Published : 09 May 2018 09:05 AM
Last Updated : 09 May 2018 09:05 AM

இயக்குநர் மகேந்திரனுடன் நடித்தது என் பாக்கியம்: நடிகர் அருள்நிதி நேர்காணல்

யக்குநர் மு.மாறன், ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ கதையை சுமார் 4 மணி நேரம் ஒவ்வொரு காட்சியாக எனக்கு விளக்கினார். அவர் கதை சொல்லும்போதே, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை அப்படியே திரையிலும் கொண்டு வந்திருக்கார். கொஞ்சம்கூட ஊகிக்க முடியாத திருப்பங்கள்தான் இந்தப் படத்தின் ஸ்பெஷல்.. என்று ஆச்சரியத்துடன் பேசத் தொடங்கினார் அருள்நிதி. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ரிலீஸாக உள்ள மகிழ்ச்சியுடன், தற்போது ‘புகழேந்தி எனும் நான்’ என்ற படத்தில் நடித்துவரும் அவருடன் ஒரு நேர்காணல்..

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ டிரெய்லர் பார்த்தால், நீங்கள் பல கதாபாத்திரங்களில் ஒன்றாக இருப்பதுபோல தெரிகிறதே.

என் படங்கள் அனைத்திலுமே, அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். ‘மெளனகுரு’ படத்தில் ஜான்விஜய், உமா ரியாஸ், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தில் சிங்கம்புலி அண்ணன் தான் ஹீரோவே. கதையாதான் படத்தைப் பார்ப்பேனே தவிர, என் கேரக்டர் எந்த அளவு இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை. படம் வெற்றி அடையணும்; நல்ல படம்னு பேர் வாங்கணும்.

குறைவாகவே படங்கள் ஒப்புக்கொள்கிறீ்ர்களே.

நான் நடிகனாகி சுமார் 8 வருஷம் ஆகப்போகிறது. ஒவ்வொரு படமும் ரொம்ப பார்த்துப் பார்த்து தேர்வு செய்து நடிக்கிறேன். ‘ஏன் அவரோட படம் பண்ணல?’ என்ற கேள்விகள்கூட அப்பப்போ எழும். நல்ல கதையாக தேர்வு செய்து நடிப்பதுதான் என் வேலை. என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு படமும் முக்கியம். ஓடுகிற குதிரையில் நாம இருக்கணும், அவ்ளோதான்.

திரில்லர், காமெடி என எல்லா களத்திலும் நடித்துவிட்டீர்கள். எது கடினமாக இருக்கிறது?

களம் வெவ்வேறாக இருந்தாலும், இதுவரை நான் நடித்த அனைத்து படங்களிலுமே கதையை முன்னிலைப்படுத்தி தான் போயிருக்கேன். என் எல்லா படங்களிலுமே இயக்குநர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை உள்வாங்கிதான் பண்ணியிருக்கேன். 50 நாள் படப்பிடிப்பு என்றால், முதல் 2 நாள் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அப்புறம், இயக்குநரோடு பேசிப் பழகி நட்பாகிவிடுவேன். அதன் பிறகு, பணி எளிதாகிவிடும். எந்த கேரக்டரா இருந்தாலும் நடிப்பதுதான் என் வேலை, அதை செய்ய வைப்பது இயக்குநர்கள் தான்.

‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் இயக்குநர் மகேந்திரனுடன் நடித்த அனுபவம் பற்றி..

அவர் திரையுலகில் பெரிய உச்சம் தொட்ட ஜாம்பவான். அவரோடு நடித்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது என் பாக்கியம். புதுக்கோட்டையில் ஒருநாள் கடும் வெயிலில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. ரொம்ப களைச் சுப் போய்ட்டேன். அடுத்த நாள் ஓய்வு எடுத்துக்கொள்வதாக இயக்குநரிடம் கேட்டேன். அவரும் எடுத்துக்கோங்க என்று கூறிவிட்டார். இதற்கிடையில், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் இருந்தார் மகேந்திரன். அவரைப் பார்க்கச் சென்றபோது, ‘‘என்ன அருள்.. நாளைக்கு ஷுட்டிங் இருக்குல்ல. வந்துடறேன்” என்றார். வெயிலில் நடித்ததற்கு ஒருநாள் ஓய்வு கேட்டதை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. ஷுட்டிங் ஸ்பாட்டை விட்டு இங்கே அங்கே நகர மாட்டார். அங்கேயே நின்னுக்கிட்டு இருப்பார். அவர் காட்டும் ஈடுபாடு.. சான்ஸே இல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x