Published : 16 Jul 2018 06:15 PM
Last Updated : 16 Jul 2018 06:15 PM
‘செக்கச் சிவந்த வானம்’ படத்துக்காக அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் நான்கு பேரும் இணைந்து மோதிய சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார்.
மல்ட்டி ஸ்டார் படமான இதில், அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ், மன்சூரலிகான், ஜெயசுதா, அப்பாணி சரத் ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
முன்னணி நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடிப்பதே அரிதாக இருக்கும் தமிழ் சினிமாவில், ஒன்றாக சண்டை போடுவது அரிதினும் அரிதான விஷயம். ஆனால், இந்தப் படத்துக்காக அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் நான்கு பேரும் இணைந்து ஒரு சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறார்கள். திலீப் சுப்பராயன் இந்த சண்டைக் காட்சியை வடிவமைத்துள்ளார்.
கடந்த மாதம் செர்பியாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT