Published : 16 Jul 2018 07:23 PM
Last Updated : 16 Jul 2018 07:23 PM

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை மனதார ஏற்றுக்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி: கார்த்தி

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை மனதார ஏற்றுக்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார் கார்த்தி.

கார்த்தி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், ‘வனமகன்’ சயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். சத்யராஜ், விஜி சந்திரசேகர், பானுப்ரியா, பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

குடும்ப உறவுகளை மையமாக வைத்து ஃபேமிலி எண்டெர்டெயினராக வெளிவந்துள்ள இந்தப் படம், பெரும்பாலானவர்களுக்குப் பிடித்திருக்கிறது. குடும்பத்துடன் திரையரங்குக்குச் சென்று படத்தைப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், ‘படத்தை ஏற்றுக்கொண்ட குடும்பங்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார் கார்த்தி.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “’கடைக்குட்டி சிங்கம்’ படத்தை எல்லாரும் குடும்பத்துடன் சென்று பார்த்து வருகின்றனர். எல்லாரும் சந்தோஷமாக இருக்கின்றனர். அதைப் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. எல்லோரும் குடும்பங்களைக் கொண்டாடுங்கள்.

குறை, நிறைகள் இருக்கத்தான் செய்யும். எல்லாரையும் அரவணைத்துப் போய், எல்லாரும் ஒண்ணா இருப்போம். இதுதான் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவின் வேண்டுகோளாக இருந்தது. நீண்ட நாட்களாகப் பேசாத தம்பியுடன் படத்தைப் பார்த்தபிறகு பேசியதாக ஒருவர் மெசேஜ் அனுப்பியிருந்தார். கேட்கும்போதே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

இந்த சந்தோஷத்தைக் கொடுத்த உங்க எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள். அண்ணன் சூர்யாவுடன் சேர்ந்து பண்ண முதல் புராஜெக்ட் இது. அண்ணன் தான் இந்தப் படத்துக்குத் தயாரிப்பாளர். இரண்டு பேருக்கும் சேர்த்து இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x