Published : 17 May 2018 08:03 PM
Last Updated : 17 May 2018 08:03 PM

என் படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள்: விஷால்

தயாரிப்பாளர் சங்கத் தலைவரான என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் என்று 'இரும்புத்திரை' பட வெற்றி விழாவில் விஷால் பேசினார்.

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மித்ரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் 'இரும்புத்திரை'. விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

டிஜிட்டல் இந்தியாவின் அறியாமை, ஆபத்து என இரண்டையும் சொன்ன விதத்தில் இரும்புத்திரை முக்கியமான படமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால், அர்ஜுன், இயக்குநர் மித்ரன், எடிட்டர் ரூபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் விஷால் பேசியதாவது:

'' 'இரும்புத்திரை' படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் வங்கி ஏஜெண்டாக நடித்த சக நடிகரை அடித்தேவிட்டேன். படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமானால் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு விஷயத்தை இன்று அவர் உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது.

இந்தப் படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போதுதான் எனக்கு தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட் காரை விற்று எனக்கு பணம் கொடுத்தார். இன்னொரு நண்பன் பத்திரத்தை விற்றுப் பணம் கொடுத்தார். ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை எனக்கு இது போல் நடந்தது இல்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவரான என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று தான். ஒரு தயாரிப்பாளர் சங்கத் தலைவரின் படத்தையே தடுத்துவிட்டோம் என்று காட்ட முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் உள்ள ஆதார் அட்டை சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கக் கோரி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும். தியேட்டர் அருகே போராடாமல் வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால் யாருக்கும் இடைஞ்சல் வராது.

ஆர்யா தான் இதில் வில்லனாக நடிக்கவேண்டியது. அப்போது இருந்த வெர்ஷனே வேறு. இப்போது அர்ஜுன் சார் நடித்துள்ள இந்த கதாபாத்திரம் நல்ல பெயரைப் பெற்றுள்ளது. படம் வெளியாக எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கு நன்றி''.

இவ்வாறு விஷால் பேசினார்.

விஷால் யாரைக் குறிப்பிட்டுப் பேசினார் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x