் தனுஷ்.

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'காக்கி சட்டை' திரைப்படம் பிப்ரவரி நாளை வெளியாகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

தனுஷ் - சிவகார்த்திகேயன் இருவருக்கும் மோதல், சிவகார்த்திகேயனைப் பார்த்தவுடன் தனுஷ் எழுந்து போய்விட்டார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், >தனுஷ் - சிவகார்த்திகேயன் நட்பில் முதிர்ச்சியே... விரிசல் அல்ல என்று அவர்களது நண்பர் அனிருத் விளக்கம் தந்தார்.

இந்நிலையில், 'காக்கி சட்டை' படத்தைப் பார்த்துவிட்டு, சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டி இருக்கிறார் தனுஷ். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறியிருப்பது:

"'காக்கி சட்டை' பார்த்துவிட்டு நல்லா பண்ணியிருக்கீங்க சிவா, நடிப்பில் நிறைய முன்னேற்றங்கள் இருக்கிறது என்று தனுஷ் சார் பாராட்டினார். 'எதிர் நீச்சல்' பிறகு இப்போது தான் என் படத்தை பார்க்கிறார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மான் கராத்தே' இரண்டையும் தனுஷ் பார்க்கவில்லை. மும்பையில் இந்தி படப்பிடிப்பில் இருந்தார்.

எங்களுக்குள் முன்னாடி இருந்த நட்பு இப்போதும் அப்படியே இருக்கிறது. இப்ப்படத்தின் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது கூட அவருக்கு தெரியாது. முதல் நாள் பூஜை மற்றும் இப்போது படம் பார்த்திருக்கிறார். அவ்வளவு தான். ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு வரவில்லை. 'எதிர் நீச்சல்' பண்ணிய குழு, அதனால் எனக்கு கவலையில்லை என்று எப்போதும் சொல்வார்.

தனுஷ் சார் விஷயத்தில் எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இதற்கு மேல் என்ன பண்ண வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை.

என்னுடைய நட்பிற்குள் விரிசல் இல்லை என்று சொல்வது என் கடமை. ஜெமினி பாலத்துக்கு நடுவில் நின்று இருவரும் இணைந்து நடனமாடினால் மட்டுமே நம்புவார்கள் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x