Published : 09 May 2018 03:18 PM
Last Updated : 09 May 2018 03:18 PM

‘கற்றவை பற்றவை’ பாடலுக்கு வசனம் எழுதிய ரஜினிகாந்த்

‘காலா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கற்றவை பற்றவை’ பாடலுக்கு ரஜினிகாந்த் வசனம் எழுதியுள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று மாலை சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. ஆனால், இன்று காலை 9 மணிக்கே பாடல்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கற்றவை பற்றவை’ பாடலை அருண்ராஜா காமராஜ், கபிலன், ரோஷன் ஜாம்ராக் ஆகிய மூவரும் இணைந்து எழுதியுள்ளனர். அத்துடன், கூடுதல் வசனங்களை ரஜினியே எழுதியுள்ளார். ரஜினி இவ்வாறு எழுதுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை யோகி பி, அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஜாம்ராக் மூவரும் இணைந்து பாடியுள்ளனர்.

‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலின் இடையிடையே இடம்பெறும் வசனங்களை, ரஜினி பேசியிருப்பார். அதற்கு முன், ‘கோச்சடையான்’ படத்தில் இடம்பெற்ற ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ பாடலிலும் இடம்பெறும் வசனங்களையும் ரஜினி பேசியிருப்பார். ‘மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘அடிக்குது குளிரு...’ பாடல் தான் ரஜினி பாடிய முதல் பாடலாகும்.

இப்படி பாடலில் இடம்பெற்ற வசனங்களைப் பேசிய ரஜினி, முதன்முறையாக ஒரு பாடலுக்கு வசனம் எழுதியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ‘தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம்’ என இதைக் கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

‘காலா’ படத்தில் ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, நானா படேகர், அஞ்சலி பட்டேல், சாக்‌ஷி அகர்வால், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மும்பையின் தாராவியில் வசிக்கும் தமிழர்களைப் பற்றி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. ஜூன் மாதம் 7ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x