Last Updated : 21 Jun, 2017 06:44 PM

 

Published : 21 Jun 2017 06:44 PM
Last Updated : 21 Jun 2017 06:44 PM

எந்தக் கதையிலும் கதாபாத்திரத்தின் வலிமையே முக்கியம்: ஆதி

எந்த ஒரு கதையிலும் என்னுடைய கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என்பது தான் முக்கியம் என்று ஆதி தெரிவித்துள்ளார்.

ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், ராமதாஸ், அருண்ராஜா காமராஜ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மரகத நாணயம்'. ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

'மரகத நாணயம்' படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து ஆதி, "’மரகத நாணயம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தின் இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போது இக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையில் அனைவருக்கும் முக்கியத்துவம் இருந்தது.

'மரகத நாணயம்' பொறுத்தவரை கதைதான் ஹீரோ. முனிஸ்காந்த் மற்றும் டேனியல் முதுகெலும்பாக இருந்து படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள் என்று சொல்வேன். அருண்ராஜா காமராஜ் , நிக்கி கல்ரானி ஆகியோரின் கதாபாத்திரம் மற்றும் அவர்களுடைய நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பின் போதே இயக்குநர் சில காட்சிகளை எடுக்கும் போது இந்தக் காட்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் கை தட்டல் வாங்கும், இங்கே நிறைய சிரிப்பார்கள் என்று உறுதியாகக் கூறினார். அப்போது இயக்குநர் எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறார் என்று யோசித்து இருக்கிறேன். இயக்குநர் சொன்னது போலவே திரையரங்கில் ரசிகர்களோடு படத்தை பார்க்கும் போது அவர்கள் அனைவரும் அக்காட்சிகளை கைதட்டி , சிரித்து ரசிக்கிறார்கள்.

அடுத்ததாக தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கி வருகிறோம். விரைவில் அப்படம் குறித்து முறையாக அறிவிப்போம். தெலுங்கில் நடிகர் ராம் சரணுடன் 'ரங்கஸ்தளம் 1985' என்ற படத்தில் நடித்து வருகிறேன். அடுத்ததாக நானியுடன் 'நின்னு கோரி' என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

வில்லன் கதாபத்திரமோ அல்லது இரண்டு நாயகர்களுடன் நடிப்பதிலோ எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. எந்த ஒரு கதையிலும் என்னுடைய கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என்பது தான் முக்கியம். தெலுங்கை விட தமிழ் படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகிறேன். ஏனென்றால் தமிழ் நாட்டில் தான் படித்து வளர்ந்தேன். இங்கே வெளியாகும் அனைத்து படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து வளர்ந்துள்ளேன். அதனால் எனக்கு தமிழ் எளிதாகவும் , மனதுக்கு நெருக்கமாகவும் உள்ளது.

எல்லோரும் கல்யாணம் எப்போது என்று கேட்கிறார்கள்?. கல்யாணம் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது , வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக வீட்டில் பார்க்கும் பெண்ணைதான் கல்யாணம் பண்ண உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் ஆதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x