Last Updated : 25 Oct, 2016 06:05 PM

 

Published : 25 Oct 2016 06:05 PM
Last Updated : 25 Oct 2016 06:05 PM

சிவகார்த்திகேயன் விவகாரம்: முன்னணி நடிகர்களுடன் ஆலோசிக்க நடிகர் சங்கம் திட்டம்

நடிகர்களின் பிரச்சினைகள் தொடர்பாக முன்னணி நடிகர்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பொதுவாக ஒரு முடிவு எடுக்க நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

'ரெமோ' படத்தின் நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் "நான் உங்களிடம் உதவிகள் கேட்கவில்லை. எங்களை வேலை செய்ய விடுங்கள் என்று தான் கேட்கிறோம்" என்று கண்ணீர் மல்க பேசினார்.

சிவகார்த்திகேயனின் பேச்சு திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தென்னிந்திய நடிகர் செயலாளர் விஷால் மற்றும் சிம்பு உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். மேலும், தாங்களும் மிரட்டப்பட்டதாகவும் கூறினார்கள்.

விஷாலின் பேச்சுக்கு, பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "கட்டப் பஞ்சாயத்து என்ற வார்த்தை மிகவும் தவறு. படங்கள் வெளியாக எங்களால் முடிந்தளவுக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறோம். யாரையும் நாங்கள் மிரட்டவில்லை" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, "சிவகார்த்திகேயன் பிரச்சினை குறித்து புகார் வந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பாக அனைத்து நடிகர்களுடன் கலந்து பேசி பொதுவாக ஒரு திட்டம் வகுக்க இருக்கிறோம். இப்பேச்சுவார்த்தையில் அனைத்து முன்னணி நடிகர்களின் கருத்துக்களும் இடம்பெறும். வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் எழாத வகையில் தான் எங்களுடைய திட்டம் இருக்கும். இப்போதைக்கு மட்டும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களுடைய பேச்சுவார்த்தை இருக்காது" என்று குறிப்பிட்டார்கள்.

மேலும், நவம்பர் 27-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற இருக்கிறது. அதற்குள் இப்பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x