Published : 14 Jun 2018 04:10 PM
Last Updated : 14 Jun 2018 04:10 PM

‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் ஜெயில்: இந்த முறை என்ன மாதிரியெல்லாம் தண்டனை இருக்கப் போகுதோ...

‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் தண்டனை கொடுப்பதற்காக ஜெயில் செட் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தென்னிந்தியாவுக்கு அறிமுகமான ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. நான்கு மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 19 பேர் கலந்துகொண்ட இதில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், வருகிற 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். 14 பிரபலங்கள், 60 கேமராக்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதற்காக ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் ‘பிக் பாஸ்’ வீடு செட் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் சீஸனில், போட்டிகளில் தோற்றவருக்குத் தண்டனையாக அவர்மீது முட்டையை உடைத்து ஊற்றுவது, அரிசி மாவை ஊற்றுவது, மிளகாய்ப்பொடியைக் கரைத்து ஊற்றுவது, நீச்சல் குளத்துக்குள் தள்ளி விடுவது போன்றவை இருந்தன. ஆனால், இந்த முறை தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும் போலிருக்கிறது.

காரணம், இந்த முறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் ஜெயில் செட்டும் போடப்பட்டுள்ளது. அதற்குள் இரும்பாலான ஒரு கட்டில் மற்றும் மேஜை, விளக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜெயில் தண்டனைக்கு உள்ளாகுபவர்கள், மெத்தை, தலையணை, போர்வை, ஏசி என எதுவுமே இல்லாமல் வெறும் கட்டிலில்தான் தூங்க வேண்டும்.

யார் யார் இந்தத் தண்டனைக்கு உள்ளாகின்றனர், எந்தப் போட்டியில் தோற்றவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x