Published : 23 Jul 2016 02:10 PM
Last Updated : 23 Jul 2016 02:10 PM
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்காக அக்ஷரா ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு.
'வீரம்', 'வேதாளம்' படக் கூட்டணியான அஜித் - சிவா இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார். வில்லனாக நடிப்பதற்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. ஆனால், யாரும் இன்னும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் துவங்க இருக்கிறது. மேலும், இப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்துக்காக ரித்திகா சிங், சாய் பல்லவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. ஆனால், தேதிகள் பிரச்சினை காரணமாக இருவருமே விலக, தற்போது கமலின் மகள் அக்ஷரா ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
'ஷமிதாப்' படத்தின் மூலமாக இந்தி திரையுலகில் அறிமுகமான அக்ஷரா ஹாசன் தமிழில் உதவி இயக்குநராக 'சபாஷ் நாயுடு' படத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இப்படத்தில் ஒப்பந்தமாவாரா என்பது விரைவில் தெரியவரும் என்கிறது படக்குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT